பீட் சீகர் (Pete Seeger, மே 3, 1919 – சனவரி 27, 2014) உலகெங்கும் முற்போக்கு இயக்கங்களில் பாடப்படும் நாம் வெற்றி பெறுவோம் (We Shall Over Come) என்ற சங்கநாதத்தை பிரபலப்படுத்தியவரும், ஆங்கில நாடோடிப்பாடல்களின் இதயத்துடிப்பு என்று போற்றப்பட்டவருமாவார் .[1]

பீட்ட சீகர்

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை தொகு

3.5.1919 அன்று நியூயார்க் நகரில் பிறந்தவர். 1937ம் ஆண்டில் தன்னை இளம் கம்யூனிஸ்ட் லீக் அமைப்பில் இணைத்துக் கொண்டார் . தனது 23ம் வயதில் 1942ம் ஆண்டில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் இவர் சேர்ந்தார்.இவர் 1948ம் ஆண்டில் தி வீவர்ஸ் என்ற கிராமியப்பாடல்கள் குழுவை ஐந்து நபர்களுடன் சேர்ந்து உருவாக்கினார். 1941ம் ஆண்டில் ஜெர்மனி சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்த பின் நேசநாடுகளுக்கு ஆதரவாக இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா பங்கு பெற வேண்டுமென்று இவர்கள் கூறினர். அதற்கு முன் இவர்கள் அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் தலையிடக்கூடாது என்று பாடி வந்தனர்.[1]வியட்நாம், ஈராக் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் போரை எதிர்த்து போராடியவர். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் அமெரிக்க நாடளுமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளிக்க மறுத்ததால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்.[2]

ஏகாதிபத்திய எதிர்ப்பும் , போராட்டங்களும் தொகு

சீகர் வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இயக்கம் நடத்தியவர். ஆயுத ஒழிப்பு தொடர்பாக சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வந்த இவர் , நிறவெறிக்கு எதிராக மார்ட்டின் லூதர் கிங் நடத்திய போராட்டத்தில் நேரிடையாக கலந்து கொண்டு அவருடன் இணைந்து நடந்தவர். அவருடைய பாடல்கள் அந்த இயக்கத்துக்கு உத்வேகம் அளித்தன.2007ம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரம் சீரழிவைக் கண்ட போது இவர் சுரண்டலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் தன்னார்வமாக கலந்து கொண்டார். அதே போல் வால் ஸ்ட்ரீட்டை நிரப்புவோம் இயக்கத்திலும் இவர் கலந்து கொண்டார். சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தார். ஹட்சன் நதியை தூய்மைப்படுத்த கோரி நடந்த போராட்டத்தில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். இவர் ஒரு பொதுவுடைமைவாதி என்பதால் மக்கார்த்தி காலகட்டத்தில் இவருடைய ஒளிபரப்புகளுக்கு அமெரிக்க அரசு தடைவிதித்தது. இவரை அமெரிக்காவின் எப்.பி.ஐ தொடர்ந்து கண்காணித்து வந்தது.[1]

வீ ஷேல் ஓவர்கம் தொகு

இவர் வீ ஷேல் ஓவர்கம் என்ற போர் கீதத்தை 1948ம் ஆண்டில் தான் எழுதி வெளியிட்ட பியூப்பிள்ஸ் சாங் என்ற புத்தகத்தில் அச்சிட்டு வெளியிட்டார். இது 1948ம் ஆண்டில் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் நடந்த சம உரிமை இயக்கத்தின் போர்ப்பரணியாக பாடப்பட்டது.இந்த போர்ப்பரணியில் தான் செய்த பங்களிப்பு பற்றி இவர் பின்னர் குறிப்பிடுகிறார். பாடல் முதலில் வீ வில் ஓவர்கம் என்று இருந்தது. அதில் வில் என்பதற்கு பதிலாக ஷேல் என்ற பதத்தை பயன்படுத்தியதுதான் தனது பங்கு என்றும் ஷேல் என்ற வார்த்தை வலுவாக ஒலிக்கக்கூடியது என்று இவர் காரணமும் சொன்னார்.[1]

சிறப்புகள் தொகு

தொழிலாளர் பேரணிகளில் பாடியவர் இவர். நாட்டுப்புறப்பாடல்கள் விழாக்களில் தலைப்பு செய்தியானவர். ஓபாமா முதல் முறையாக பதவியேற்ற போது தனது பேரன் டாவோ ரோட்ரிக்ஸ் சீகருடன் இணைந்து லிங்கன் நினைவகத்தின் படிகளில் நடந்த கச்சேரியில் பாடியவர்.பாஞ்சோ, கிடார், மாண்டலின், பியானோ, ரிகார்டர், டின் விசில், உகுலெலெ ஆகிய இசைக்கருவிகளை இசைக்கத் தெரிந்தவர்.பாஞ்சோ வாத்தியம் இவருடைய அடையாளமாக விளங்கியது. இவர் ஒரு சிறந்த பாடகர், பாடலாசிரியர், வானொலி தொகுப்பாளர். இவர் இட்லருக்கு எதிராகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.இவருக்கு உலகின் சிறந்த இசைவிருதான கிராமி விருது வழங்கப்பட்டது. யு.எஸ். ராக் அண்ட் ரோல் புகழரங்கில் இவருடைய திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.[1]

இறப்பு தொகு

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சீகர், தனது 94ஆம் வயதில் நியுயார்க் மருத்துவமனை ஒன்றில் சனவரி 27, 2014 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "உழைக்கும் மக்களின் பாடகன்". தீக்கதிர்: pp. 8. 5 பிப்ரவரி இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 2 மார்ச் 2014. 
  2. "இசைக் கலைஞர் பீட் சீகர் காலமானார்". தி இந்து. 29 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அமெரிக்க நாட்டுப்புற இசைக் கலைஞர் பீட்ட சீகர் காலமானார்". 28 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்_சீகர்&oldid=3577836" இலிருந்து மீள்விக்கப்பட்டது