பரத் கோபி

கேரள நடிகர்

பரத் கோபி (ஆங்கிலம்:Bharat Gopy) என்ற மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்பட்ட கோபிநாதன் வேலாயுதன் நாயர் (2 நவம்பர் 1937 - 29 ஜனவரி 2008) இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மற்றும் இயக்குனருமாவார். 1970 களில் கேரளாவில் நடந்த புதிய அலை சினிமா இயக்கத்துடன் தொடர்புடைய முதல் நடிகர்களில் இவரும் ஒருவராவார்.[1]

பரத் கோபி
பிறப்புகோபிநாதன் வேலாயுதன் நாயர்
(1937-11-02)2 நவம்பர் 1937
சிராயின்கீழு, திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு29 சனவரி 2008(2008-01-29) (அகவை 70)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1972–2008
பெற்றோர்வேலாயுதன் நாயர்
பார்வதியம்மா
வாழ்க்கைத்
துணை
ஜெயலட்சுமி எஸ். வி.
பிள்ளைகள்முரளி கோபி
மருத்துவர் மினு கோபி
விருதுகள்பத்மசிறீ
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா (3)
கேரள மாநிலத் திரைப்பட விருது (4)
வலைத்தளம்
bharatgopy.com

பரத் கோபி கூடியாட்டம் (1977), என்ற படத்தில் சங்கரங்குட்டி என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.[2][2] இப்படத்திலிருந்து இவருக்கு பரத் என்ற பெயர் கிடைத்தது. அவரது நன்கு அறியப்பட்ட பாத்திரங்களில் யவனிகாவில் அய்யப்பன், பாலங்களில் வாசு மேனன், காட்டத்தே கிழிக்கூடில் பேராசிரியர் "ஷேக்ஸ்பியர்" கிருஷ்ணப் பிள்ளை, பஞ்சவடி பாலத்தில் துசாசனா குறுப், ஓர்மக்காயி என்ற படத்தில் நந்தகோபால், ஆதாமிந்தே வாரியெள்ளுவில் உள்ள மம்மச்சன், சிதம்பரத்தில் சங்கரன், ஆகாத்தில் கிருட்டிணன் ராஜு ஆகியவை அடங்கும். .

ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இவர் உல்சவப்பிட்டென்னு (1989) மற்றும் யாமனம் (1991) ஆகியவற்றுக்காக அறியப்படுகிறார். பரதன் இயக்கிய 1993 ஆம் ஆண்டு பதயம் என்ற திரைப்படத்தை தயாரித்தார். 1991 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவர் 1994 ஆம் ஆண்டில், அபிநயம் அனுபவம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது திரைப்படம் குறித்த சிறந்த புத்தகத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம் தொகு

பரத் கோபி 1937 நவம்பர் 2 ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்மாவட்டத்தில் உள்ள சிரயின் கீழுவில் கொச்சுவீட்டில் வேலாயுதன் பிள்ளை மற்றும் பார்வதியம்மா ஆகியோருக்கு நான்கு குழந்தைகளில் இளையவராக பிறந்தார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்த உடனேயே, கேரள மின்சார வாரியத்தில் கீழ் பிரிவு எழுத்தராகப் பணியாற்றினார்[3]

இவர் ஜெயலட்சுமி எஸ். வி. என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு எழுத்தாளரும், நடிகருமான முரளி கோபி என்ற ஒரு மகனும் மற்றும் மருத்துவர் மினு கோபி என்ற மகளும் உள்ளனர்.

தொழில் தொகு

மேடை நடிகராக தொகு

ஜி. சங்கர பிள்ளையின் கீழ் பிரசாதனா "லிட்டில் தியேட்டர்" என்ற நாடகப் பள்ளியில் நாடக நடிகராக கோபி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் மேடை தோற்றம் அபயார்த்திகல் என்ற நாடகத்தில் ராகவன் என்ற பாத்திரத்துடன் தொடங்கியது. பின்னர், காவலம் நாராயண பணிக்கரின் கீழ் திருவரங்கே உடன் தொடர்பு கொண்டார். இவர் ஐந்து நாடகங்களையும் எழுதி மூன்று நாடகங்களையும் இயக்கியுள்ளார்.[3]

திரைப்பட நடிகராக தொகு

அடூர் கோபாலகிருஷ்ணன் நிறுவிய சித்ரலேகா திரைப்படச் சங்கம் மூலம் கோபி சினிமா மீது ஆர்வம் காட்டினார்.[4] 1972 ஆம் ஆண்டில் அடூரின் சுயம்வரம் என்றத் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் அறிமுகமானார். அடூரின் அடுத்த படமான கூடியேட்டம் (1977) என்பதில் சங்கரங்குட்டியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக இவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். ஓர்மக்காய், யவனிகா, பஞ்சவடி பாலம், ஆதாமின்டே வாரியெல்லு போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவர். மலையாள திரைப்படங்களைத் தவிர, ஆகாத் மற்றும் சதா சே உத்ததா ஆத்மி ஆகிய இரண்டு இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோபி ஒரு திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். கோபி 1986 பிப்ரவரி 20 அன்று தனது தொழில் வாழ்க்கையின் செல்வாக்கு மிக்க காலத்தில் பக்கவாதத்தால் முடங்கினார்.[5]

இவருக்கு 1991 இல் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[6]

1979 ஆம் ஆண்டில், முரளியுடன் நஜாட்டாடி திரைப்படத்தை கோபி இயக்கியுள்ளார். படம் இரண்டு முறை மட்டுமே திரையிடப்பட்டது. இப்போது அச்சு தொலைந்துவிட்டது.[7] உல்சவப்பிட்டென்னு, யாமனம் மற்றும் என்டே ஹிருத்யாத்திண்டே உதாமா ஆகிய மூன்று திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். உடல் ஊனமுற்ற நபரைப் பற்றிய அவரது யாமனம், 1991 இல் தேசிய விருது நடுவர் மன்றத்தால் சமூகப் பிரச்சினைகள் குறித்த சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

2008 ஜனவரி 24 அன்று, கோபி மார்பு வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாரடைப்பு காரணமாக ஐந்து நாட்களுக்குப் பிறகு இறந்தார். இவரது கடைசி பாத்திரம் பாலச்சந்திர மேனனின் டி இங்கொட்டு நோக்கியே (2008) என்ற படத்தில் இருந்தது.[8][9]

நூலாசிரியராக தொகு

கோபி இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது புத்தகம் அபிநயம் அனுபவம் (நடிப்பு, அனுபவம்), 1994 இல் திரைப்படம குறித்த சிறந்த புத்தகத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[4] 2003 ஆம் ஆண்டில், நாடக நியோகம், என்ற இவரது நாடகம் குறித்த புத்தகம் நாடகம் குறித்த சிறந்த புத்தகத்திற்கான கேரள மாநில நாடக விருதுகளை வென்றது.[10]

குறிப்புகள் தொகு

  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Manorama Online Latest Malayalam News. Breaking News Events. News Updates from Kerala India". Archived from the original on 9 March 2014. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
  3. 3.0 3.1 WEBDUNIA. "ഏതു വേഷവും ഇണങ്ങിയ ഭരത് ഗോപി". Archived from the original on 2011-10-05. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  4. 4.0 4.1 "Goodbye, Mr Bharat Gopy".[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "The last curtain call". 1 February 2008 – via www.thehindu.com.
  6. www.indianautograph.com, www.indianautographs.com. "Welcome to Thematic Gallery of Indian Autographs - A unique and thematic gallery of Praful Thakkar". www.indianautographs.com.
  7. "ഞാറ്റടി". njaattady.blogspot.com.
  8. "Archived copy". Archived from the original on 17 April 2009. பார்க்கப்பட்ட நாள் 16 September 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. "C V Aravind pays a tribute to 'Bharat' Gopy, veteran actor in Malayalam cinema". deccanherald. Archived from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
  10. [2]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்_கோபி&oldid=3917026" இலிருந்து மீள்விக்கப்பட்டது