பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கப்படுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும்.

2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாகப் பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும் பண்ணோடும் ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய்ப் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றித் தெளிவாக உணர்த்துகின்றன. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது.

பண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. தேவாரத்திலும் திருமுறைகளிலே குறிக்கப்பட்டுள்ள 24 பண்களைக் கீழே காணலாம். அவற்றுக்குச் சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன.

பண் இராகம் தேவாரம்
நட்டபாடை நாட்டை "நத்தார்படை ஞானன்"
கொல்லி நவரோஸ்எல்லையில் புகழானனும் இமை
இந்தளம் மாயாமாளவகௌளமுன்னிய கலைப்பொருளும்
குறிஞ்சி ஹரிகாம்போதிகல்லால் நிழல்மேய கறைசேர்
செந்துருத்தி மத்யமாவதி
யாழ்முறி அடானா---
சீகாமரம் நாதநாமக்கிரியாசூலப் படையானை
நட்டராகம் பந்துவராளிஇத்தனையாம் ஆற்றை அறிந்திலேன்
தக்கராகம் காம்போதிமடையில் வாளை பாய மாதரார்
பழந்தக்கராகம் சுத்தசாவேரிகொல்லை முல்லை நகையின்
பழம்பஞ்சுரம் சங்கராபரணம்கண்ணனும் நான்முகன் காண்
தக்கேசி காம்போதிபரக்கும் பெருமை இலங்கை என்னும்
செவ்வழி யதுகுல காம்போதிபொடிகள் பூசிப் பல
பியந்தைக் காந்தாரம் நவரோஸ்அன்ற வான்நிழல் அமர்ந்து
காந்தாரம் நவரோஸ்உறவியும் இன்புறு சீரும்
காந்தார பஞ்சமம் கேதாரகௌளைமந்திர மறையவை
கொல்லிக்கௌவானம் நவரோஸ்நஞ்சியிடையின்று
கௌசிகம் பைரவிவாழ்க அந்தணர் வானவர்
பஞ்சமம் ஆகிரிபொடிதனை பூசும் மார்பில்
சாதாரி பந்துவராளிசெந்தமிழர் தெய்வமறை நாவர்
புறநீர்மை பூபாளம்சீருறு தொண்டர் கொண்டடி
அந்தாளக்குறிஞ்சி சாமாகல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
மேகராகக் குறிஞ்சி நீலாம்பரிநீறுசேர்வதொர் மேனியர்
வியாழக் குறிஞ்சி சௌராஷ்டிரம்பந்தத்தால் வந்தெப்பால்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்&oldid=3752978" இலிருந்து மீள்விக்கப்பட்டது