பிசைந்த மாவு

பிசைந்த மாவு அல்லது பிசைமா(வு) (dough) என்பது தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்குகள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இறுக்கமானதும், தகடாக்கத்தக்க தன்மை கொண்டதும், சிலவேளைகளில் இழுபடத்தக்க தன்மையுடன் கூடியதுமான பசை போன்ற பொருள் ஆகும். தானியம், கிழங்கு, பருப்பு போன்றவற்றின் மாவுடன் நீரும் கலந்து இப்பசை செய்யப்படுகின்றது. இவற்றுடன், ஈசுட்டு, புளிக்கச் செய்யும் பொருட்கள், எண்ணெய், வாசனைப் பொருட்கள் போன்ற சேர்மானங்களையும் சேர்த்துக்கொள்வது உண்டு.

புதிதாகக் குழைக்கப்பட்ட பிசைமாவு
கோதுமையில் செய்யப்பட்ட பிசைமாவிலிருந்து சப்பாத்தி தயாரிக்கப்படுகிறது.

நூலடை (noodles), சப்பாத்தி, கொழுக்கட்டைகள், மாப்பலகாரம் (pastry), வடை, வேகப்பம் (pizza), ரொட்டி, பூரி போன்ற உணவுகள் தயாரிப்பதில், பிசைமாவு தயாரிப்பது முதற் கட்டம் ஆகும்.

பிசைமாவின் வகைகள் தொகு

சேர்பொருட்கள், செய்யவுள்ள உணவு வகை, பயன்படும் புளிப்பேற்றி வகை, குழைக்கும் விதம், சமையல் முறை என்பவற்றைப் பொறுத்துப் பிசைமாவு பல்வேறு வகையினவாகக் காணப்படுகின்றன. பிசைமாவு என்பதற்கு குறிப்பான வரைவிலக்கணம் கிடையாது. ஆனாலும், பெரும்பாலான பிசைமாவு வகைகள் இழுபடத்தக்க பாகுத்தன்மை கொண்டவை.[1]

புளிப்பேற்றிய அல்லது நொதிக்க விடப்படும் பிசைமாவு பல்வேறு வகையான ரொட்டிகளைத் தயாரிப்பதற்கு உலகெங்கும் பயன்படுகின்றன. ரொட்டிக்கான பிசைமாவில் உப்பு, எண்ணெய் அல்லது கொழுப்பு, சர்க்கரை அல்லது தேன் போன்றவற்றுடன் சில வேளைகளில் பால், முட்டை என்பனவும் சேர்ப்பது உண்டு.

குறிப்புகள் தொகு

  1. Leon Levine; Ed Boehmer (1997). "Chapter 12, Dough Processing Systems". Handbook of Food Engineering Process. doi:10.1201/9781420049077.ch12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசைந்த_மாவு&oldid=2972421" இலிருந்து மீள்விக்கப்பட்டது