மரியாவின் பிறப்பு

மரியாவின் பிறப்பு என்பது இயேசு கிறித்துவின் தாயான தூய கன்னி மரியாவின் பிறந்த நாளைக் குறிக்கிறது. திருமுறை சாராத கி.பி.2ஆம் நூற்றாண்டு நூலான யாக்கோபு நற்செய்தியில் இருந்து அவரது பெற்றோரின் பெயர் யோவாக்கிம் - அன்னா[2] என்று அறிந்து கொள்கிறோம். மரியாவின் பிறப்பு விழா செப்டம்பர் 8ந்தேதி கொண்டாடப்படுகிறது.

கன்னி மரியாவின் பிறப்பு
கியோட்டோ (1305) வரைந்த கன்னி மரியாவின் பிறப்பு ஓவியம், இத்தாலி.
தூயவர், பாவமற்றவர்,[1] மாசற்றவர்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்
திருவிழாசெப்டம்பர் 8 (உலகளாவியது)

யாக்கோபு நற்செய்தி தொகு

கி.பி.2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாக்கோபின் முதல் நற்செய்தி, கன்னி மரியாவின் பிறப்பைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறது:

எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான யோவாக்கிம் (சுவக்கீன்), அவரது மனைவி அன்னா (அன்னம்மாள்) இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர்.[3] இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அவர்களுக்கு முன்னறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியா (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.

மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாவை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அங்கிருந்த கல்வி சாலையில், மரியா எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியா ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.

கிறிஸ்தவ மரபு தொகு

மரியாவின் பிறப்பு பற்றி யாக்கோபின் முதல் நற்செய்தியில் காணப்படும் செய்தியே, திருச்சபையின் மரபாக இந்நாள் வரை நிலைத்திருக்கிறது. அத்துடன் மரியாவின் பிறப்பு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் பழங்காலம் முதலே நம்பப்படுகிறது. இறைமகன் இயேசுவின் தாயாகுமாறு, அன்னாவின் வயிற்றில் கன்னி மரியா கருவாக உருவானபோதே பிறப்புநிலைப் பாவமின்றி உற்பவித்ததாக கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கிறது.

பிறப்பு விழா தொகு

கத்தோலிக்க திருச்சபையில் இயேசுவின் பிறப்பைப் போன்று, கன்னி மரியா, திருமுழுக்கு யோவான் ஆகியோரின் பிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. கன்னி மரியாவின் பிறப்பு விழா செப்டம்பர் 8ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.[4] கிழக்கு மரபுவழி திருச்சபையில் ஜூலியன் நாட்காட்டியின்படி செப்டம்பர் 8ல் அதாவது கிரகோரியன் நாள்காட்டியில் செப்டம்பர் 21ந்தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள் தொகு

  1. Stanza # 833
  2. "Roten S.M., Johann G., The History of the Liturgical Celebration of Mary's Birth". Archived from the original on 2012-09-09. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.
  3. ""The Birth of the Blessed Virgin Mary", Catholic News Agency". Archived from the original on 2017-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-06-07.
  4. Calendarium Romanum (Libreria Editrice Vaticana, 1969), p. 102
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாவின்_பிறப்பு&oldid=3731009" இலிருந்து மீள்விக்கப்பட்டது