மும்தாசு மகால் அருங்காட்சியகம்

மும்தாசு மகால் அருங்காட்சியகம் (Mumtaz Mahal Museum அல்லது Red Fort Archaeological Museum), இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் உள்ள செங்கோட்டையில் அமைந்துள்ள அரண்மனையொன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை மன்னன் சாஜகானால் அவனது மனைவியான அர்சுமந்த் பானு பேகத்துக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இது பொதுவாக மும்தாசு மகால் என அழைக்கப்படுகின்றது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஆறு காட்சிக் கூடங்களில் முகலாயர் காலத்தைச் சேர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் முகலாய மன்னர் அக்பரோடும் அவருக்குப் பின் ஆண்ட முகலாய அரசர்களோடும் தொடர்புடைய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சிற்றோவியங்கள், கையெழுத்துப்படிகள், கல்வெட்டுக்கள், போன்ற பொருட்கள் உள்ளன. இவற்றுடன் சீனப் பச்சைக்கல்லில் செய்யப்பட்ட வாட்பிடிகள், கத்திப்பிடிகள் முதலியனவும், திரைச்சீலைகள், தளவிரிப்புக்கள், தலையணைகள், ஆடையணிகள் போன்றனவும் இங்கே காட்சிக்கு உள்ளன.

ஒரு காட்சிக்கூடத்தில் கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா சபார் தொடர்பான பொருட்கள் உள்ளன. இவற்றுள், அரசரதும், அவரது அரசியினதும் உடைகள், எழுதுகோல், மைக்கூடு, கத்திரிக்கோல், பன்னீர்ச் செம்பு போன்ற பொருட்கள் அடங்குகின்றன. இவர் கடைசிக் காலத்தில் ரங்கூன் சிறையில் இருந்தபோது எடுத்த நிழற்படங்கள் இங்கிருக்கும் பொருட்களுள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு