சென்னை முற்றுகை

சென்னை முற்றுகை என்பது பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர பிரெஞ்சு படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவரி 1759 வரை, லல்லி தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு ஆண்டுப் போரின் போது நடந்த போராகும். பிரித்தானியப் படைகள் வெற்றிகரமாக இந்த முற்றுகையை எதிர்கொண்டனர். இந்தப் போரில் சென்னை நகரைப் பாதுகாக்க பிரித்தானியப் படையினர் 26,554 (பறையர் ரெஜிமெண்ட் உட்பட) பீரங்கிக் குண்டுகளையும் 200,000 தோட்டாக்களையும் பயன்படுத்தினர். சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றத் தவறியமை பிரெஞ்சுப் படையின் இந்திய நுழைவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன் பின்னாளில் நடைபெற்ற வந்தவாசிப் போருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது.

சென்னை முற்றுகை
Siege of Madras
ஏழாண்டுப் போர் பகுதி

18ஆம் நூற்றாண்டில் புனித ஜார்ஜ் கோட்டை
நாள் திசம்பர் 1758 - பெப்ரவரி 1759
இடம் மதராஸ், சென்னை மாகாணம், இந்தியா
பிரித்தானியர் வெற்றி
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா
 பிரான்ஸ்
தளபதிகள், தலைவர்கள்
பெரிய பிரித்தானியா வில்லியம் டிரேப்பர்
பெரிய பிரித்தானியா முகமது யூசுப் கான்(மருதநாயகம்- பறையர் ரெஜிமெண்ட் படை தளபதி)

பெரிய பிரித்தானியா மேஜர் ஜான் காய்லார்ட்
பெரிய பிரித்தானியா அப்துல் வகாப், ஆற்காட்டு இளவரசர்

பிரெஞ்சு இராச்சியம் கோம்டி டி லல்லி
பிரெஞ்சு இராச்சியம் மார்க்கி டி புசி-காஸ்டெல்நாவு
பலம்
3,900 மொத்தம்
2,200 சிப்பாய்கள்
1,700 ஐரோப்பியர்கள்
8,000 மொத்தம்
4,000 ஐரோப்பியர்கள்
3,400 சிப்பாய்கள்
600 உள்ளூர் குதிரைப்படை
இழப்புகள்
1,200

பின்னணி தொகு

பிரித்தானியாவும் பிரான்சும் இந்தியாவில் தமது குடியேற்ற ஆதிக்கத்தைச் செலுத்த பெரும் போட்டி போட்டனர். 1746இல் பிரஞ்சுப் படையினர் சென்னைச் சமரில் வெற்றியடைந்து பிரித்தானியாவிடம் இருந்து சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். ஆயினும் 1748 இல் மீளவும் சென்னைப் பட்டினம் பிரித்தானியர் வசமானது. 1757 காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஆதிக்கம் ஓங்கத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக ராபர்ட் கிளைவ் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றது. 1758இல் பிரெஞ்சுப் படையணி புதுச்சேரியை லல்லி தலைமயில் வந்து அடைந்தது. வந்தடைந்த படையணி புனித டேவிட் கோட்டை உட்பட்ட பகுதிகளைக் கைப்பற்றத் திட்டமிட்டது[1]. லல்லியின் வருகை பிரித்தானியரை விழிப்படைய வைத்தது. அந்நேரத்தில் பிரித்தானியப் படையின் பெரும்பகுதி வங்காளத்தில் நிலைகொண்டிருந்தமை முக்கிய காரணமாகும் .[2]. லல்லி சென்னையை 1758இல் தாக்குவதாக எண்ணியிருந்தாலும் நிதி நெருக்கடி காரணமாக முதலில் தஞ்சாவூரைத் தாக்கி நிதிப் பிரச்சனையைக் குறைத்துக் கொண்டு சென்னையைத் தாக்கத் திட்டமிட்டான். ஆயினும் தஞ்சாவூர் தாக்குதலும் வெற்றிகரமான முறையில் முடியவில்லை. இறுதியாக சென்னையை பிரெஞ்சுப் படைகள் அடையும் போது டிசம்பர் மாதமாகி விட்டதுடன் இந்த நேர விரயத்திற்கு பருவ மழையும் காரணமானது. இந்த நேர விரையத்தை பிரித்தானியப் படைகள் நன்கு பயன்படுத்தி தமது பாதுகாப்பைப் பெருக்கியதுடன் படைப்பலத்தையும் ஏறத்தாழ 4000 ஆட்கள் வரை கூட்டிக்கொண்டனர்.[3]

முற்றுகை தொகு

முதலாவது தாக்குதல் தொகு

 
சென்னையில் லல்லி. ஒரு ஓவியம்.

1758இல் சென்னை நகரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முதலாவது உள்ளூர் மக்கள் வாழ்ந்த பகுதி. இரண்டாவது ஐரோப்பியர்கள் வாழ்ந்த பகுதி. ஐரோப்பியர்கள் வாழ்ந்த பகுதி புனித ஜார்ஜ் கோட்டை உள்ளமைந்த பகுதியாக இருந்தது. 14 டிசம்பரில் பிரெஞ்சுப் படைகள் உள்ளூர் மக்கள் வாழ்ந்த பகுதியில் நுழைந்தது. எதிர்ப்பில்லாமல் உள்ளே நுழைந்த பிரெஞ்சுப் படைகள் அங்கிருந்த வீடுகளில் கொள்ளையடித்தன. இதே நேரம் பிரித்தானியக் கோட்டையில் இருந்து கேர்ணல் வில்லியம் ட்ராப்பர் தலைமையில் வெளி வந்த 600 பேர் கொண்ட படையணி நகரில் சிதறி இருந்த பிரெஞ்சுப் படைமீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின் போது இரு பக்கத்துக்கும் இடையில் மிக மோசமான தெருச் சண்டை மூண்டது. இறுதியாக பிரித்தானியப் படை கோட்டையினுள்ளே நுழையும் போது இரு பக்கமும் குறைந்தது 300 பேர் இழப்பு ஏற்பட்டிருந்தது [4]. இந்த அதிரடித் தாக்குதல் பெரியளவில் போர் சமநிலையை மாற்றாவிடினும் பிரெஞ்சுப் படையினரின் உளநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. லல்லி இந்தத் தாக்குதலின் போது ட்ராப்பர் தலைமையில் வந்த படையணியை தப்பவிட்டதற்கு இரண்டாம் நிலை கட்டளை அதிகாரியான புசி மீது பொறுப்பைச் சுமத்தி பொதுவில் திட்டித் தீர்த்தார். ஆயினும் புசியை பதவியில் இருந்து லல்லி இறக்கவில்லை.

பீரங்கிக் குண்டு வீச்சு தொகு

புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி பிரெஞ்சுப் படைகள் பீரங்கிகளுடன் இருந்தாலும் எரி குண்டுகள் இல்லாமையால் பீரங்கிகள் முழங்கப்படாமலேயே இருந்தன. பீரங்கிகளின் அமைதி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் நீடித்தது. இறுதியாக 2 சனவரி 1759இல் பீரங்கித் தாக்குதல் தொடங்கியது. பிரெஞ்சுப் படைகள் ஐந்து நாட்களாகத் தொடர்ந்து தாக்கிய பின்னரும் அடிக்கடி நிகழ்த்திய காலாட்படைத் தாக்குதலின் பின்னரும் கூட எதிர்பார்த்தவாறு பிரித்தானியர்களிடம் இருந்த கோட்டையை வீழ்த்த முடியவில்லை.

இந்தத் தொடர் தாக்குதல் தோற்றதால் பிரஞ்சுப் படைவீரர்கள் பெரும் ஏமாற்றமும் மனச் சோர்வும் அடைந்தனர். இதே வேளை சுமார் 150 வீரர்கள் தமது பக்கத்தையும் மாற்றிக் கொண்டனர். மேலும் இதேவேளையில், செங்கல்பட்டைச் சேர்ந்த பிருத்தானியாவின் மொகமட் யூசுப் தலமையிலான சிப்பாய்கள் பிரெஞ்சுப் படையினரின் பண்டங்கள் உணவு பரிமாறும் பாதையில் தாக்கினர். இந்தத் தாக்குதலை லில்லி பின்னர் முறியடித்தாலும் அவரது படைக்கு வரும் பண்டங்களில் இந்தப் படையணி தொடர்ந்து சூறையாடியது.[5]

முதன்மைத் தாக்குதல் தொகு

 
முற்றுகையின் போது பிரித்தானியரை வழி நடத்திய வில்லியம் ட்ராப்பர்

பல வாரங்கள் தொடர்ந்து நடந்த போர் காரணமாக சென்னை நகரம் பெரும் சேதமானது. பிரெஞ்சுப் படையினர் தமது தாக்குதலை உக்கிரப்படுத்தியிருந்தனர். முதன்மைக் கொத்தளம் உடைக்கப்பட்டதுடன் கோட்டைச் சுவர் திறந்து காணப்பட்டது.

30 சனவரி அன்று பிரித்தானிய அரச கடற்படை பிரெஞ்சுப்படை கண்ணில் மண்ணைத் தூவி கோட்டையில் இருந்து தேவையான பண்டங்கள், பணம், உணவு போன்றவற்றை எடுத்துச் சென்றனர். அத்துடன் கல்கத்தாவில் இருந்து ஒரு கடற்படையணி அட்மிரல் ஜோர்ஜ் பொகொக் தலைமையில் வருவதாக கோட்டையினுள் இருந்தோருக்கு அறிவிக்கப்பட்டது. பிரித்தானியருக்கு உதவி வரும் சங்கதி பற்றி அறிந்த லில்லி தனது தாக்குதலை மேலும் உக்கிரப்படுத்தி பிரித்தானியப் பீரங்கிகளைத் தகர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பிரெஞ்சுப் பின்வாங்கல் தொகு

16 பெப்ரவரி அன்று, சுமார் 600 படை வீரர்களைக் கொண்ட ஆறு பிரித்தானியக் கடற்படைக் கலங்கள் சென்னையை வந்தடைந்தன. இந்த புதிய மிரட்டலைக் கண்ட லில்லி தனது படையினரைப் பின்வாங்கி தெற்கு நோக்கி நகர்ந்தான். இதன் மூலம் இந்த முற்றுகை ஒரு முடிவுக்கு வந்தது.

பிந்தைய நிகழ்வுகள் தொகு

உலகளாவில் பிரித்தானிய ஆதிக்கத்தின் தொடர்ச்சியாக இந்த வெற்றியும் அமைந்தது. இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி நிலைகொள்ள இந்த முற்றுகையை வெற்றி கொண்டமை முக்கிய காரணமாக அமைகின்றது.

இதனையும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. Harvey p.236
  2. Anderson p.417
  3. McLynn p.174-80
  4. McLynn p.180-81
  5. McLynn p.182

நூற்கோவை தொகு

  • Anderson, Fred. Crucible of War: The Seven Years' War and the Fate of Empire in British North America, 1754-1766. Faber and Faber, 2001
  • Harvey, Robert. Clive: The Life and Death of a British Emperor". Sceptre, 1999.
  • Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993
  • McLynn, Frank. 1759: The Year Britain Became Master of the World. Pimlico, 2005.



"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_முற்றுகை&oldid=3891401" இலிருந்து மீள்விக்கப்பட்டது