முத்துநிலவன்

முத்து பாஸ்கரன் எனும் இயற்பெயா் கொண்ட நா. முத்து நிலவன் (ஆங்கிலம்:Muthu Nilavan) என அழைக்கப்படும் . தமிழ்நாட்டின் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார்.[1] 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[2]

முத்துநிலவன்
பிறப்புநா. முத்து பாஸ்கரன்(முத்துநிலவன்)
மே 11, 1956
பட்டுக்கோட்டை,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்புதுக்கோட்டை,
தமிழ்நாடு.
தேசியம்இந்தியர்
கல்விபுலவர்,
முதுகலை தமிழ்,
இளங்கலை கல்வியியல்
பணிதமிழாசிரியர் (பணி நிறைவு)
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்வே.மு. நாகரெத்தினம் (தந்தை),
கோவிந்தம்மாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
மல்லிகா
பிள்ளைகள்மகள் - 2, மகன் - 1
உறவினர்கள்சகோதரர்கள் -3
வலைத்தளம்
https://valarumkavithai.blogspot.com/

வரலாறு தொகு

புதுக்கோட்டையில் வசிக்கும் கவிஞர்களுள் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார். மிகச் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர், ஊடகங்களில் பேசுதல், எழுதுதல், மற்றும் சமூகத்தளங்களில் இயங்குதல் ஆகியவற்றால் அறியப்படுபவர். மேலும் 2014 ஆம் ஆண்டு மே 17, 18 ஆகிய இரண்டு நாட்களில் வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு நடத்தப்பெற்ற இணையதளப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு இணையதளப் பயன்பாடுகள், வலைத்தளங்கள் உருவாக்குதல் குறித்து பயிற்சியளித்துள்ளார்.[3] 11 அக்டோபர் 2015இல் புதுக்கோட்டையில் நடந்த “வலைப்பதிவர் திருவிழா”வை கணினித் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து நடத்தியவர்.

இவர் தொடர்ந்து தமிழாசிரியர் சங்கத்தின் மூலமாகவும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாகவும் இருமுறை பயிற்சிகளை தந்திருக்கிறார்.

முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அருள்முருகனின் வழிகாட்டுதலின்படி இப்பயிற்சிகளை தமிழகத்தின் பெரும் இலக்கிய ஆளுமைகளும், பதிவர்களும் ஆசிரியர்களுக்கு தந்தனர்.[4]

‘மனிதகுல வரவாற்றை எழுத இலக்கியச் சான்று தரும் உலகின் ஒரே இலக்கியத் தொகுப்பு, நமது சங்க இலக்கியம் தான். கவிதையில் வடிவம் ஏன் மாறிமாறி வந்தது எனும் எனது ஆய்வுக்கும் அரிய கருவூலம் தமிழரின் பெருஞ்சொத்து. இன்று மட்டுமல்ல இனிவரும் தலைமுறைக்கும் வாழ வழிகாட்டும் பழந்தமிழா் காலப் பெட்டகம். இன்றைய பிள்ளைகள் விரும்பும் வகை இதன் சாரத்தை கொடுக்க வேண்டியது அவசியம்” என்று கூறும் எழுத்தாளர். நா.முத்துநிலவன் கட்டுரை, கவிதை, சிறுகதை, பாடல், நாடகம், ஓவியம், இலக்கிய ஆய்வு, வரலாற்று ஆய்வு, இணையத் தமிழ் மேடைப் பேச்சு எனப் பல்வேறு தளங்களில் வலம் வரும் எழுத்தாளர்ஆவார்.

குழந்தைப் பருவத்தில் தந்தையின் காவல்துறைப் பணி மாறுதல் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு ஊா் மாறிச் செல்ல இவரது பள்ளிப் படிப்பும் அப்படியே பலப்பல ஊா்களில தொடர, சிறு வயதிலேயே உலக அனுபவக் கல்வியும் இணையப் பெற்றவர். மூன்றாம் வகுப்பு ஆசிரியா்கள் சிபாரிசில் அதிராம்பட்டினம் நூலகத்தில் குழந்தைகள் இலக்கியங்களை தேடித் தேடிப் படிக்க தொடங்கினார். கவிஞரின் தந்தைக்கு, மகனை மருத்துவா் ஆக்குவது நோக்கம். அதனால் 11ஆம் வகுப்பில் வரலாற்றுப் பிரிவில் தமிழ்வழியில் படித்தவரை, புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அறிவியல் பிரிவில் ஆங்கில வழியில் சேர்த்துவிட்டார். இயற்பியலில் இரண்டு மதிப்பெண்ணில் தோல்வி!   பிறகு 11ஆம் வகுப்புத் தமிழ் மதிப்பெண்னை வைத்து தான் விரும்பிய தமிழ்ப் புலவா் படிப்பில், மாதம் நாற்பதுருபாய் உதவித் தொகை தந்த திருவையாறு அரசர் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து விட்டார். கல்லூரிக் காலத்தில் அனைத்துக் கல்லூரி இலக்கியப் போட்டிகளில் ஏராளமான முதற்பரிசுகளைப் பெற்றார்.

முத்துப் பேட்டை தா்மலிங்கம் நடத்திய தஞ்சை அமுதம் இதழில் இலக்கியக் கட்டுரைகள், புதுதில்லி சாலை இளந்திரையன் நடத்தி வந்த அறிவியக்கம் மாத இதழில் ஓராண்டு தொடராக வந்த ”ஒரு காதற் கடிதம்” , மறைமலை அடிகள் நூற்றாண்டை ஒட்டிய போட்டிக்காக எழுதிய “மறைமலை அடிகள் பிள்ளைத் தமிழ்” ஆகியவை கல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள். தமிழியக்க வழக்கத்தின் படியாக நா.முத்துநிலவன் எனும் புனை பெயரில் எழுதத் தொடங்கினார். 45 ஆண்டுத் தோழமையின் தொடர்ச்சியாக, இவருக்குப் பெயர் சூட்டிய  செந்தலை ந.கவுதமன் தலைமையில், இவர் மகள் திருமணம் நடந்தது.

1975இல் மாநில அளவில் மதுரையில் தமுஎச தொடங்கிய ஆண்டில் இவர் திருவையாற்றில் கிளை தொடங்கி அதன் முதல் செயலரானார். படிப்புக்குப் பிறகு செம்மலா், கல்கி, தினமணி,  தீக்கதிர், ஜனசக்தி, இந்து தமிழ், கணையாழி மற்றும் இணையம் என படைப்பும் தொடர்கிறது.

படைப்புகளில் கல்வி மற்றும் தமிழ் இலக்கிய-இலக்கண ஆய்வு அடிப்படையாக அமைந்துள்ளது. இவரது நூல்களில் ”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” தனித்த வரவேற்பினைப் பெற்று ஐந்தாண்டில். ஐந்து பதிப்புக் கண்டது. . இவரது வாழ்நாள் லட்சியமாக “கவிதையின் கதை” எனும் பெருநூலை எழுதிவருகிறார். அடுத்த ஆண்டு வெளிவரும்.

1978இல் புதுக்கோட்டை வந்தவுடன் தமுஎச கிளையைத் தொடங்கி, முதல் கிளைச் செயலர், மாவட்டச் செயலர், மற்றும் மாநிலப் பொறுப்பு வகித்த இவரது தமுஎச அமைப்புப் பணிகள் இன்றும் தொடர்கின்றன. அறிவொளி இயக்கத்தில், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றியதை வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக நினைக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தலைமையில் “கணினித் தமிழ்ச்சங்கம்” தொடங்கி, அதன் வழி இணையத் தமிழ்ப் பயிற்சிவகுப்புகளை நடத்தி வருகிறார். 2015 இல் புதுக்கோட்டையில் நடந்த "வலைபதிவர் திருவிழா”வை கணினித் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஒருங்கிணைத்து நடத்தியவர்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் நிர்வாகிகளில் ஒருவராக 3ஆண்டுகள் நடத்தியிருக்கிறார். திண்டுக்கல் ஐ.லியோனியின் முக்கியப் பேச்சாளராக, தமிழகத்தின் பெரும்பாலான ஊா்கள், இந்தியாவின் பற்பல முக்கிய நகரங்கள், மும்பை, கொல்கத்தா மற்றும் இலங்கை, சிங்கப்பூா் மலேசியா அரபு நாடுகள், குவைத், மஸ்கட் ஜாம்பியா, சிசிலிஸ் போன்ற நாடுகளிலும் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பேசியிருக்கிறார்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகு

தமிழகத்தில் பொதிகை, சன், கலைஞர், விஜய், ஜெயா, பாலிமர், உள்ளிட்ட பெரும்பாலான தொலைக்காட்சிகளும், உள்ளூர் தனியார் தொலைக்காட்சிகளும் நடத்தியுள்ள இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.[2]

நூல்கள் தொகு

  1. புதிய மரபுகள் (கவிதைத்தொகுப்பு),[5] அன்னம் பதிப்பகம், 2ஆம் பதிப்பு, 2014
  2. 20ஆம் நூற்றாண்டு இலக்கியவாதிகள், (திறனாய்வு), 1995
  3. நேற்று ஆங்கிலம் இன்று தமிழ் (கட்டுரைத்தொகுப்பு), 2003
  4. நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவோம் பேசுவோம், 2008
  5. முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே, 2014
  6. கம்பன் தமிழும் கணினித்தமிழும், 2014
  7. புதிய மரபுகள், 2014
  8. இலக்கணம் இனிது, பாரதி புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு, சனவரி 2021
  9. நீட் தேர்வு, புதிய கல்வி யாருக்காக -2018.
  10. இலக்கணம் இனிது, 2021
  11. அறிவொளி மாவட்ட மலர் (தொகுப்பாசிரியர்)-1991
  12. உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு(தொ-ர்)-2015
  13. “வீதி” கலைஇலக்கியக் கழக 50ஆம் நிகழ்வு மலர்-2019
  14. “கவிதையின் கதை” (தமிழ்க் கவிதை வரலாறு- அச்சில்)

வெளிநாட்டுப் பயணங்கள் தொகு

35 ஆண்டுகளாக இலக்கிய, பட்டிமன்றப் பேச்சாளராக தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்கள், இந்தியாவில் புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற மாநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட், மஸ்கட், கத்தார், குவைத், ஜாம்பியா, சிசிலிஸ் போன்ற நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.[2]

விருதுகள்/சிறப்புகள் தொகு

  • பாரதிதாசன் விருது (கவிஞர் மு.மேத்தா அவர்களிடமிருந்து)
  • சிறந்த கவிதைத்தொகுப்பிற்கான விருது (தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம், எட்டயபுரம், 1993)
  • கல்கி நினைவு சிறுகதைப்போட்டி விருதுகள் (இரு முறை)
  • கவிதை உறவு அமைப்பின் கல்வியியல்-இளைஞர் நல நூலுக்கான முதல்விருது (முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே நூலுக்காக) [6]
  • கம்பன் தமிழும் கணினித்தமிழும் நூலுக்கான விருது (திருப்பூர் தமிழ்ச்சங்கம், 24ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா, திருப்பூர், 2016)
  • பாரதிதாசன் விருது (கவிஞர் மு.மேத்தா அவர்களிடமிருந்து)
  • சிறந்த அறிவொளி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விருது-1991
  • இவரது “புதிய மரபுகள்” தொகுப்பு, 1995 முதல் 15ஆண்டுக்காலம் மதுரைப்     பல்கலை எம்ஏ தமிழ் வகுப்புக்குப் பாடநூலாக இருந்தது.
  • அறிவொளி இயக்கத்திற்காக இவர் எழுதிய “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும்   தங்கச்சி” பாடல் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டது.
  • 985, ஆம் ஆண்டு ஆசிரியர்-அரசு ஊழியர் (ஜேக்டீ) இயக்கப் போரில் அதிகபட்சமாக (புதுக்கோட்டை) சிறையிருந்தவர்களில் இவரும் ஒருவர்.
  • தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடநூல் ஆக்கக் குழுவில் 2008, 2018ஆம்    ஆண்டுகளில் முறையே 6, 9ஆம்வகுப்பு ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார்.

பேட்டிகள் தொகு

  • இணையத் தமிழால் இணைவோம் [7]

மேற்கோள்கள் தொகு

  1. "நா. முத்து நிலவனின் வளரும் கவிதை". விகடன். 2011. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 முத்துநிலவனும் முழுநிலாக்கோட்டையும், முத்துநிலவன் நேர்காணல், தமிழ் நெஞ்சம், மார்ச் 2018, பக்.21-25
  3. "நா. முத்துநிலவனின் பங்களிப்புகள்". malarum.com. Archived from the original on 2014-05-23. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  4. "முத்துநிலவன்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 10 சூலை 2014.
  5. "புதிய மரபுகள்". Archived from the original on 2018-01-14. பார்க்கப்பட்ட நாள் 2014-10-01.
  6. தினமணி, 20.3.2014
  7. "புதிய புத்தகம் பேசுது, மலர் 13, இதழ் 10, டிசம்பர் 2015, பக்.46-49". Archived from the original on 2016-01-12. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துநிலவன்&oldid=3587929" இலிருந்து மீள்விக்கப்பட்டது