மார்க்சியப் பொருள்முதல் வாதம்

பொருள்முதல்வாதக் கொள்கை மீதான கார்ல் மார்க்சின் விரிவான விளக்கமே மார்க்சியப் பொருண்முதல் வாதம் (Historical materialism) எனப்படுகிறது.

மரபான பொருண்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருண்முதல் வாதத்தினை இயக்கவியல் தத்துவத்தோடு இணைத்து இயங்கியற் பொருண்முதல் வாதமாக வளர்த்தெடுத்தார்.

இயக்கவியற் பொருண்முதல் வாதமும் வரலாற்றுப் பொருண்முதல் வாதமும் மார்க்சிய லெனினிய தத்துவ ஞானத்தின் அடிப்படை பகுதிகள் ஆகும். சமூகத்தின் வாழ்க்கையை ஆராய்கின்ற பகுதி வரலாற்றுப் பொருள் முதல் வாதமாகும்.

பின்னணி தொகு

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காண்ட் முதலான தத்துவஞானிகள் பொருள் முதல்வாதத்தை இயக்க மறுப்பியலுடன் பயன்படுத்தி வந்தார்கள். பொருள் முதல்வாதத்தை இயங்கியலுடன் இணைத்து இயக்கவியல் பொருள் முதல் வாத தத்துவத்தை மார்க்ஸ் உருவாக்கினார்.

பொருண்முதல் வாதமும் கருத்துமுதல் வாதமும் தொகு

மனம், கடவுள், ஆன்மா எனும் கருத்துருவங்களே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம் படியானது எனும் கருத்து முதல் வாதிகளின் முடிவினை முற்றாக கழித்ததாக பொருண்முதல் வாதத் தத்துவம் அமைகிறது.

கடவுள், மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித எண்ணம் ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது எனக் கருதுவதே பொருண்முதல் வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாகக் கழித்து விலக்குகிறது.

முக்கியக் கூறுகள் தொகு

மார்க்சின் பொருள்முதல்வாதக் கோட்பாடு பின்வரும் முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கிறது.

  • உலகம் என்பது அதன் தன்மையிலேயே இயல்பிலேயே ஒரு பொருளாக அமைந்துள்ளது.
  • பொருள் அடிப்படையானது. மனம் அல்லது கருத்து இரண்டாம் படியானது. சிந்தனை என்பது மூளை என்ற பொருளின் விளைவு. மூளைக்கு வெளியில் சிந்தனை இருக்க முடியாது. இல்லவும் இல்லை.
  • நமது உணர்வு நிலை, அதாவது சிந்தனை உட்பட அனைத்தினதும் தோற்றுவாய்கள் வாழ்வின் பொருள் சார்ந்ந்த விடயங்களிற் காணப்படக்கூடியனவும் நம்மைச்சூழவுள்ள பொருட்களை எதிரொளிப்பனவும் ஆகும்.
  • நடைமுறை அனுபவம்தான் எதற்கும் உரைகல். அதாவது பரிசோதித்தலும் உழைத்தலும்தான். நாம் கொண்டுள்ள கருத்தை சரி என்று நிரூபிக்க அதை செய்து காட்ட வேண்டியிருக்கிறது.
  • இப்போது பொருள் அதன் மிகுவுயர்ந்த வடிவாக வளர்ந்துள்ளது. அதை நாம் மனம் என்கிறோம். பொருள் சார்ந்த எச்சூழலிலிருந்து மனம் தோன்றியதோ, அதை மாற்றும் வலிமை மனதிற்கு இப்போது உண்டு. இந்த ஊற்று மூலத்தினின்றே எல்லா கருத்துக்களும் எழுந்தன.
  • பொருள் புறவயமானதும், மனிதனது மனவிருப்பினின்று தனித்து இயங்கும் தன்னுரிமையுடையதுமாகும்.அதேவேளை பொருள் அனைத்துமே அறியப்படக்கூடியனவாகும். அறிய இயலாததெனவும், "தன்னளவிலான பொருள்" எனவும் எதுவுமே இல்லை. இதுவரை அறியப்படாதனவே உள்ளன. மனிதனது ஆற்றலைக் கடந்தது எனவோ , இயற்கையை மீறியது எனவோ எதுவும் இருக்க இயலாது.