மைதிலி சரண் குப்த்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

மைதிலி சரண் குப்த் (Maithilisharan Gupt, मैथिलीशरण गुप्त; ஆகஸ்ட் 3, 1886டிசம்பர் 12, 1964) ஒரு இந்திக் கவிஞர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நவீன இந்தி கவிதையுலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்.

மைதிலி சரண் குப்த்
பிறப்பு3 ஆகத்து 1886
சீர்கான்
இறப்பு12 திசம்பர் 1964 (அகவை 78)
இந்தியா

வாழ்க்கைக் குறிப்பு தொகு

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு அருகிலுள்ள சிர்கான் எனும் ஊரில் 03-08-1886 ஆம் நாளில் பிறந்த இவர் பள்ளிப்படிப்புக்கும் குறைவாகத்தான் படித்தார். இவருடைய சகோதரர் சியாம் சரண்குப்தா புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்ததால் இவரும் இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1903 ஆம் ஆண்டில் வைஸ்யோபகாரக் என்ற சஞ்சிகையில் இவரது சாண்ட்ஸ் எனும் படைப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு 1905 ஆம் ஆண்டில் சரஸ்வதி எனும் இதழில் இவருடைய முதல் கவிதை வெளியானது. இவரது கவிதைத் தொகுப்புகளில் 1909 ஆம் ஆண்டில் வெளியான “ரங்மைன் பாங்”, 1910 ஆம் ஆண்டில் வெளியான “ஜெயாத்ரத்வாத்”, 1912 ஆம் ஆண்டில் வெளியான “சந்த்ரஹாஸ்”, “கிசான்” மற்றும் 1916 ஆம் ஆண்டில் வெளியான “வைடாலிக்” போன்ற நூல்கள் மிகவும் சிறப்பு பெற்ற நூல்களாகக் கருதப்படுகின்றன.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்த இவர் 1940 ஆம் ஆண்டில் ஜான்சி சிறைச்சாலையிலும், 1941 ஆம் ஆண்டில் ஆக்ரா சிறைச்சாலையிலும் சிறைத்தண்டனை பெற்றார். 1952 முதல் 1964 வரை பன்னிரண்டு ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

1936 ஆம் ஆண்டில் இந்தி சாகித்திய சம்மேளனம் இவருடைய சாகேத் கவிதை நூலுக்கு மங்கள பிரசாத் பரிசை வழங்கியது. பிரயாக், ஆக்ரா, காசி இந்து பல்கலைக்கழகங்கள் இவருக்கு சிறப்பு முனைவர் (டி.லிட்) பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன. இந்தி ஆர்வலர்களால் “ராஷ்டிர கவி” என்று அழைத்துப் பெருமைப்படுத்தப்பட்ட இவருக்கு 1954 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது.

இவருடைய எழுபத்து எட்டாம் வயதில் சிர்கானில் 12-12-1964 ஆம் நாள் மரணமடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_சரண்_குப்த்&oldid=3770878" இலிருந்து மீள்விக்கப்பட்டது