முப்பத்தாறு தத்துவங்கள்

தத்துவங்கள் 36 என்பவை, உலகின் தோற்றம், பிரபஞ்சத்தின் அமைப்பு என்பவற்றை விளக்கும் சைவ மெய்ஞ்ஞானத்தின் எண்ணக்கருக்களில் ஒன்று ஆகும். பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருட்கள் தத்துவங்கள் எனப்படுகின்றன. இருபத்துநான்கு என்றும் முப்பத்தாறு என்றும் தொண்ணூற்றாறு என்றும் இந்த தத்துவங்களைப் பல வகைகளில் கூறுவதுண்டு.[1] குறிப்பாக சாங்கிய யோகத்தில் 24 தத்துவங்களும் சைவநெறியில் 36 தத்துவங்களும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

அறிமுகம் தொகு

சைவ சித்தாந்தத்தின் படி, மும்மலங்களில் ஒன்றான மாயை, பதியால் இயக்கப்படும் போது, இந்த 36 தத்துவங்களும் படிப்படியாகத் தோன்றுகின்றன.[2] இந்த மாயாமலமானது, சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்று மூன்றாகப் பிரிந்து, அவை ஒவ்வொன்றிலுமிருந்து, முறையே ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என, மொத்தம் முப்ப்பத்தாறு தத்துவங்கள் தோன்றுகின்றன. சுத்தமாயையிலிருந்து தோன்றும் ஐந்தையும், "சிவதத்துவம்" என்றும், அசுத்தமாயையிலிருந்து தோன்றும் ஏழையும் "வித்தியாதத்துவம்" என்றும், பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் இருபத்து நான்கையும் "ஆன்ம தத்துவம்" என்றும் வகைப்படுத்துவர்.[3]

 
36 தத்துவங்கள் - ஓர் எளிய வரைபடம்.

சிவ தத்துவம் ஐந்து தொகு

  • நாதம் - தூய அறிவாலான பரம்பொருளின் முழுமையான நனவிலி நிலை. இதுவே பரசிவ வடிவம் ஆகும்.
  • விந்து - சக்தி, இயங்கிக் கொண்டிருக்கும் கிரியா சக்தி. அந்த இயக்கத்தாலேயே, சிவத்துடன் இணைந்து ஏனைய தத்துவங்களை உருவாக்க ஆரம்பிக்கும் இறைவனின் திருவருட்சக்தியின் நிலை ஆகும்.
  • சாதாக்கியம் - சதாசிவன். சிவ-சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் காணப்படும். ஏனைய தத்துவங்களின் தோற்றம் தூண்டப்படும்.
  • ஈசுரம் - மறைத்தற் சக்தியான மகேசுரன். செயலற்ற நிலையில் இருக்கும் ஆன்மாக்களை மறைத்தலுக்குள்ளாக்கும் செயல்பாடு ஆரம்பமாக, அதனூடே மறைவாக இறையறிவும் இயங்கிக் கொண்டிருக்கும்.
  • சுத்த வித்தை - படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கு அடிப்படையான இறைதத்துவம். இதன்போது, இறையறிவு முழுமையாகச் செயற்பட, செயல் (கிரியாசக்தி) பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும்.

உயிர்கள் மீது கருணைகொண்டு, செயலற்று இருக்கும் "இறை" எனும் கருதுமம், மெல்ல மெல்லக் கீழிறங்கி வருவதை இப்படிநிலை காட்டுகின்றது. ஈசுவர தத்துவமானது, ஈடேறாத ஆன்மாக்களை சுத்த வித்தையில் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழன்று கொண்டிருக்கச் செய்யும். பக்குவப்பட்ட ஆன்மாக்கள், மேலே சாதாக்கிய தத்துவத்தை அடைந்து மலங்களிலிருந்து விடுதலை பெறும். பின், விந்து தத்துவம் ஆன்மாவை திருவருட்சக்தியில் நனைத்து, முக்திக்கு அழைத்துச் செல்லும். இறுதிப் பரிபூரண நிலையான சிவதத்துவமாம் நாதத்தில், ஆன்மா மோட்சம் பெறும்.[4]

வித்தியா தத்துவம் ஏழு தொகு

இவை அசுத்த மாயையிலிருந்து தோன்றுபவை. செயலற்றுறங்கும் ஆன்மாக்களின் செயற்பாட்டுக்கான கருவிகளாக வித்தியா தத்துவங்கள் விளங்குகின்றன.

  • காலம்
  • நியதி
  • கலை
  • வித்தை
  • அராகம்
  • மாயை

எனும் கஞ்சுகங்கள்(சட்டை) ஆறுடன்,

ஒன்றும் சேர்ந்து, வித்தியா தத்துவங்கள் ஏழு ஆகின்றன.

இந்த வித்தியா தத்துவங்கள் தொழிற்படுவதற்கு, சிவ தத்துவங்கள் அவசியமாகும். காலம், நியதி, கலை எனும் மூன்றும் விந்தினாலும், வித்தை, சுத்த வித்தையாலும், அராகம் ஈசுரனாலும், மாயம் நாதத்தினாலும், புருடன் சதாசிவத்தினாலும் இவ்வாறு இயக்கப்படுகின்றன.[5]

ஆன்ம தத்துவம் இருபத்துநான்கு தொகு

இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களுமே, உலகத்தினதும் உயிர்களினதும் அடிப்படை ஆகும். சிவதத்துவத்தால், வித்தியா தத்துவம் தூண்டப்பட்டு, ஆன்மா இயங்குவதற்கான கருவிகள் வழங்கப்பட்டால் மட்டும் போதாது. அவ்வாறு இயக்கப்படுவற்கான பௌதிக உடலையும் அதுசார்ந்த பொறிகளும் ஆன்மாக்கு அவசியமாகின்றன. பஞ்சபூதங்களும், ஐம்பொறிகளும் இன்னும் ஒன்பது கருவிகளும், வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆன்ம தத்துவத்தில் அடக்கப்பட்டிருக்கின்றன.[6]

ஐம்பூதங்கள் ஐந்து தொகு

  • நிலம்
  • காற்று
  • நீர்
  • தீ
  • ஆகாயம்

ஆகிய ஐம்பருக்களும் ஆகும். மனித உடல் ஐம்பருக்களால் ஆனது என்பது சைவர்தம் நம்பிக்கை.

தன்மாத்திரைகள் ஐந்து தொகு

  • சுவை
  • ஒளி
  • ஊறு (தொடுகை)
  • ஓசை
  • நாற்றம் (மணம்)

என்னும் ஐந்தின் வகைகளும் தன்மாத்திரை ஐந்து ஆகும்.

கர்மேந்திரியங்கள் ஐந்து தொகு

  • பற்றுதல் (பாணி)
  • பதித்தல் (பாதம்)
  • படைத்தல் (உபத்தம்)
  • பலுக்கல் (வாக்கு)
  • கழித்தல் (பாயு)

எனும் ஐந்தும் ஆகும். கன்மம் என்றால் செயல். மனித உடல் செய்யும் ஐந்து செயல்களையும் கன்மேந்திரியமாக வகைப்படுத்தப்படுகின்றன. பற்றும் செயலைக் கையும், (கால்) பதித்தலை பாதங்களும், ஆக்கத்திறனுடன் படைத்தலை மூளையும், பலுக்கும் (பேசும்) செயலை நாக்கும், கழிக்கும் தொழிலை கழித்தல் அங்கங்களும் செய்கின்றன. இவை ஐந்தும் ஆன்மா, உடலில் இயங்க அவசியமாகும்.

ஞானேந்திரியங்கள் ஐந்து தொகு

  • மெய்
  • வாய்
  • கண்
  • மூக்கு
  • செவி

எனும் ஐம்பொறிகளும் ஞானேந்திரியம் ஆகும். இவ்வைந்தும் ஒன்றோடொன்று இணைந்து செயல்புரிவதாலேயே, உயிர்கள் அறிவைப் பகுத்தறிந்து மெல்ல மெல்ல மேனிலையை அடைகின்றன.

அந்தக்கரணங்கள் நான்கு தொகு

  • மனம்
  • புத்தி
  • சித்தம்
  • அகங்காரம்

எனும் நான்கும். சித்தத்தைப் "பிரகிருதி" என்றும் அழைப்பதுண்டு. எனவே தான், சித்தத்தை முதலாகக் கொண்ட இந்த இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களும் "பிரகிருதி மாயா தத்துவங்கள்" எனப்படுகின்றன. இப்பிரகிருதியுடன் புருடனான ஆன்மா (வித்தியா தத்துவங்களுள் ஒன்று) இணையும் போதே, ஏனைய தத்துவங்களுடன் இணைந்து, இப்பௌதிக உலகில் செயலாற்ற ஆரம்பிக்கின்றது[7] என்பது சைவ சித்தாந்தத்தின் முடிபாகும்.

மேலும் பார்க்க தொகு

சைவ சித்தாந்தம்

உசாத்துணைகள் தொகு

  1. S. G. Desai (1996) "A critical study of the later Upanishads" P.372
  2. [1]தமிழ் இணையக் கல்விக்கழகம்
  3. Jayandra Soni (1989)"Philosophical Anthropology in Śaiva Siddhānta:With Special Reference to Śivāgrayogin" P.21
  4. http://www.bhagavadgitausa.com/TATTVAS-36.htm Tattvas - a brief Introduction
  5. K. Sivaraman (1973) "Śaivism in Philosophical Perspective: A Study of the Formative Concepts, Problems, and Methods of Śaiva Siddhānta" pp.559,560
  6. John Hughes (2007) "Kashmir Shaivism: The Secret Supreme" pp.1 - 10
  7. John Hughes (2007) "Kashmir Shaivism: The Secret Supreme" p.06