ராஜினி திராணகம

ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார்.

ராஜினி திராணகம
ராஜினி திராணகம
பிறப்பு இலங்கை பெப்ரவரி 23, 1954
யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு செப்டம்பர் 21, 1989
யாழ்ப்பாணம், இலங்கை
பணி பல்கலைக்கழக் பேராசிரியர்
துணை தயாபால திராணகம
பிள்ளைகள் நர்மதா திராணகம, ஷரிகா திராணகம

வரலாறு தொகு

ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.

1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978இல் பயிற்சி மருத்துவராக யாழ்ப்பாண மருத்துவமனையில் இணைந்தார். பயிற்சியின் பின்னர், 1979இல் இலங்கையின் மத்திய மலை நாட்டின் அப்புதளைக்கு அருகில் உள்ள அல்துமுல்லை என்ற இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1980 இல் ராஜினி போர் நிறைந்த நிலமான யாழ்ப்பாணம் திரும்பி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவப் புலத்தில் உடற் கூறியல் விரிவுரையாளராக இணைந்தார். 1983 இல் பொதுநலவாய புலமைப் பரிசில் பெற்று உடற் கூறியலில் துறையில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். அங்கு சென்ற ராஜினி, 1982 இல் பயங்கரவாத தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தனது சகோதரி நிர்மலாவின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். 1982 இல் விடுதலைப் புலிகளின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிய நிர்மலா இங்கிலாந்து வந்தார். இதன் பிறகு ராஜினி விடுதலைப் புலிகளோடு தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். ராஜினி விடுதலைப் புலிகளின் இங்கிலாந்து கிளையில் இணைந்து மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையின் நடப்புகளை வெளிப்படுத்தி வந்தார்.[1]

1986 இல் பட்டப்பின் படிப்பை முடித்து தனது இரண்டு குழந்தைகளுடன் இலங்கை திரும்பிய ராஜினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கணித விரிவுரையாளராக பணியாற்றிய ராஜன் ஹூலுடனும், சிறிதரன், தயா சோமசுந்தரம் என்பவர்களுடன் இணைந்து 1990 இல் வெளியிடப்பட்ட முறிந்த பனை (The Broken Palmyra) என்ற ஆங்கில நூலை எழுதினார்.[2] இவர்கள் நால்வரும் இணைந்து 1988 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினர்.[3]

கொலை தொகு

செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.[4][5][6]

ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார்.கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள் தொகு

  1. "ராஜினி பற்றிய திரைப்படம்" (PDF). Archived from the original (PDF) on 2007-06-16. பார்க்கப்பட்ட நாள் 2006-11-20.
  2. முறிந்த பனை
  3. மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
  4. சங்கம் செய்தி குறிப்பு
  5. மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் - ராஜினி
  6. "ராஜினி-திரைப்படம்". Archived from the original on 2006-11-08. பார்க்கப்பட்ட நாள் 2006-11-20.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜினி_திராணகம&oldid=3748949" இலிருந்து மீள்விக்கப்பட்டது