சாய்ந்தமருது

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

சாய்ந்தமருது (Saintamaruthu) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள உள்ள ஒரு ஊர். கிழக்கே வங்காள விரிகுடாவின் கடற்கரையினாலும் மேற்கே கல்முனைக்குடியினாலும் சூழ்ந்துள்ளது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வாழ்கின்றனர். அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் மருதம், நெய்தல் ஆகிய நிலத் திட்டியைக் கொண்டதாக சாய்ந்தமருது அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

சாய்ந்தமருது
Sainthamaruthu
மாநகரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிரதேச செயலகம்சாய்ந்தமருது
மக்கள்தொகை25,412
பிரதேச செயலர்அல்- முகம்மது சலீம்

சாய்ந்தமருது ஆரம்பத்தில் கல்முனை பிரதேச செயலகத்தின் ஒரு பிரிவாக இயங்கி வந்து, 2001 பெப்ரவரி 4 இலிருந்து ஒரு தனி பிரதேச செயலகமாக செயற்பட துவங்கியது.

சாய்ந்தமருது பிரதேச செயலகம் தொகு

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் 17 கிராமசேவைப் பிரிவுகள் உள்ளடக்கியுள்ளது. 2010 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 7118 குடும்பங்களும், 257652 மக்கள் தொகையும் 16,936 வாக்காளர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். மக்கள்தொகையில் ஆண்கள் 50.4% வீதமும், பெண்கள் 49.6% வீதமும் உள்ளனர். இதன் சனத்தொகை அடர்த்தி வீதம் 3072 /சதுரகிமீ ஆகும். இவ்வூரின் மொத்த நிலப்பரப்பளவு 7சதுர கிலோ மீற்றராகும்.


ஒரு ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட 22 பள்ளிவாசல்கள், ஒரு ஹிப்ளு மத்ரசா, ஒரு அரபுக் கல்லூரி, ஒரு தேசிய (சாகிரா) பாடசாலை உட்பட 8 பாடசாலைகள், ஒரு கோட்டக் கல்வி அலுவலகம், மக்கள் வங்கி, கிராமிய வங்கி, இலங்கை வங்கிக் கிளை, தனியான பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், ஒரு அஞ்சல் நிலையம், 3 உப அஞ்சல் நிலையங்கள், இரு மாடிகளைக் கொண்ட சந்தைக் கட்டிடங்கள், பாரியளவிலான வணிக நிறுவனங்கள், பொது நூலகம், தொழில் பயிற்சி நிலையங்கள், ஒரு மாவட்ட மருத்துவமனை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பனவற்றையும் இவ்வூர் கொண்டுள்ளது.

இவற்றை விட, சன சமூக அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், தன்னார்வ அமைப்புக்கள், இலக்கிய அமைப்புக்கள் போன்றவைகளும் உள்ளன.

கடல் வழியாக வந்த ஒல்லாந்தக் குழுவினர் இலங்கையில் முதன் முதலாகக் காலடி வைத்த இடம் சாய்ந்தமருது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது 1602 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், ஒல்லாந்தரது கப்பலொன்றின் தளபதியான ஜொரிஸ் வான் ஸ்பில் பேர்கன் என்பவரே சாய்ந்தமருதில் தரையிறங்கி, பின்னர் சம்மாந்துறையில் தங்கியிருந்து அங்கிருந்து கண்டிக்குச் சென்று முதலாம் விமல தர்ம சூரியன் மன்னனைச் சந்தித்தான். இப்பயணத்தின் போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தான் சந்தித்த சோனகர் (Mooren) மற்றும் துலுக்கர் (Tureken) பற்றியும் தனது நாட் குறிப்பேட்டில் விபரித்துள்ளார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Journal of Spilbergen 1602- Translation by K.D. Paranavitane-1997 Page 23
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்ந்தமருது&oldid=3395122" இலிருந்து மீள்விக்கப்பட்டது