தோரப்ஜி டாட்டா

இந்திய தொழிலதிபர்
(தோரப்ஜி டாடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் தோரப்ஜி டாடா ('Sir Dorabji Tata, 27 ஆகத்து 1859 – 3 சூன் 1932) என்பவர் ஒரு இந்தியத் தொழிலதிபர் மற்றும் டாட்டா குழும வளர்ச்சி வரலாற்றில் ஒரு முக்கிய நபரும் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் தொழில் துறைக்கு ஆற்றிய பணிக்காக 1910 இல் நைட் பேச்சுலர் விருது அளித்து பாராட்டப்பட்டார்.

தோரப்ஜி டாடா
Dorabji Tata
தோரப்ஜி டாடா
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் தலைவர்
பதவியில்
1927–1928
முன்னையவர்அப்போதுதான் நிறுவப்பட்டது
பின்னவர்பாட்டியாலா மன்னர் பூபீந்தர் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1859-08-27)27 ஆகத்து 1859
பிரித்தானிய இந்தியா, பம்பாய்
இறப்பு3 சூன் 1932(1932-06-03) (அகவை 72)
ஜெர்மனி, பாட் கிசிசென்
துணைவர்மெஹ்ர்பாய் பாபா
பெற்றோர்மெஹர்பாய் மற்றும் ஜாம்ஷெட்ஜி டாடா
உறவினர்கள்See டாட்டா குடும்பம்
முன்னாள் கல்லூரிகேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம்
மும்பை பல்கலைக்கழகம்
வேலைதொழிலதிபர்
அறியப்படுவதுதிறந்தவர் டாட்டா ஸ்டீல்
நிறுவனர் டாட்டா பவர்
நிறுவனர் டாட்டா கெமிக்கல்ஸ்

முன்வாழ்க்கையும், கல்வியும் தொகு

சொராட்டிரிய நெறியைச் சேர்ந்த பார்சி இனத்தவரான இவர், ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் ஆவார். இவர் பம்பாய் வணிகரான மெஹ்பீர் சக்ளத்வாலாவை மணந்தார். இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த சாபுர்சி சக்லத்வாலா இவரது நெருங்கிய உறவினராவார்.[1]

டாட்டா 1875 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்னர் பம்பாயிலுள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் தனது துவக்கக் கல்வியைப் பயின்று, தனிப் பயிற்சியிலும் பயின்றார். அவர் 1877 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ், கோன்வில்லையும் காய்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்,[2] இரண்டு ஆண்டுகள் கழித்து 1879 ஆம் ஆண்டில் பம்பாய் திரும்பினர். பின்னர் பம்பாய் செயின்ட் சேவியர் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்து, 1882 இல் பட்டம் பெற்றார்.

படிப்பை முடித்தவுடன், இரண்டு ஆண்டுகள் பம்பாய் கெஜட்டெட் பத்திரிகையில் தோரப்ஜி பணியாற்றினார். 1884 இல், இவர் தன் தந்தையின் நிறுவனத்தில் பருத்தி வணிக பிரிவில் இணைந்தார். இவரை முதலில் பிரெஞ்சு காலனியான பாண்டிச்சேரியில் ஜவுளி ஆலையை நிறுவ ஜாம்ஷெட்ஜி அனுப்பினார். அடுத்து, நாக்பூரில் எம்ப்ரஸ் ஆலை நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

திருமணம் தொகு

தோரப்ஜியின் தந்தை ஜம்ஷெத்ஜி, வணிக நிமித்தமாக மைசூர் இராச்சியத்துக்கு வந்தார். அங்கு அந்த இராச்சியத்தின் கல்வித் துறைக்கான முதல் இந்திய இன்ஸ்பெக்டர்-ஜெனரலான டாக்டர் ஹார்முஸ்ஜி பாபா என்ற ஒரு பார்சி இனத்தவரைச் சந்தித்தார். அங்கு அவரது வீட்டிற்குச் சென்றபோது, பாபாவின் ஒரே மகள் மெஹ்பீர்ரை பார்த்தார். பம்பாய்க்கு திரும்பிய ஜம்ஷேத்ஜி, பாபா குடும்பத்தினரின் அழைப்பின் பேரில் தன் மகன் தோரப்ஜியை மைசூர் இராச்சியத்துக்கு அனுப்பினார். அவ்வாரே அங்கு சென்று அவர்களைச் சந்தித்த தோரப்ஜி, 1897 ஆம் ஆண்டில் மெஹ்பீரை மணந்தார். இந்த இணையருக்கு குழந்தைகள் இல்லை.

மெஹ்பீரின் சகோதரர் ஜஹாங்கீர் பாபா ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார். அவர் விஞ்ஞானி ஓமி பாபாவின் தந்தை ஆவார், இதன்படி ஓமி பாபாவின் மாமா தோரப்ஜி ஆவார். பாபாவின் ஆராய்ச்சிக்கான நிதியுதவியை டாடா குழுமம் மேற்கொண்டதற்கு இந்த இந்த குடும்ப உறவே காரணமாக ஆனது மேலும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் பாபாவால் நிறுவப்பட்டன.

தொழில் வாழ்க்கை தொகு

ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட நீர்மின் திட்டம், உருக்காலைத் திட்டம் இரண்டையும் இவர்தான் நிறைவேற்றினார். டாட்டா ஸ்டீல் 1907 ஆம் ஆண்டிலும், டாட்டா பவர் 1911 ஆம் ஆண்டிலும் நிறுவப்பட்டன. இவை இன்றைய டாடா குழுமத்தின் மையமாக உள்ளன.[3]

விளையாட்டுத் துறையில் தொகு

தோரப்ஜி விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். மேலும் இந்திய ஒலிம்பிக் இயக்கத்தில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 1924 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக இந்திய வீரர்களுக்கு நிதியுதவி அளித்தார்.[4] 1928-ஆம் ஆண்டு, பாரதம் முதல் ஒலிம்பிக் தங்கம் வென்றது. இது ஹாக்கி வீரர் தியான் சந்தால் சாத்தியமானது. அதன் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் தொடர்ந்து ஆறு முறை தங்கம் வென்றது.இந்தியாவின் பிற பெரு வணிகர்களைப் போலவே டாடா குடும்பத்தாரும் இந்திய தேசியவாதிகளாக இருந்தனர். ஆனால் காங்கிரசை நம்பவில்லை, ஏனெனில் அவர்கள் சோசலிஸ்டுகள், மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு தீவிர விரோதமானதாக இருந்தனர்.[5]

இறப்பு தொகு

 
இங்கிலாந்தில் உள்ள தோரப்ஜி மற்றும் அவரது மனைவியின் கல்லறை

மெஹர்பாய் டாடா 1931 இல் தன் 72 வயதில் இரத்தப் புற்று நோயால் இறந்தார். இவரது மரணத்துக்குப் பிறகு இரத்தப் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையம், புற்றுநோய் மருத்துவமனை இரண்டையும் தோரப்ஜி நிறுவினார்.

1932 மார்ச்சு 11 இல், மெஹ்பேபாயி மரணமடைந்த ஓர் ஆண்டு கழித்து, "கல்வி, ஆராய்ச்சி, பேரழிவு நிவாரணம் மற்றும் பிற நலன்புரி நோக்கங்களுக்காக," "இடம், தேசியம் சமயம் போன்ற எந்த பாகுபாடும் காட்டாமல்" பயன்படத்தக்கவாறு ஒரு அறக்கட்டளை நிதியை தோரப்ஜி நிறுவினார். இன்று இந்த அறக்கட்டளை சர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை என அழைக்கப்படுகிறது. மேலும் தோரப்ஜி இந்தியாவின் முதன்மையான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தை நிறுவ நிதியளித்தார்.

தோரப்ஜி 73 வயதில் 1932 சூன் 3 அன்று ஜேர்மனியில் உள்ள பாட் கிசிசென் நகரில் இறந்தார். பின்னர் இங்கிலாந்தின் வாக்கிங், புரூக்வுட் கல்லறையில் அவரது மனைவி மெஹ்ர்பாய் அருகில் புதைக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. Oxford Dictionary of National Biography, Volume 48. Oxford University Press. 1904. பக். 675–676. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-861398-9. 
  2. "Tata, Dorabji Jamsetji (TT877DJ)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  3. "London Gazette, 21 January 1910".
  4. தோராப்ஜி டாடா: இந்திய வீரர்களை தம் சொந்த செலவில் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிய வணிகர்
  5. Claude Markovits, Indian Business and Nationalist Politics 1931–39: The Indigenous Capitalist Class and the Rise of the Congress Party (Cambridge University Press, 2002) pp 160–66
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரப்ஜி_டாட்டா&oldid=3494028" இலிருந்து மீள்விக்கப்பட்டது