பாரிசின் விடுவிப்பு

பாரிசின் விடுவிப்பு (Liberation of Paris) இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசு சண்டை என்றும் அறியப்படுகிறது.

பாரிசின் விடுவிப்பு
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

பாரிசின் புகழ் பெற்ற சாம்சு எலிசே வீதியின் இருபுறமும் கூடி பிரெஞ்சு 2வது கவச டிவிசன் படையினரை வரவேற்கும் பாரிசு மக்கள் (ஆகஸ்ட் 26)
நாள் ஆகஸ்ட் 19-25 1944
இடம் பாரிசு பிரான்சு
தெளிவான நேசநாட்டு வெற்றி; மீண்டும் உருவாக்கப்பட்ட பிரெஞ்சுக் குடியரசுக்குப் பரப்புரை வெற்றி
பிரிவினர்
சுதந்திர பிரான்ஸ் பிரெஞ்சு எதிர்ப்புப் படை, பிரெஞ்சு சுதந்திரப் படைகள்
 ஐக்கிய அமெரிக்கா
எஸ்பானிய தொண்டர்கள்
 ஜெர்மனி
மிலீசு (ஜெர்மனி ஆதரவு பிரெஞ்சு துணைப்படை)
தளபதிகள், தலைவர்கள்
சுதந்திர பிரான்ஸ்ஃபிலீப் லேகிளர்க்
சுதந்திர பிரான்ஸ் ஆன்ரி ரோல்-டாங்கே
சுதந்திர பிரான்ஸ் ழாக் சபான் டெல்மாசு
ஐக்கிய அமெரிக்கா ரேமண்ட் பார்டன்
நாட்சி ஜெர்மனி டயட்ரிக் வோன் சோல்டிட்சுSurrendered
பலம்
2வது பிரெஞ்சு கவச டிவிசன்,
ஃபிரெஞ்சு உள்நாட்டு எதிர்ப்புப் படைகள்,
4வது அமெரிக்கக் காலாட்படை டிவிசன்
5,000 பாரிசினுள், 15,000 நகர எல்லையில்
இழப்புகள்
பிரெஞ்சு எதிர்ப்புப் படையினர்:
800-1000[1]
சுதந்திர பிரெஞ்சுப் படைகள்:
130 மாண்டவர்
319 காயமடைந்தவர்[2]
அமெரிக்கா : தெரியவில்லை[3]
3,200 மாண்டவர்
12,800 போர்க்கைதிகள்[1]

பின்புலம் தொகு

1940ம் ஆண்டு பிரான்சை நாசி ஜெர்மனி தாக்கிக் கைபற்றியது. அடுத்த நான்காண்டுகள் பிரான்சு ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இக்காலகட்டத்தில் அங்கு பல உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகி ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போராடி வந்தன. ஜூன் 6, 1944ம் தேதி நேச நாட்டுப் படைகள் பிரான்சு மீது கடல் வழியாகப் படையெடுத்தன. இரு மாதங்கள் கடும் சண்டைக்குப் பின்னர் செய்ன் ஆற்றுக்கு மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, பிரான்சின் பல பகுதிகள் நேச நாட்டு வசமாகின. ஆகஸ்ட் மாதத்தில் ஃபலேசு இடைப்பகுதி சண்டைக்குப் பின்னர், பாரிசைக் கைப்பற்றுவது சாத்தியமானது.

ஆனால் பாரிசைக் கைப்பற்றுவது குறித்து நேச நாட்டு தளபதிகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. நேச நாட்டு முதன்மை தளபதி ஐசனாவர் பாரிசை உடனடியாகக் கைப்பற்றுவதற்கு போதுமான இராணுவ காரணங்கள் இல்லையெனக் கருதினார். தளவாடப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த நேச நாட்டுப் படைகளுக்கு பாரிசு மீதான தாக்குதல் ஒரு வீண் சுமை என்று கருதினார். பாரிசு விடுவிக்கப்பட்டால், அதன் குடிமக்களின் உணவு மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு நேச நாட்டுப் படைகளுடையதாகும், இதனால் போர் முயற்சி பெரிதும் பாதிக்கப்படும் என அவர் கருதினார். மேலும் பாரிசு வீழும் பட்சத்தில், அதனைத் தகர்த்து நாசமாக்க இட்லர் தனது பாரிசு படைகளின் தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார். இக்காரணங்களால் அமெரிக்கர்களும் பிரிட்டானியர்களும் பாரிசைத் தாக்கத் தயங்கினர். அதனைச் சுற்றி வளைத்து விட்டு பிற பகுதிகளைத் தாக்க விரும்பினர்.

ஆனால் நாடுகடந்த சுதந்திர பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் படைகளின் தலைவர் ஜெனரல் சார்லஸ் டி கோல் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு பெரும் பரப்புரை வெற்றியினை (propaganda victory) பெறுவதற்காகவும் பாரிசினை உடனுக்குடன் கைப்பற்ற விரும்பினார். பிரெஞ்சு எதிர்ப்புப் படையினருள் கம்யூனிஸ்டுகள், கோலிஸ்டுகள் என பல கோஷ்டிகள் இருந்தன. இவற்றுள் யார் பாரிசை விடுவிக்கிறார்களோ, அவர்களுக்கு பிரெஞ்சு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். போருக்குப் பின்னால் ஏற்படப்போகும் பிரெஞ்சு அரசினைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் கிட்டுமென்பதால், பாரிசை விடுவிக்க பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் முனைந்தன.

விடுவிப்பு தொகு

இட்லரின் உத்தரவின் பேரில் பாரிசினைத் தகர்க்க அதன் ஜெர்மானிய தளபதி வோன் சோல்டிட்சு முயற்சிகளைத் தொடங்கினார். இதனால் எச்சரிக்கையடைந்த பிரெஞ்சு எதிர்ப்புப் படை, பாரிசினை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதி பாரிசில் எதிர்ப்பு படைகள் ஒரு முழு வேலை நிறுத்ததைத் தொடங்கின. மூன்று நாட்களுக்குப் பின் இது ஒரு முழுப் புரட்சியாக மாறியது. ஆகஸ்ட் 19ம் தேதி பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் பாரிசு நகர் முழுவதும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளைத் தாக்கின. பாரிசு நகர வீதிகளில் சாலைத் தடைகள் உருவாக்கப்பட்டன, மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளின் குறுக்கே இடப்பட்டன. சாலையோர நடைபாதைகள் தோண்டப்பட்டு அக்கற்களைக் கொண்டு சாலைத் தடைகளைப் பலப்படுத்தப் பட்டன. பாரிசில் எதிர்ப்புப் படையினரின் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டு, ஜெர்மானியர்களை எதிர்க்க ஆயுதங்களை ஏந்துமாறு பொதுமக்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 19ம் தேதி சுவீடியத் தூதரின் உதவியுடன் இரு தரப்பினரும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். பாரிசின் முக்கிய கட்டிடங்களும் அரண்நிலைகளும் ஜெர்மானியர் வசமும், எஞ்சிய நகரப் பகுதிகள் எதிர்ப்புப் படைகளின் வசமும் இருந்தன.

பாரிசு நகரத்தில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது நேச நாட்டுப் படைகள் பாரிசை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. நிதானமாகத் திட்டமிட்டு முன்னேற வேண்டும் என்று அமெரிக்கத் தளபதிகள் கருதினாலும், பிரெஞ்சுத் தளபதிகள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக பாரிசு மீதான தாக்குதலைத் தொடங்கின. சுதந்திர பிரெஞ்சுப் படைகளின் 2வது கவச டிவிசன் ஆகஸ்ட் 24ம் தேதி பாரிசு நகரின் எல்லையினை அடைந்தது. மறுநாள் பாரிசின் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் சரணடைந்தன. பாரிசிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த இட்லர் இட்டிருந்த ஆணையை வோன் சோல்டிட்சு நிறைவேற்ற மறுத்துவிட்டதால், நகரம் சேதமடையாமல் தப்பியது. நகரினுள் நுழைந்த நேச நாட்டுப் படைகளை பாரிசு மக்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாரிசின் விடுவிப்பு நேச நாடுகளுக்கு ஒரு பெரும் பரப்புரை வெற்றியாக அமைந்தது. சார்லஸ் டி கோலின் கட்சியினரின் செல்வாக்கை உயர்த்தியதால், போருக்குப் பின்னான அரசினை அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Libération de Paris
  2. History Channel: The Lost evidence-Liberation of Paris
  3. Libération de Paris forces américaines
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிசின்_விடுவிப்பு&oldid=2928050" இலிருந்து மீள்விக்கப்பட்டது