ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட்

பேராசிரியர் ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட் (Rolf Maximilian Sievert, 6 மே 1896 – 3 அக்டோபர் 1966) சுவீடிய மருத்துவ இயற்பியலாளர் ஆவார். கதிர்வீச்சின் உயிரியல் விளைவுகளைக் குறித்த ஆய்வு இவரது முதன்மை பங்களிப்பாகும்.

ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட்
பிறப்பு(1896-05-06)6 மே 1896
ஸ்டாக்ஹோம், சுவீடன்
இறப்பு3 அக்டோபர் 1966(1966-10-03) (அகவை 70)
ஸ்டாக்ஹோம், சுவீடன்

பேராசிரியர் சீவெர்ட் சுவீடனின் இசுடாக்கோமில் பிறந்தார். 1924இலிருந்து 1937 வரை சுவீடனின் ரேடிய்யெம்மத் இயற்பியல் ஆய்வகத்தில் பணியாற்றினார். கரோலின்ஸ்கா மையத்தில் கதிரியல் துறைத் தலைவராக பொறுப்பேற்றார். கதிர்வீச்சின் அளவை, முக்கியமாக புற்றுநோய் நோயறிதலிலும் சிகிச்சையிலும், அளப்பதில் முன்னோடியாக விளங்கினார். பின்னாட்களில் குறைந்தளவு கதிர்வீச்சிற்கு தொடர்ந்து ஆளாவதால் உயிரினங்களில் ஏற்படும் தாக்கங்களைக் குறித்த ஆய்வில் செலவிட்டார். 1964இல் பன்னாட்டு கதிர்வீச்சு காப்பு சங்கத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார். அணுக் கதிர்களின் தாக்கத்திற்கான ஐக்கிய நாடுகள் அறிவியல் குழுத் தலைவராக இருந்துள்ளார்.

கதிர்வீச்சு அளவுகளை அளப்பதற்கான பல கருவிகளை உருவாக்கி உள்ளார்; இதில் சீவெர்ட் அறை பரவலாக அறியப்பட்டதாகும்.

1979இல் எடைகளும் அளவுகளுக்குமான பொது மாநாட்டில் (CGPM), அயனியாக்கும் கதிர் அளவு ஈடளவுக்கான அனைத்துலக அலகுக்கு இவரது பெயர் சீவெர்ட் (Sv) சூட்டப்பட்டது.

1924இல் ரோல்ப் சீவெர்ட்