மகாராஜா பதே சிங் அருங்காட்சியகம், வடோதரா

மகாராஜா பதே சிங் அருங்காட்சியகம் (Maharaja Fateh Singh Museum) இந்தியாவில் வதோதரா மாநிலத்தில் உள்ள மகாராஜாவின் அரண்மனைக்குள் (லட்சுமி விலாஸ் அரண்மனை ) அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும். [1]

மகாராஜா பதே சிங் அருங்காட்சியகம்
Gateway
Map
அமைவிடம்வடோதரா, இந்தியா
வலைத்தளம்wayanadmuseum.com

வடோதரா சிறப்பு தொகு

பரோடா என்றும் அழைக்கப்படும் வடோதரா குஜராத்தில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் ஆகும். மக்கள் தொகையைப் பொறுத்தவரை அகமதாபாத் மற்றும் சூரத்துக்கு அடுத்தபடியாக இந்த நகரம் வருகிறது. இந்நகரில் 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். இது அகமதாபாத் நகரின் தென்கிழக்குப் பகுதியில் விஸ்வாமித்ரி ஆற்றில் அமைந்துள்ளது. இது குஜராத்தின் கலாச்சார தலைநகரம் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இங்கு மகாராஜா அரண்மனை மற்றும் பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் இல்லம் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. வடோதராவில் உள்ள சுற்றுலா தலங்களின் அழகை கண்டு களிக்கவும் மகிழ்ச்சியுடன் தற்போது அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த நகரத்திற்கு வருகிறார்கள். நகரத்தில் பல்வேறு வகையான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் வடோதராவில் உள்ள அருங்காட்சியகங்கள் மிகவும் பார்க்க வேண்டிய இடங்களாகும். அவற்றில் முக்கியமான இடத்தைப் பெறுவது வடோதராவில் உள்ள மகாராஜா பதே சிங் அருங்காட்சியகம் ஆகும்.

கண்ணோட்டம் தொகு

 
குழந்தையாக மகாராஜா பதே சிங் ராவ் கெய்க்வாட்

முன்னர் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டடமானது மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. இந்த அழகான கட்டடம் இந்தோ சார்சனிக் கட்டடக்கலைப் பாணியில் அமைந்ததாகும். இந்த அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற கலைஞர்களான ரபேல், டிடியன், முரிலோ ஆகியோரின் படைப்புகளும் உள்ளன. [2] தற்போது மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமான கலைப் படைப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் மகாராஜா சர் மூன்றாம் சயாஜிராவ் கெய்க்வாட் இந்தியாவுக்கு வெளியே மேற்கொண்ட ஏராளமான பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட பலவிதமான கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள முக்கிய கலைப் படைப்புகளாக ஐரோப்பிய மற்றும் இந்திய கலைஞர்களின் ஓவியங்கள், ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களின் தொகுப்பு உள்ளிட்டவற்றைக் காணலாம். அப்போதைய பரோடாவின் மகாராஜாவால் சிறப்பாக அப்பணிக்காக நியமிக்கப்பட்ட பெருமையைக் கொண்டவர். ராஜா ரவி வர்மா ஆவார். அங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்களில் ராயல் குடும்பத்தின் உருவப்படங்களும் புகழ்பெற்ற இந்து புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களும் முக்கியமானவையாகும்.

இந்த அருங்காட்சியகத்தில் பளிங்கு மற்றும் வெண்கலத்தில் ஆன சிற்பங்களின் தொகுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மகாராஜாவால் நியமனம் செய்யப்பட்ட மிகச் சிறந்த ஓவியக்கலைஞர்களால் வெண்கலத்தில் வடிக்கப்பட்ட மிகச் சிறந்த ஓவியங்களின் படிகளும் இங்கு காட்சியில் உள்ளன. அவ்வாறே சில ஓவியங்களின் அசலும் இங்கு காணப்படுகின்றன. மகாராஜாவால் நியமனம் செய்யப்பட்ட கலைஞர்களில் ஒருவரான இத்தாலிய கலைஞரான ஃபெலிச்சி என்பவருடைய படைப்புகள் அருங்காட்சியகத்தில் மட்டுமன்றி லட்சுமி விலாஸ் அரண்மனையையும் அலங்கரிக்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஃபெலிச்சியின் படைப்புகளில் சிலவற்றை அங்கு அமைந்துள்ள பொது பூங்காவில் காணலாம் (அங்குள்ள சயாஜி கார்டன் உள்ளூர் மக்களால் காமதி பாக் என்றும் அழைக்கப்படுகிறது).

இந்த அருங்காட்சியகத்தில் ஒரு ஓரியண்டல் காட்சிக்கூடம் உள்ளது, அதில் ஜப்பானிய மற்றும் சீன சிற்பங்கள் மற்றும் மகாராஜா இந்த நாடுகளுக்குச் சென்றபோது சேகரிக்கப்பட்ட பிற படைப்புகள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

மேலும் காண்க தொகு