பீகார் வரலாறு

பீகாரின் வரலாறு வடக்கு / கிழக்கு இந்தியாவில் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். பீகாரின் ஒரு பகுதியான மகதம், ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு மைய சக்தியாக இருந்தது. கல்வி மற்றும் பண்பாட்டு மையமாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் இருந்தது. இந்தியாவின் மிக பெரியப் பேரரசுகளில் ஒன்றான மௌரியப் பேரரசும், அதேபோல் இரண்டு முதன்மையான அமைதிவாத மதங்களான பௌத்தம், சைனம் ஆகியவையும் இப்போதைய பீகார் பகுதியில் இருந்து எழுந்தவை.[1] மகதப் பேரரசர்கள், மிக குறிப்பாக மவுரிய மற்றும் குப்தப் பேரரசுகள், தங்கள் ஆட்சியின் கீழ் தெற்கு ஆசியாவில் ஒன்றுபட்ட பெரும் நிலப்பரப்பை ஆண்டனர்.[2] இவர்களின் தலைநகரான பாடலிபுத்திரம், தற்கால பாட்னாவின் அருகில் இருந்தது, இந்த நகரம் இந்திய நாகரீகத்தின் முக்கிய அரசியல், இராணுவ, பொருளாதார மையமாக இருந்தது. மேலும் சமய, இதிகாச நூல்களைத் தவிர்த்த பல இந்திய நூல்கள் பண்டைய பீகாரில் எழுதப்பட்டன. இதில் நாடக நூலான அபிஞான சாகுந்தலம் முதன்மையான நூல்களில் ஒன்று. பீகாரின் இன்னொரு பகுதியான மிதிலை வேத காலத்தில் சனகரின் ஆட்சியின் கீழ் அதிகாரமிக்க நகரமாக இருந்தது என்று நம்பப்படுகிறது. மிதிலை சனகரின் மகளான சீதை ராமனின் மனைவி என வால்மீகி தன் இராமாயணத்தில் எழுதியுள்ளார். [3]

தற்கால பீகார் பிராந்தியத்தில் மவுரிய அரசுக்கு முந்தைய காலகட்டத்தில் மகதம், அங்கம், மற்றும் வாச்சி கூட்டமைப்பு போன்ற பல அரசாட்சிகளும், குடியரசுகளும் எழுச்சிபெற்றிருந்தன. வாச்சி கூட்டமைப்பு, மகாவீரர் பிறப்புக்கு முன்பே (பொ.ஊ.மு. 599)[4][5] இப்பகுதியிலிருந்த உலகில் நன்கறியப்பட்டப் பழங்கால குடியரசாகும். பீகாரைச் சேர்ந்த குப்த மரபினரின் ஆட்சிக்காலத்தில் கலாச்சார மலர்ச்சி, கல்வியிலும் சிறந்து விளங்கியதால் இக்காலகட்டம் இந்தியாவில் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

பாலப் பேரரசும் தங்கள் தலைநகராகப் பாடலிபுத்திரத்தைக் கொண்டிருந்தனர். பாலப் பேரரசின் காலத்திற்கு பிறகு, இந்திய வரலாற்றில் பீகார் மிகச்சிறிய பாத்திரத்தையே வகித்தது. ஆனால் 1540களின் இடைக்காலத்தில் சூர் பேரரசு தோன்றியபின் இந்நிலை மாறினாலும், 1556 ஆம் ஆண்டில் சூர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு பீகார் மீண்டும் இந்தியாவில் ஒதுக்கப்பட்டப் பகுதியாக மாறியது. அதன்பிறகு இப்பகுதி பிரித்தானியர் காலத்தில் 1750 முதல் 1857-58 வரை நடந்த போர்களின் களமாக இருந்தது. 1912 ஆம் ஆண்டு, மார்ச் 22 இல் பீகார் பிரித்தானிய இந்தியப் பேரரசில் ஒரு தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது. 1947 சுதந்திரம் பெற்றபிறகு, பீகார் இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலமாக இருந்து வருகிறது.

வேதகால நாடுகளான அங்கதேசம், கோசலை, விதேகம் மற்றும் பிறநாடுகள்

காவியக்கால இராச்சியங்கள் தொகு

அங்க தேசம் தொகு

அங்க தேசம் மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது. துரியோதனின் நண்பனான கர்ணன், அங்க தேசத்து அரசனாக இருந்தார். ககரியா, பாகல்பூர், முங்கர் ஆகிய இன்றைய பகுதிகள் பண்டைய அங்க தேசத்துடன் தொடர்புடைய பகுதிகளாகும்.

விதேக (மிதிலை) தேசம் தொகு

 
பொ.ஊ.மு. 6- 4 நூற்றாண்டுகளில் மகத நாடு.

விதேக தேசமானது இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடப்படுகிறது இத்தேசம் பீகார் பகுதிகளை உள்ளடக்கியதாகவும், நேபாளத்தின் சிறிய பகுதிகளைக் கொண்டதாக கருதப்படுகிறது. இராமனின் மனைவியான சீதை விதேக மன்னரான சனகரின் மகளான இளவரசி என விவரிக்கப்படுகிறது. விதேக நாட்டின், தலைநகரான சனக்குபூர் தற்கால நேபாளத்தின் பகுதியாக உள்ளது.

மகத நாடு தொகு

மகத நாடானது புராண கால மன்னனான சராசந்தனால் நிறுவப்பட்டது. இவன் புரு வம்சத்தைச் சேர்ந்தவன். மகாபாரதத்தில் மகத மன்னனான இந்த சராசந்தன் இந்தியாவின் பேரரசனாக சி்த்தரிக்கப்படுகின்றான். இவனது தலை நகரம் இராசகிருகம் அல்லது இராச்சுகிர் தற்போதைய பீகாரின் மலை வாசத்தலமாக உள்ளது. சராசந்தன் ஆற்றல் மிக்க மன்னனாக பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டை பல திசைகளிலும் விரிவாக்கினான். இவன் யாதவர்களுக்கும், குரு வம்சத்தவர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தான். இறுதியில் இவன் கிருட்டிணனின் துணையுடன் பீமனால் கொல்லப்பட்டான்

மகாசனபதம் தொகு

மகாசனபத காலம்

வேத காலத்திற்கு பின்பு, பல்வேறு சிறு அரசுகள் தோன்றி மகதத்தை ஆதிக்கம் செய்தன. இந்த நாடுகள் பொ.ஊ.மு. 1000க்கு முற்பட்ட பௌத்த, சமண இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளன. பொ.ஊ.மு. 500 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், மகாசனபதம் என்னும் பதினாறு முடியாட்சிகளும மற்றும் குடியரசுகள் குறிப்பிடப்படுகின்றன, அவை காசி நாடு, கோசல நாடு, அங்கம், மகதம், வச்சி நாடு, (அல்லது வரிச்சி), மல்லம், சேதி நாடு, வத்ச நாடு (அல்லது வம்சா), குருதேசம், பாஞ்சாலம், மத்சய நாடு (அல்லது மத்ஸ்யா நாடு), சூரசேனம் அஸ்மகம், அவந்தி, காந்தாரதேசம், காம்போசம் என அழைக்கப்பட்டன. இந்த நாடுகள் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதியில் ஆப்கானித்தானில் இருந்து மகாராட்டிரம் வங்காளம்வரை பரவி இருந்தன. அங்கம், மகதம் ஆகிய நாடுகள் முறையே தற்கால வட பீகார் மற்றும் தென் பீகார் பகுதியில் இருந்தன. இந்த பதினாறு தேசங்களில் சில பொ.ஊ.மு. 500/400 நூற்றாண்டு காலகட்டத்தில் நான்கு பெரும் நாடுகளாக ஒன்றாக திரண்டு மாறின, இது கௌதம புத்தர் காலமாகும். இந்த நான்கு தேசங்கள் வட்சா, அவந்தி, கோசலை, மகதம் என்பனவாகும்.[6]

பொ.ஊ.மு. 537இல், கவுதம புத்தர் பீகாரின் கயாவில், "ஞானம்" பெற்றார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில், மகாவீரர் பிறந்தார் அவர் பிறந்த இடம் தற்கால பீகாரின் சமூய் மாவட்டத்தில் இருந்த பழமைவாய்ந்த லச்சூர் நாட்டில் குண்டலகிராமம் என்று அழைக்கப்பட்ட பகுதி ஆகும். இவரே சைன சமயத்தின் 24வது தீர்த்தரங்கராக அறியப்படுகிறார். இவர் தான் கண்டறிந்த இறையியலை பரப்பினார். இதுவே பின்னர் சைன சமயமாக அறியப்பட்டது.[7] வேதங்களில் சில சைன தீர்த்தங்கரர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் இதில் குறிப்பிப்படுபவர்கள் சமணத்தை ஒத்த இயக்கத் துறவிகளாகவும் இருக்கலாம்.[8] புத்தரின் போதனைகளும் சைனத்தின் துறவு வாழ்வும் மக்கள் மத்தியில் ஆதரவைப்பெற்றன, மக்கள் மொழியான பிராகிருதம் பரப்புரைக்கு பயன்படுத்தப்பட்டது. இவர்களின் கொள்கைகளும், நடைமுறைகளும் இந்து சமயத்தில் செல்வாக்கு பெற்றன அதனால் இந்து சமயமானது சைவ உணவு, விலங்குகளைக் கொல்லாமை, அகிம்சை போன்றவற்றை சுவீகரித்துக்கொண்டது.

சைன சமயமானது இந்தியாவில் மட்டும் உள்ள நிலையில், பௌத்த துறவிகள் நடு ஆசியா, கிழக்கு ஆசியா, திபெத், இலங்கை, தென் கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் பௌத்த சமயத்தைப் பரப்பினர். பழமையான உண்டு உறைவிட பல்கலைக்கழகங்களான நாளந்தா பல்கலைக்கழகம், விக்கிரமசீலா பல்கலைக்கழகம் போன்றவை இந்தக் காலகட்டத்தில் பீகாரில் நிறுவப்பட்டன.

மகதப் பேரரசு தொகு

சிசுநாகன் சிசுநாக வம்சத்தின் நிறுவனராவார். இவரால் (பொ.ஊ.மு. 684 இல்) மகத பேரரசு உருவாக்கப்பட்டது. இந்தப் பேரரசின், தலைநகராக இராசகிரகம் இருந்தது பின்னர் பாடலிபுத்திரத்துக்கு மாற்றப்பட்டது. (இரண்டுமே தற்போதைய பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளன) சிசுநாக மரபானது இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இருந்தது.

அரியங்கா வம்சத்தின் மன்னனான பிம்பிசாரன் பல போர்களினால் மகத நாட்டை விரிவு படுத்தினான். கோசல நாட்டையும் திருமண உறவினால் மகதத்துடன் இணைத்தார். பிம்பிசாரன் புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர், மற்றும் இவர் புத்தரின் சீடராகவும் இருந்தார் என பதிவு செய்யப்பட்டுள்ளது. பிம்பிசாரன் (பொ.ஊ.மு. 543–493) தனது மகன் அசாத சத்ருவினால் சிறைப்பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வு பொ.ஊ.மு. 491 வாக்கில் நடந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது. அசாதசத்துருவின் (பொ.ஊ.மு. 491-461), ஆட்சியில் வம்சத்தின் ஆட்சி பெரிய அளவை அடைந்தது.

மகதம்

தற்கால பீகாரில் மகாவீரர் பிறப்பதற்கு முந்தைய காலத்திய பழமையான குடியரசு லிச்சாவி ஆகும்.[5] வைசாலியானது லிச்சாவி மற்றும் வச்சி கூட்டமைப்பின் தலைநகரமாக இருந்தது. மகாவம்சம், அந்த நகரத்தில் இருந்த ஒரு நடனமங்கையைப் பற்றிச் சொல்கிறது, ஆம்ரபாலி என்னும் அவளின் அழகு நாடுகளைக் கடந்து பிரபலமானதாக இருந்தது, மேலும் நகரை வளமானதாக்க அவள் மிகப் பெரிய அளவில் உதவினாள்.[12]

அசாதசத்துரு லிச்சாவி மீது பல முறை படையெடுத்தார். இவர் பொ.ஊ.மு. 551 முதல் பொ.ஊ.மு. 519 வரை ஆட்சி செய்தார் என்று கருதப்படுகிறது. மகத பேரரசின் தலைநகரை இராசகிருகத்தில் இருந்து பாடலிபுத்ரத்துக்கு மாற்றினார். அசாதசத்துருக்குப்பின் அவர் மகன் உதயபாத்ரா பதவிக்கு வந்தார் என மகாவம்சம் சொல்கிறது. மேலும் அவர் காலத்தில் பாடலிபுத்திரம் உலகின் மிகப்பெரிய நகரமாக ஆனது. அவர் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்று கருதப்படுகிறது. நாட்டில் பதவிக்காக அடுத்தடுத்து இரத்தக்களரிகள் ஏற்பட்டன. மன்னர் உதயபத்ராவை அவரது மகன் அனுருத் படுகொலை செய்து பதவிக்கு வந்தார். அதைப்போலவே அவரது மகன் முண்டா தன் தந்தையை இரத்தக்களரியில் மூழ்கடித்து ஆட்சியைப்பிடித்தார், பின் அவரும் அவரது மகனான நாகதாசகாவால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வம்சத்தின் ஆட்சி பொ.ஊ.மு. 424 வரை நீடித்தது, பின் இந்த மரபு நந்த வம்சத்தினால் தூக்கியெறியப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் முதன்மையான இரண்டு சமயங்களும் மகதத்தில் வளர்ச்சி கண்டன. பொ.ஊ.மு. 6 அல்லது பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டில் கவுதம புத்தர், புத்த சமயத்தை நிறுவினார், இது பின்னர் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை பரவியது, மகாவீரர் பண்டைய சிராமனிச சமயத்துக்கு சைன சமயத்தின் வடிவில் பரப்புரையினால் புத்துயிர் அளித்தார்.

 
தனநந்தர் காலத்தில் (பொ.ஊ.மு. 323) நந்த வம்சத்தின், ஆட்சிப்பரப்பு.

நந்த வம்சமானது அதற்கு முந்தைய சிசுநாக வம்சத்தின் மன்னனான மகாநந்தினின் முறைகேடான மகனால் நிறுவப்பட்டது. நந்த வம்சமானது மகதத்தை பொ.ஊ.மு. 5 வது மற்றும் 4 வது நூற்றாண்டுகளில் ஆண்டது. நந்த பேரரசானது, அதன் உச்சத்தின்போது பரப்பளவில் கிழக்கில் பர்மாவரையும், மேற்கே பலூசித்தான் வரையிலும் தெற்கைப் பொருத்தவரை ஒருவேளை கருநாடகம் வரையும் பரவி இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[13] நந்த வம்சத்தின் மகாபத்ம நந்தர், அனைத்து சத்ரியர்களையும் அழித்ததாக பெருமையாகக் கூறிக்கொண்டார். இவர் இசுவாகு வம்சத்தினரை வெற்றி கொண்டார், அதேபோல பாஞ்சாலம், காசி நாடு, ஏகேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகர், குருதேசம், மைதிலா, சூரசேனம், விதிகோத்திரா ஆகியோரையும் தோற்கடித்தார். இவர் தன் பேரரசை தக்கான பீடபூமிவரை நீட்டித்தார். மகாபத்ம நந்தர் தன் 88 ஆம் வயதில் இறந்தார், 100 ஆண்டுகள் நீடித்த இந்த மரபில் இவரே மிகுதியான காலம் ஆட்சிசெய்தவர்.

 
அசோகர் காலத்தில் மௌரியப் பேரரசின் பெரும் பரப்பளவு.
 
மௌரியப் பேரரசின் பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டைய சக்கரம், யானை சின்னங்கள் பொறிக்கப்பட்ட அச்சுக்குத்திய வெள்ளிக் காசு.

பொ.ஊ.மு. 321 இல், நாடுகடத்தப்பட்ட சந்திரகுப்த மௌரியர், சாணக்யரின், உதவியுடன், நந்த வம்சத்தின் தனநந்தரை தூக்கி எறிந்து ஆட்சியைக் கைப்பற்றி மவுரியா வம்சத்தையும் மௌரியப் பேரரசையும் நிறுவினார். மௌரியப் பேரரசு (பொ.ஊ.மு. 322-185), மவுரிய வம்சத்தினரால் ஆளப்பட்டது, இந்த அரசு புவியியல் ரீதியில், பெரிய ஆற்றல் வாய்ந்ததாகவும், பண்டைய இந்தியாவில் ஒரு இராணுவ ஆற்றல் வாய்ந்த பேரரசாக இருந்தது. இந்த நேரத்தில்தான், முதல் முறையாக துணை கண்டத்தின் முழு பகுதிகளும் ஒரே அரசாங்கத்தின் கீழ் இருந்தது. விதிவிலக்காக மௌரிய பேரரசுக்குள் அடங்காமல் இன்றைய தமிழ்நாடும் கேரளமான அன்றைய தமிழகம் (அந்த காலகட்டத்தில் இறைமையுள்ள ஆட்சியைத் தமிழகம் பெற்று இருந்தது) இருந்தது. பேரரசின் தலைநகரான பாடலிபுத்திரம் (தற்கால பாட்னா அருகே) இருந்தது.

சந்திரகுப்த மவுரியருக்குப்பின், அவரது மகன் பிந்துசாரர் ஆட்சிக்கு வந்தார். இவர் இன்றைய இந்தியாவின் தெற்கு, கிழக்குப் பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் தனது அரசை விரிவாக்கினார். பேரரசின் எல்லையாக வடக்கில் இமயமலை, கிழக்கில் தற்கால அசாம், மேற்கே தற்போதைய பாக்கித்தானைத் தாண்டி எல்லை சென்றது. பேரரசர்கள் சந்திரகுப்தர் பிந்துசார் ஆகியோர் பேரரசை இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் விரிவாக்கினர், ஆனால் கலிங்கக் குடியரசு இவர்களின் ஆட்சி எல்லைக்குள் உட்படாமல் இருந்தது.

மவுரியப் பேரரசின் மன்னராக பிந்துசார்ருக்குப்பின் அவரது மகன், அசோகர் ஆனார். அசோகர் தனது பேரரசை விரிவாக்க துவக்கத்தில் முயன்றார் ஆனால் கலிங்க படையெடுப்பின் போது ஏற்பட படுகொலைகளைக் கண்ட பின்னர், பௌத்த சமயத்தைத் தழுவி, போர் செய்வதைத் துறந்து, அகிம்சை வழியைமேற்கொண்டார். அசோகரின் கலிங்க வெற்றியோடு பேரரசின் இராணுவ விரிவாக்கத்தை நிறுத்தினார், ஒப்புமையளவில் அமைதியான, நல்லிணக்கமான, செழிப்பான ஆட்சிக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைதாங்கினார், இந்தியத் துணைக்கண்டத்தின் பாதுகாக்கப்பட்ட மிகப் பழமையான வரலாற்று ஆவணங்களில் ஒன்றான, அசோகரின் கல்வெட்டுகளில்,[14] கலிங்கப் போர் பற்றியும் அவரது ஆணைகள் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளன.[15][16][17]

 
பொ.ஊ.மு. 185 இல் சுங்கர் மரபினரின் காலத்திய ஆட்சிப்பரப்பு

அசோகர் பௌத்த சமயத்தை பரப்புவதில் ஆர்வம் கொண்டு, இலங்கை, கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும் புத்த கொள்கைகளை பரப்ப தகுதியான துறவிகளை அனுப்பியும், நிதி உதவிகளையும் அளித்தார். அசோகரின் ஆட்சியின் கீழ், இந்தியாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் வர்த்தகம் ஆசியா முழுவதையும் தாண்டி ஐரோப்பாவரை நீண்டது, மேலும் பெரிய பொருளாதார மற்றும் இராணுவ சக்தி மிக்க வளமான மற்றும் நிலையான பேரரசாகவும் இருந்தது. சாரநாத் தூணில் உள்ள அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதியானது, இந்திய தேசிய இலச்சினை ஆகும். அர்த்தசாஸ்திரம், அசோகரின் கல்வெட்டுகள் அசோகவர்தனா நூல் போன்றவை மௌரியர் கால வரலாற்றை அறிந்துகொள்ள உதவுக்கூடிய மூலங்களாக உள்ளன.

அசோகரின் ஆட்சி 50 ஆண்டுகள் தொடர்ந்தன. மவுரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் பிரகத்திர மௌரியன் ஆவார். இவர் காலத்தில் பேரரசின் பரப்பளவு அசோகரின் காலத்தில் இருந்ததைவிட கணிசமாக குறைந்து விட்டது, இவர் பௌத்த நம்பிக்கையில் உறுதியானவராகவே இருந்தார். இவரை இவரது போர்படைத் தளபதியான பிராமணர் கலத்தைச் சேர்ந்த புசியமித்திர சுங்கன் கொன்றுவிட்டு பொ.ஊ.மு. 185 இல் சுங்க வம்சத்தை நிறுவினார் இந்நிகழ்வு அசோகர் இறந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த்தது.

புசியமித்திர சுங்கன் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பௌத்த சமயத்தினர் அலை அலையாய் பல கொடுமைகளுக்கு உள்ளாயினர் என பௌத்த சமய நூல்கள் குறிப்பிடுகின்றன,[18] சான் மார்சலின் ஆய்வின்படி அதன் பிறகு இந்து சமயத்தின் எழுச்சியும் உண்டானது.[19] புசியமித்திர சுங்கன் காலத்தில்தான் பௌத்தர்கள் பெரும் துன்பங்களை அனுவித்தனர் அதன்பிறகான சுங்க வம்ச மன்னர்கள் பௌத்தர்களை அவ்வளவு துன்புறுத்தவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மத்தியப் பேரரசுகள் தொகு

குப்தர் காசுகள்
 
பாடலிபுத்திரத்தை தலையகராகக் கொண்ட குப்தப் பேரரசு
 
பாடலிபுத்திரத்துக்கு (தற்கால பாட்னா) உயர் கல்வி படிக்க வந்து வாழ்ந்த ஆரியப்பட்டருக்கு.[20] பல்கலைக்கழகங்களுக்கான வானியல், வானியற்பியல் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை
 
குப்த பேரரசு காலத்தில் காளிதாசன் சமசுகிருதத்தில் இயற்றிய சாகுந்தலத்தின் ஒரு காட்சியை விளக்கும் இரவிவர்மனின் ஓவியம்.

பொ.ஊ. 240 முதல் 550 வரையான காலகட்டத்தில் குப்த மரபினர் ஆட்சி புரிந்தார். குப்தா வம்சத்தின் தோற்றம் தெளிவற்றதாக உள்ளது. மகதத்தின் குப்தப் பேரரசு பற்றிய முதல் ஆதாரம் சீனப் பயணி யுவான்சுவாங்கின் குறிப்புகள் வழங்குகின்றன. அவர் பொ.ஊ. 672 இல் இந்தியா வந்து குப்த பேரரசின் நிறுவனராகக் கருதப்படும் மன்னர் ஸ்ரீகுப்தர் சீன புனித பயணிகளுக்காக ஒரு கோயிலை மிருகசிகவனா அருகே கட்டியது குறித்துக் கேள்விபடுகிறார். கடோடோத்கஜாவுக்கு (ஆட்சியாண்டு பொ.ஊ. 280-319), முதலாம் சந்திரகுப்தர் (மௌரிய பேரரசின் நிறுவனர் சந்திரகுப்த மௌவுரியருடன் (340-293 BC) குழப்பி கொள்ள கூடாது) என்ற மகன் இருந்ததார். ஒரு திருப்புமுனை பேரத்தில், முதலாம் சந்திரா குப்தர் மகதத்தின் ஆற்றல்மிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஒரு லிச்சாவிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

சந்திரகுப்தரை அடுத்து பொ.ஊ. 335 இல் சமுத்திரகுப்தர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார் அதைத் தொடர்ந்து பொ.ஊ. 380 இல் அவர் இறக்கும் வரை, சுமார் 45 ஆண்டுகளுக்கு அரசாண்டார். இவர் ஸ்ரீசாசத்ரா, மால்வா பத்மாவதி, யௌதேயர், அருச்சுனயானர்கள், மதுரா, ஆபீர நாடு ஆகிய இராஜ்ஜியங்களிலுள்ளத் தாக்கி, தனது பேரரசுடன் அவற்றை இணைத்துக்கொண்டார். 380 இல் அவர் இறக்கும்போது, அவரின் பேரரசின் ஆதிக்கத்தின்கீழ் இருபதுக்கும் மேற்பட்ட இராஜ்ஜியங்களை உள்ளடக்கி இருந்த்து. இவரது ஆட்சிப்பரப்பானது இமய மலையில் இருந்து நர்மதை ஆறு வரையிலும், மற்றும் யமுனை முதல் செய்ய பிரம்மபுத்திரா ஆறு வரை விரிவாடைந்து இருந்திது. இவர் தன்னை மன்னாதி மன்னர் என்று குறிப்பிட்டுக் கொண்டார். இவரை வரலாற்றாலர்கள் இந்திய நெப்போலியன் என குறிப்பிடுகின்றனர்.

சந்திரா குப்தருக்குப்பின் இவரின் மகனான இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கரமாதித்யா) ஆட்சிக்கு வந்தார் இவர் பொ.ஊ. 380 முதல் 413 வரை ஆட்சி செய்தார். இவர் அவரது தந்தையை விட சற்றே குறைவான வெற்றிகளையே பெற்றார் என்றாலும், தன் பேரரசை மேற்கு நோக்கியும் விரிவாக்கும் விதமாக சகர்கள், மால்வாவின் மேற்கு சத்ரபதிகள், சௌராட்டிர நாடு, குசராத்து ஆகியவற்றை பொ.ஊ. 409 வரையிலான காலகட்டத்தில் தோற்கடித்து வெற்றிகொண்டார். இரண்டாம் சந்திரகுப்தருக்குப்பின் அவரது மகன் முதலாம் குமாரகுப்தன் பட்டத்துக்கு வந்தார். மஹேந்த்ராதித்யாவின் என்று அழைக்கப்பட இவர் பொ.ஊ. 455 வரை ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சிப்பரப்பின் எல்லை நர்மதை பள்ளத்தாக்காக இருந்தது.

இம்மரபின் பெரிய ஆட்சியாளர்களில் இறுதியானவராக கந்தகுப்தர் அறியப்படுகிறார்.[21] இவர் தனக்கு அச்சுறுத்தலாக இருந்த புஷ்யமித்திரனை தோற்கடித்தார், ஆனால் பின்னர் வடமேற்கில் இருந்து, ஹெப்தலைட்டுகள் அல்லது ஹூணர்கள் போன்றோரின் ஆக்கிரமிப்பை எதிர் கொள்ளவேண்டியதாயிற்று. இவர் பொ.ஊ. 477 இல் நட்ந ஒரு ஹூனர் தாக்குதலை முறியடித்ததார். கந்தகுப்தர் பொ.ஊ. 487 இல் இறந்தார் அவரது மகன் நரசிம்மகுப்தர் அடுத்து ஆட்சிக்குவந்தார்.

குப்தப் பேரரசு பண்டைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் மற்றும் இராணுவப் பேரரசுகளின் ஒன்றாக இருந்தது. குப்தர் காலத்தை பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இந்திய காவிய யுகம் எனக் குறிப்பிடப்படுகின்றனர். குப்தர் பேரரசின் காலத்தை இந்திய அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, மொழிகள், இலக்கியம், தர்க்கம், கணிதம், வானியல், மதம், மெய்யியல் ஆகியவற்றில் பொற்காலம் என குறிப்பிடப்படுகிறது.[22]

குப்தப் பேரரசின் தலைநகரமாக பாடலிபுத்திரம் இருந்தது. குப்தப் பேரரசு மற்றும் மௌவுரிய பேரரசு ஆகியவற்றின் நிர்வாகத்திற்கும் இடையே வேறுபாடு இருந்தது, மௌவுரிய நிர்வாகத்தில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டு இருந்தது ஆனால் குப்தர் நிர்வாகத்தின் பொறுப்புகள் மேலும் பரவலாக்கப்பட்டு இருந்தது. பேரரசு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு மேலும் மாகாணங்கள் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. கிராமங்கள் சிறிய அலகுகளாக இருந்தன. பேரரசானது குஜராத், வட கிழக்கு இந்தியா, தென்கிழக்கு பாக்கிஸ்தான், ஒடிசா, வடக்கு மத்தியப் பிரதேசம், கிழக்கு இந்தியா ஆகியவற்றை கொண்டதாக இருந்தது. வழிபாடுக்கு அனைத்து வடிவங்களிலும் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது.

இக்காலத்தில் வானியலில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆர்யபட்டர் மற்றும் வராகமிகிரர் ஆகிய இரண்டு பெரிய வானியல் மற்றும் கணிதவியலாளர்களாக இருந்தனர். ஆர்யபட்டர் புவி சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் அது தன் அச்சில் சுழலுவதாகவும் கூறினார். ஆர்யபட்டரே, பூச்சியம் குரித்த கருத்தாக்கத்தைக் முதலில் கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது, ஆர்யபட்டரின் மிகவும் புகழ் பெற்ற படைப்பாக ஆர்யபட்டா நூல் உள்ளது. வராகமித்திரரின் மிக முக்கியமான பங்களிப்புகள் களஞ்சியமாகன பிருகத்சம்கிதம் மற்றும் பஞ்சசித்தாந்திகம் ஆகியன உள்ளன. இவர்கள் கால உலோகவியல் தொழில் நுட்பத்துக்கு ஆதாரமாக வைசாலியில் உள்ள இரும்புத் தூணைக் காணலாம் [23] மேலும் தில்லியின் புறநகர் பகுதியான மெஹ்ராலியிலும் உள்ள இது பீகாரைச் சேர்ந்தது அங்கிருந்து கொண்டுவரப்பட்டது.[24]

இக்காலத்தில் சமசுகிருத இலக்கியம் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரமாக காளிதாசரின் படைப்புகளான இரகுவம்சம், மாலவிகார்ணிமித்ரம், மேகதூதம், அபிஞான சாகுந்தலம், குமாரசம்பவரம் ஆகியவையும், சுத்ரகா எழுதிய மிரிச்சகதிகா, விஷ்ணுசர்மாவின் பஞ்சதந்திரம் ஆகியவையும் காம சூத்திரம் மற்றும் பாசாவின் 13 நாடகங்கள் இந்த காலத்தில் எழுதப்பட்டன.

குப்தர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்க பணியாக, இலவச மருத்துவமனைகளை நிறுவி அதை ஆதரித்தனர். உடலியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றில் ஆய்வு செய்ய வசதியாக சடலங்களை பயன்படுத்துவதில் அவற்றை எதிர்க்கும் சமயத் தலையீடுகள் தடுக்கப்படன, இதனால் வெட்டிச்சோதித்தல் மற்றும் உடற்கூறியல் ஊக்கம் அடைந்தது, இந்திய மருத்துவர்களின் மருந்தின் குணங்களும் சிறந்துவிளங்கின, அறுவைசிகிச்சை பிரசவம், எலும்பு அமைப்பு, தோல் ஒட்டறுவை போன்ற இந்திய மருத்துவத்துறை வளர்ச்சிகள் விரைவில் அரபு மற்றும் மேற்கத்திய உலகங்களால் ஏற்கப்பட்டன. ஆயுர்வேதம் முதன்மையான மருத்துவ முறையாக இருந்தது.

பாலப் பேரரசு இந்திய துணைகண்டத்தின் வட கிழக்குப் பிரதேசத்திலிருந்து ஆண்டுவந்த பௌத்த சமயத்தைச் சேர்ந்த அரச மரபாகும். பால (வங்காள மொழி: পাল) என்னும் சொல் காப்பவர் என்னும் பொருள் கொண்டது. இச் சொல் எல்லாப் பாலப் பேரரசர்களதும் பெயர்களோடு பின்னொட்டாகக் காணப்படும். இவர்கள் புத்த சமயத்தின் மஹாயான, தந்திரப் பிரிவுகளைப் பின்பற்றினர். கோபாலா என்பவர் மரபின் முதல் மன்னராக இருந்தார். இவர் ஜனநாயக தேர்தல் மூலம் பொ.ஊ. 750 இல் ஆட்சிக்கு வந்தார். இந்த நிகழ்வு தெற்காசியாவில் முதல் ஜனநாயக தேர்தலாக மகா ஜானபத காலத்தில் இருந்து தொடர்ந்த ஒன்றாக்க் கருதப்படுகிறது. இவர்களின் ஆட்சி பொ.ஊ. 750 இல் ஆட்சிக்கு வந்த இவர் தன்னுடைய கட்டுப்பாட்டை வங்காளம் முழுவதிலும் விரிவாக்கினார். இவருக்குப்பின் பின்வந்த தர்மபால (770-810), தேவபால (810-850) ஆகியோர் பேரரசை இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளில் மேலும் விரிவாக்கினர். இம்மரபினரின் ஆட்சி நான்கு நூற்றாண்டுகளுக்கு (பொ.ஊ. 750-1120) நீடித்தது.

பேரரசு தர்மபால மற்றும் தேவபால் ஆகியோரின் கீழ் பேரரசு அதன் உச்சநிலையை அடைந்தது. தர்மபால இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கு பகுதிகளிலும் பேரரசை விரிவுபடுத்தினர். தர்ம்பாலைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தேவபால், தன் அரசை தெற்கு ஆசியாவில் மற்றும் அதற்கு அப்பாலும் விரிவடையவைத்தார். இவரது பேரரசு கிழக்கில் அசாம் மற்றும் உத்கல நாடுவரை நீண்டும், வட மேற்கில் காம்போஜம் (இன்றைய ஆப்கானிஸ்தானம்) தெற்கில் தக்காணம் வரை பரவியிருந்தது. பாலர்களின் செப்பேடு தேவபாலவால் உத்கல நாட்டை அழித்தார், அசாமை வெற்றிகொண்டார், ஹூணர்களின் அகம்பாவத்தை அழித்தார், மற்றும் கூர்ஜர்ர்கள், திராவிட மன்னர்களை தாழ்த்தினார் என்று கூறிகிறது.

பாலர்கள் பல கோயில்களையும் கலைப் படைப்புகளையும் உருவாக்கினர், நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் விக்கிரமசீலா பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஆதரித்தனர். இந்த இரு பல்கலைக்கழங்களும் பாலர்களின் ஆட்சியின்கீழ் புகழின் உச்சிக்கு சென்றன. இவற்றில் உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் சேர்ந்து பயின்றனர். பீகார் மற்றும் வங்காளத்தின் மீது 11 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் பேரரசர் இராசேந்திர சோழன் படையெடுத்தார்.[25][26] பாலப் பேரரசு இறுதியில் சென் பேரரசின் தாக்குதலால் 12 ஆம் நூற்றாண்டில் சிதைந்தது. பாலப் பேரரசின் தலைநகரமாக பாடலிபுத்ரம் (நவீன பாட்னா) இருந்தது.

இடைக்காலம் தொகு

இடைக்காலம்

சீனாவின் புகழ்வாய்ந்த புத்தசமயத் துறவியான யுவான் சுவாங்கின் வருகையின் போது பீகார் இடிபாடுகளுக்கு உள்ளாகி இருந்தது, இதன்பிறகு 12 ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கைகளில் சிக்கி பீகார் மேலும் சேதமுற்று அவதிக்கு ஆளானது.[27] வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களின் வருகையால் இறுதியில் இந்தியத் துணைக்கண்டம் வெளிநாட்டாரால் அடிமைப்படுத்தப்பட்டது, இதனால் இடைக்காலத்தில் பீகார் மிகவும் நிச்சயமற்ற நிலையை அடைந்தது. கோரி முகமது இந்தியத் துணைக்கண்டத்தின் இப்பகுதியைப் பல முறை தாக்கினார். கோரி முகமதுவின் படைகள் நாளந்தா பல்கலைக்கழகம் உட்பட பல பெரிய புத்த கட்டமைப்புகளை அழித்தது.[28]

முஸ்லீம்களின் வருகை தொகு

குத்புத்தீன் ஐபகின் தளபதி முஹம்மது பின் பக்தியாவின் இஸ்லாமிய படையெடுப்பால் மகதத்தில் பௌத்தம் தன் இறுதிக்கட்டத்தை அடைந்தது, இவர்களின் படைகளால் மூலம் பல பௌத்த மடங்கள், விகாரைகள், நாளந்தா மற்றும் விகரமசீலா போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல அழிக்கப்பட்டன மேலும் ஆயிரக்கனக்கான புத்தத் துறவிகள் 12 ஆம் நூற்றாண்டில் படுகொலை செய்யப்பட்டனர்.[29][30][31][32][33]

இடைக்கால பீகாரின் சாசாராமில் இருந்து வந்த சேர் சா சூரியின் ஆறு ஆண்டுகால ஆட்சியின் போது பீகார் மகிமை பெற்றதாக இருந்தது. சேர் சா சூரி இந்தியத் துணைக்கண்டத்தின் நீளமான பெரும் தலைநெடுஞ்சாலையை அமைத்தார், இந்தச்சாலை கிழக்கே வங்காளத்தின் கல்கத்தாவில் தொடங்கி இந்தியாவின் வடக்கில் சென்று தற்போதைய பாக்கிஸ்தானின், பெஷாவரில் முடிகிறது. ஷேர் ஷாவால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், ரூபாய் மற்றும் சுங்க வரி அறிமுகம் போன்றவை இன்னும் இந்தியக் குடியரசில் பயன்படுத்தப்படுகின்றன. இவர் பாட்னா நகருக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக தனது தலைமையகத்தை அங்கு கட்டினார்.[34][35]

இந்து சமயத்தைச் சேர்ந்த பேரரசர் ஹெமு, ஒரு உணவு விற்பனையாளரின் மகனாவார், மேலும் இவர் ரேவாரியில் பொட்டாசியம் நைத்திரேட்டு விற்பனையாளராக இருந்தார். இவர் சூரி வம்சத்தின் சேர் சா சூரியின் இராணுவத்தின் தளபதியாகவும், முதலமைச்சராகவும் உயர்ந்ததார் [44] [45]. இவர் ஆப்கானியர்களுக்கு எதிரான 22 போர்களில் வென்றிருக்கிறார், பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் அக்பரின் படைகளை இரண்டு முறை தோல்வியுறச் செய்திருக்கிறார். 1556 ஆம் ஆண்டு தில்லியின் ஆக்ராவில், [46] தில்லி சிம்மாசனத்தை கைப்பற்றி வட இந்தியாவில் 'இந்து அரசை' நிறுவினார், தில்லி உள்ள புராணா கிலாவில் இவர் ஒரு குறுகிய காலத்திற்கு இருந்தார். என்றாலும் இவர் இரண்டாம் பானிபட் போரில் கொல்லப்பட்டார்.

முகலாயர் காலம் தொகு

1557 இல் இருந்து 1576 காலகட்டத்தில் அக்பர் முகலாய அரியனையைக் கைப்பற்றினார் அதன்பிறகு பீகார் மற்றும் வங்காளத்தை தமது பேரரசுடன் இணைத்துக்கொண்டார்.முகலாயர்கள் வீழ்ச்சியுற்ற காலத்தில், பீகார் வங்காள நவாப்புகளின் கட்டுப்பாடுக்குள் சென்றது. இந்தக் காலகட்டத்தில், உயர் வரிகளின் வடிவத்தின் ஆட்சியாளர்களால் பீகார் சுரண்டப்பட்டது. ஆனால் வங்காள நவாபால் அனுமதிக்கப்பட்ட வாணிகம், அந்தப் பிரதேசத்தை வளம் கொழிக்க வைத்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பெரிய விழாக்களில் ஒன்றான சோயின்பூர் விழா போன்ற, விழாக்களின்போது, இந்தியாவின் மிகப்பெரிய கால்நடைச் சந்தைகள் நடந்தன, இதில் அருகிலும் தொலைவிலும் இருந்து வரும் வர்த்தகர்கள் கலந்துகொள்ள தொடர்ந்து அனுமதிக்கப்பட்டனர்.

பொ.ஊ. 1509 இல் குரு நானக் பாட்னா சென்று பாட்னா அருகே உள்ள கிரிகாத்தில் பகத் ஜய்திமால் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்.[36] பின்னர் குரு தேக் பகதூர் 1666 இல் அவர் தன் குடும்பத்துடன் பாட்னா வந்தார் [37] சீக்கியர்களின் 10 மற்றும் கடைசி குருவான குரு கோவிந்த் சிங் 1666 இல் பாட்னாவில் உள்ள, பாட்னா சாஹிபில் பிறந்தார்.[38] அவுரங்கசீப்பின் பேரன் இளவரசர் ஆசிம்-உசு-சான் 1703. இல் பாடலிபுதிரத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[39] அசிம்-உசு-சான் 1704 இல் பாடலிப்புத்திரத்தின் பெயரை அசமாபாத் என பெயர் மாற்றம் செய்தார்.[40][41]

பிரித்தானியர் காலமும், தனி மாகாணமும் தொகு

1764 இல் பக்சார் சண்டை நடந்தது, இச்சண்டை நடந்த பக்சரானது பாட்னாவில் இருந்து 115 கிலோமீட்டர் தொலைவு கொண்டது, இதன் பின்னர் முகலாயர்களும், வங்காள நவாபும் வங்காள மாகாணத்திற்குள் உள்ளடக்கிய பெருமளவிலான பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தனர். இதில் தற்போதைய வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய இந்திய மாநிலங்களும் அடங்கும். இதன்பிறகு படிப்படியாக பீகார் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் வந்தது.

பிரித்தானிய அரசின் காலத்தில், பீகார் குறிப்பாக பாட்னா படிப்படியாக அது இழந்த தன் புகழைப் பெறத் தொடங்கியது பீகார் இந்தியாவின் கற்றல் மற்றும் முதன்மை வர்த்தக மையமாக எழுச்சியுற்றது. இந்த நிலையில், வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக பீகார் ஒரு பகுதியாக 1912 ஆம் ஆண்டு வரையில் இருந்து, பீகார் மற்றும் ஒரிசா ஆகியன தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டன. புதிய பீகார் மாகாணத்துக்கு பாட்னா தலைநகராக ஆக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Mishra Pankaj, The broblem, Seminar 450 - February 1997
  2. "The History of Bihar". Bihar Government website. Archived from the original on 2014-03-31.
  3. Witzel 1989.
  4. "Licchavi", Encyclopædia Britannica Online பரணிடப்பட்டது 23 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  5. 5.0 5.1 5.2 "Vaisali", Encyclopædia Britannica Online பரணிடப்பட்டது 23 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  6. Krishna Reddy (2003). Indian History. New Delhi: Tata McGraw Hill. பக். A107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-048369-8. 
  7. Mary Pat Fisher (1997) In: Living Religions: An Encyclopedia of the World's Faiths I. B. Tauris : London ISBN 1-86064-148-2 - Jainism's major teacher is the Mahavira, a contemporary of the Buddha, and who died approximately 526 BCE. Page 114
  8. Mary Pat Fisher (1997) In: Living Religions: An Encyclopedia of the World's Faiths I. B. Tauris : London ISBN 1-86064-148-2 - "The extreme antiquity of Jainism as a non-vedic, indigenous Indian religion is well documented. Ancient Hindu and Buddhist scriptures refer to Jainism as an existing tradition which began long before Mahavira." Page 115
  9. Bindloss, Joe; Sarina Singh (2007). India: Lonely planet Guide. Lonely Planet. பக். 556. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-74104-308-5. https://books.google.com/?id=T7ZHUhSEleYC&pg=PA556&dq=Vaishali#v=onepage&q=Vaishali. 
  10. Hoiberg, Dale; Indu Ramchandani (2000). Students' Britannica India, Volumes 1-5. Popular Prakashan. பக். 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85229-760-2. https://books.google.com/?id=DPP7O3nb3g0C&pg=PA208&dq=Vaishali#v=onepage&q=Vaishali. 
  11. Kulke, Hermann; Dietmar Rothermund (2004). A history of India. Routledge. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-32919-1. https://books.google.com/?id=TPVq3ykHyH4C&pg=PA57&dq=Vaishali&q=Vaishali. 
  12. Vin.i.268
  13. Radha Kumud Mookerji, Chandragupta Maurya and His Times, 4th ed. (Delhi: Motilal Banarsidass, 1988 [1966]), 31, 28–33.
  14. The Edicts of Ashoka are a collection of 33 inscriptions on the Pillars of Ashoka
  15. "The First Indian Empire". History-world.org. Archived from the original on 2012-05-15. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  16. http://www.buddhistchannel.tv/index.php?id=4,2658,0,0,1,0 Edicts of Ashoka at Shahbaz Garhi are among the oldest historical "documents" found on the subcontinent.
  17. http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html Edicts of Ashoka, which comprise the earliest decipherable corpus of written documents from India, have survived throughout the centuries because they are written on rocks and stone pillars.
  18. According to the Ashokavadana.
  19. Sir John Marshall, "A Guide to Sanchi", Eastern Book House, 1990, ISBN 81-85204-32-2, pg.38
  20. Roger Cooke (1997). "The Mathematics of the Hindus". பக். 204. "Aryabhata himself (one of at least two mathematicians bearing that name) lived in the late 5th and the early 6th centuries at Kusumapura (Pataliutra, a village near the city of Patna) and wrote a book called Aryabhatiya." 
  21. "Skanda Gupta (Gupta ruler) - Britannica Online Encyclopaedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  22. [1] Golden Age of India பரணிடப்பட்டது 4 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  23. "Creative Metal Work,Metal Origins History,Metal Work Techniques". Indiaheritage.org. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  24. Story of the Delhi Iron Pillar. By R. Balasubramaniam. Published by Foundation Books, 2005. ISBN 9788175962781
  25. The Making of India by A. Yusuf Ali p.60
  26. The Cambridge Shorter History of India p.145
  27. Scott, David (May 1995). "Buddhism and Islam: Past to Present Encounters and Interfaith Lessons". Numen 42 (2): 141–155. doi:10.1163/1568527952598657. 
  28. Historia Religionum: Handbook for the History of Religions By C. J. Bleeker, G. Widengren page 381
  29. Gopal Ram, Rule Hindu Culture During and After Muslim, pp. 20, "Some invaders, like Bakhtiar Khilji, who did not know the value of books and art objects, destroyed them in large numbers and also the famous Nalanda ..."
  30. The Maha-Bodhi By Maha Bodhi Society, Calcutta (page 8)
  31. Omalley L.S.S., History of Magadha, Veena Publication, Delhi, 2005, pp. 35.
  32. Smith V. A., Early history of India
  33. Islam at War: A History By Mark W. Walton, George F. Nafziger, Laurent W. Mbanda (page 226)
  34. Omalley L.S.S., History of Magadha, Veena Publication, Delhi, 2005, pp. 36, "Sher Shah on his return from Bengal, in 1541, came to Patna, then a small town dependent on Bihar, which was the seat of the local government. He was standing on the ban of the Ganges, when, after much reflection, he said to those who were standing by, "If a fort were to be built in this place, the waters of the Ganges could never flow far from it, and Patna would become one of the great towns of this country." The fort was completed. Bihar for that time was deserted, and fell to ruin; while Patna became one of the largest cities of the province. In 1620 we find Portuguese merchants at Patna; and Tavernier's account shows that a little more the a century after its foundation it was the great entrepot of Northern India "the largest town in Bengal and the most famous for trade..."
  35. Elliot, History of India, Vol 4
  36. "Takhat Shri Harimandirji Patna Sahib, Bihar". Takhatpatnasahib.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  37. "Gurdwara Guru Ka Bagh". Takhatpatnasahib.com. Archived from the original on 17 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  38. Owen Cole, William; Piara Singh Sambhi (1995). The Sikhs: Their Religious Beliefs and Practice. Sussex Academic Press. பக். 36. 
  39. "Patna at a Glance". Drdapatna.bih.nic.in. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  40. [2] பரணிடப்பட்டது 5 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம்
  41. Gilani, Najam (2007-02-07). "Thus Spoke Laloo Yadav". Archived from the original on 2008-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகார்_வரலாறு&oldid=3729440" இலிருந்து மீள்விக்கப்பட்டது