வசந்தி அரசரத்தினம்

இலங்கை தமிழ் கல்வியாளர்

வசந்தி அரசரத்தினம் (பிறப்பு: சூன் 26, 1959) இலங்கையின் கல்விமான்களில் ஒருவர். இவர் இலங்கையின் நான்காவது பெண் துணைவேந்தராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதற் பெண் துணைவேந்தராகவும் பதவியில் உள்ளவர்.

வசந்தி அரசரத்தினம்
பிறப்புசாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
கல்விமுனைவர் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1989)

முதுமாணி (கொழும்புப் பல்கலைக்கழகம்)
இளமாணி (சென்னைப் பல்கலைக்கழகம்]] 1981)
சாவகச்சேரி இந்துக் கல்லூரி
சாவகச்சேரி மகளிர் கல்லூரி
புசல்லாவை பரி. திரித்துவக் கல்லூரி

நெடுங்கேணி மகா வித்தியாலயம்
பணிதுணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சமயம்இந்து
பெற்றோர்எஸ்.ஏ. அரசரத்தினம், யோகவதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

வசந்தி அரசரத்தினம் யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரியில் எஸ்.ஏ. அரசரத்தினம் என்பவருக்கும் யோகவதிக்கும் பிறந்த ஒரே பெண்பிள்ளை. ஆரம்பக் கல்வியை நெடுங்கேணி மகா வித்தியாலயத்திலும் புசல்லாவை பரி. திரித்துவக் கல்லூரியிலும், பின்னர் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இணைந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். உயர் வகுப்புக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் உயிரியல் அறிவியல் துறையில் கற்றார். இளவயதில் தந்தையை இழந்தார்.

உயர் கல்வியை இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-1981 காலப்பகுதியில் உயிர் இரசாயனம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களைப் பயின்று முதற்பிரிவில் சித்தியடைந்து இள அறிவியல்மாணிப் பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உயிர் இரசாயனத்துறையில் கற்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1985-1989 கல்வியாண்டில் முனைவர் பட்டக்கற்கையை மேற்கொண்டார். முனைவர் பட்டத்துக்கான ஆய்வை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினதும் சுவீடன் லுண்ட் பல்கலைக்கழகத்தினதும் இணைப்பு ஆய்வாக மேற்கொண்டார். "சுதேச மூலிகைகளின் மருத்திவவியல் பயன்பாடு" என்கின்ற ஆய்வு முனைப்பின் வழியாக பல கட்டுரைகளை வசந்தி அரசரெத்தினம் அவர்கள் யாழ் மாவட்ட விஞ்ஞான முன்னேற்ற சங்கத்தின் ஆண்டு மலர்களில் பதிப்பித்துள்ளார்.[சான்று தேவை]

பல்கலைக்கழகப் பணியில் தொகு

1984 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் உயிர் இரசாயனத்துறையில் உதவி விரிவுரையாளராக இணைந்து பல பதவி உயர்வுகளைக் கண்டு 2007 ஆம் ஆண்டில் சிரேஷ்ட பேராசிரியரானார். மருத்துவத்துறை சார்ந்த ஒருவராக இல்லாதிருந்த போதிலும் கூட வசந்தி அரசரெத்தினம் அவர்கள் அவரது இரசாயனவியல் புலமையின் அடிப்படையில் மருத்துவ இரசாயனவியல் துறையில் பேராசிரியராக யாழ் பல்கலையின் மருத்துவபீடத்தில் பதவியுயர்வு பெற்றமை குறிப்பிடப்படவேண்டியதாகும்.[சான்று தேவை] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத் தலைவராகவும் 2002-2003 காலப்பகுதியில் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணை வேந்தராக 2011 ஆம் ஆண்டு மார்ச் 28 இல் நியமிக்கப்பட்டார்.

உசாத்துணைகள் தொகு

  • பாராட்டிக் கௌரவிக்கப்படும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதற் பெண் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் - வீரகேசரி சூன் 11, 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தி_அரசரத்தினம்&oldid=3146656" இலிருந்து மீள்விக்கப்பட்டது