சாளுக்கிய சோழர்

சோழர்கள் பொ.ஊ. 1070களிலிருந்து விஜயாலயச் சோழன் நிறுவிய சோழர் அரசை ஆண்டு வந்தனர். வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் குலோத்துங்கன் மன்னரானான்..

மேலை மற்றும் கீழைச் சாளுக்கியர் தொகு

பொ.ஊ. 10 நூற்றாண்டின் கடைசியில் தென் இந்தியாவில் இரண்டு சாளுக்கிய அரசுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தன. மேலைச் சாளுக்கியர் என்று அழைக்கப்பட்ட கல்யாணியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள், மற்றும் கீழைச் சாளுக்கியர் என்றழைக்கப்பட்ட வேங்கியை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள்.

வேங்கி தொகு

இராஜராஜ சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராஜராஜனும் அவனுடைய சந்ததியினரும் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராஷ்டிரகூடர்களுடன் தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலூம் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர்.

மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராஷ்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாகா உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களாலும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாயும் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன.

வேங்கிப் போர் தொகு

கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் பொ.ஊ. 945 - 70ல் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ண்ட இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம்.

பொ.ஊ. 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராஷ்டிரகூட மன்னம் மூன்றாம் கிருஷ்ணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான ஜடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான்.

இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இரண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராஷ்டிரகூட மன்னன் கிருஷ்ணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர்.

பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது.

ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருஷ்ணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பீ ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருஷ்ணன் அளித்தான். ஆனால் இராஷ்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பீ அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான்.

வீமன், மூன்றாம் கிருஷ்ணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருஷ்ணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 - 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர்.

இராஜராஜ சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராஜராஜனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராஜராஜ சோழன் துணிந்தான். அதே வேளையில் ஜடோசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.

1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் பொ.ஊ. 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது.

வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.

முதலாம் குலோத்துங்க சோழன் தொகு

வீரராஜேந்திர சோழனை அடுத்து பதவியேற்ற அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், சோழ நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்த நிலையில் முதலாம் இராஜந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவிக்கும் தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கும் பிறந்த குலோத்துங்க சோழனை சோழ தேசத்தின் அரசனாக முடி சூட்டப்பட்டது. குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இராஜேந்திர சோழனின் அரண்மனையில் பிறந்தவன்.இவன் கடாரத்தை வென்றதை பறைசாற்றும் கலிங்கத்து பரணி ஜெயங்கொண்டாரால் பாடப்பெற்றது...இவனது ஆட்சி காலத்தில் பல்வேறு சுங்க வரிகளை நீங்க பட்டதால் சுங்கம் தவிர்த்த சோழன் என்று புகழப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளுக்கிய_சோழர்&oldid=3595557" இலிருந்து மீள்விக்கப்பட்டது