செ. நாகலிங்கம்

செல்லப்பா நாகலிங்கம் (Chellappah Nagalingam மச, அக்டோபர் 25, 1893 - அக்டோபர் 25, 1958), இலங்கையின் ஒரு முதன்மையான சட்டத்தரணியும், நீதிபதியும் ஆவார். இலங்கை மீயுயர் நீதிமன்றத்தின் ஒரு நீதியரசராக இருந்த அவர், 1954 இல் இலங்கையின் பதில் மகாதேசாதிபதியாகப் பணியாற்றினார்.[1][2] அத்துடன் இலங்கையின் பதில் பிரதம நீதியரசராகவும், பதில் சட்டத்துறைச் செயலாளராகவும், பதில் சட்டமாஅதிபராகவும் பணியாற்றியிருந்தார். அவரே இலங்கையின் மீயுயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாமுக்கு நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கைத் தமிழரும் ஆவார்.[2]

செ. நாகலிங்கம்
பதில் மகாதேசாதிபதி
பதவியில்
1954–1954
ஆட்சியாளர்எலிசபெத் II
பிரதமர்ஜோன் கொத்தலாவல
முன்னையவர்சோல்பரி பிரபு
பின்னவர்சோல்பரி பிரபு
இலங்கையின் பதில் பிரதம நீதியரசர்
பதவியில்
1954–1954
ஆட்சியாளர்எலிசபெத் II
இலங்கையின் மீயுயர் நீதிமன்ற நீதிபதி
பதவியில்
1947–1958
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1893-10-25)25 அக்டோபர் 1893
இறப்பு25 அக்டோபர் 1958(1958-10-25) (அகவை 65)
துணைவர்ஞானம்
உறவுகள்செ. அமிர்தலிங்கம்
செ. பஞ்சலிங்கம்
செ. சுந்தரலிங்கம்
செ. தியாகலிங்கம்
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி
கொழும்பு றோயல் கல்லூரி
பரி. யோவான் கல்லூரி
தொழில்நீதிபதி, சட்டத்தரணி
இனம்இலங்கைத் தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

நாகலிங்கம் அக்டோபர் 25, 1893 இல்[2][3] யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பராய் என்ற ஊரில் செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது நான்கு சகோதரர்களில் செ. சுந்தரலிங்கம் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். செ. பஞ்சலிங்கம் மருத்துவராகவும், செ. அமிர்தலிங்கம் இலங்கை மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், செ. தியாகலிங்கம் பிரபல வழக்கறிஞராகவும் இருந்தவர்கள். யாழ் பரி யோவான் கல்லூரி, பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற நாகலிங்கம் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று 1917 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார்.[2]

ஞானம் வைத்திலிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்த நாகலிங்கத்திற்கு இரன்டு ஆண் பிள்ளைகளும் (யோகலிங்கம், பக்திலிங்கம்), நான்கு பெண்களும் (மகேசுவரி, சர்வேசுவரி, விக்னேசுவரி, நந்தேசுவரி) உள்ளனர்.[3]

பணி தொகு

இலங்கை வழக்குரைஞர் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாகலிங்கம் 1937 ஆம் ஆண்டு வரை கொழும்பில் சட்ட வல்லுனராகப் பணியாற்றினார்.[2] 1938 இல் கொழும்புக்கான கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2][3] 1941 முதல் கண்டி மாவட்ட நீதிபதியாகவும், 1946 இல் பதில் சட்டமா அதிபராகவும் பதவியில் இருந்தார்.[2][3] 1946 ஆம் ஆண்டில் மன்னர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.[2] 1947 ஆம் ஆண்டில் பதில் சட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று இலங்கை அரசாங்க சபையின் அதிகாரபூர்வ உறுப்பினராகவும், அமைச்சரவைப் பதவிக்கு ஒப்பான தகுதியான நீதித்துறைக் குழுமத்திற்கு தலைவராகவும் ஆனார்.[2][3] 1947 இல் மீயுயர் நீதிமன்ற நீதியரசர் ஆனார். இப்பதவியை ஏற்ற முதலாவது தமிழர் இவராவார்.[2][3] பல தடவைகள் இவர் இலங்கையின் பதில் தலைமை நீதிபதியாகப் பதவியில் இருந்திருக்கிறார்.[2][3] 1954 ஆம் ஆண்டில் ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு நாட்டில் இல்லாத போது பதில் மகா தேசாதிபதியாகப் பதவியில் இருந்தார்.[2][3]

கொழும்பு இந்துக் கல்லூரியை நிறுவிய "இந்து கல்விக் கழகத்தின்" ஆரம்பகால உறுப்பினராகவும் நாகலிங்கம் சேவையாற்றினார்.[4]

உசாத்துணை தொகு

  1. Abeyesekera, Kirthie (11 பெப்ரவரி 2001). "Casteism in the north". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110518123031/http://www.island.lk/2001/02/11/featur09.html. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 மாணிக்கவாசகர், செல்லத்தம்பி (25 அக்டோபர் 2011). "Justice Nagalingam - first Tamil Supreme Court judge". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2011-12-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111228010912/http://www.dailynews.lk/2011/10/25/fea05.asp. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 111. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  4. "History of College". கொழும்பு இந்துக் கல்லூரி. Archived from the original on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2012-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._நாகலிங்கம்&oldid=3555402" இலிருந்து மீள்விக்கப்பட்டது