2 யோவான் (நூல்)

திருவிவிலிய நூல்


2 யோவான் அல்லது யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம் (Second Letter [Epistle] of John) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்து நான்காவது நூலாக அமைந்துள்ளது [1]. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Ioannou B (Επιστολή Ἰωάννου βʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II Joannis எனவும் உள்ளது.

தூய யோவான். பளிங்குப் படிமம். கலைஞர்: தோனாத்தேல்லோ. காலம்: கி.பி. 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: புளோரன்சு, இத்தாலியா.

பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் அருளப்பர் எழுதிய இரண்டாம் நிருபம் என்றிருந்தது. யோவான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் John என்று வழங்கப்படலாயிற்று.

யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம் 13 வசனங்களை மட்டுமே கொண்ட மிகச் சிறிய திருமுகம். இது "தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமாட்டிக்கு" எழுதப்பட்டுள்ளது. "பெருமாட்டி" என்பது ஒரு தனிப்பட்ட திருச்சபையைக் குறிப்பதாகும். இப்பெருமாட்டிக்கு வேறொரு சகோதரியும் உள்ளார். இச்சகோதரி வேறொரு சபையைக் குறித்து நிற்கிறார்[2].

2 யோவான் திருமுகத்தின் ஆசிரியர் தொகு

இத்திருமுகத்தின் ஆசிரியர் தாம் ஒரு மூப்பர் எனச் சொல்லுக் கொள்கிறார். கிறிஸ்தவச் சபைகளில் மூப்பர்கள் தலைமைப்பணி ஆற்றி வந்தார்கள். இம்மூப்பரது பெயர் குறிப்பிடப்படாததால், இவர் அக்காலத்தில் நன்கு அறிமுகமான ஒருவராக இருந்திருக்க வேண்டும்.

இத்திருமுகத்தை யோவான் எழுதினார் என மரபு கூறினாலும், அவர் சீடர் ஒருவர் இதனை எழுதியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். 1 யோவான் எழுதப்பட்ட காலத்திலேயே இத்திருமுகம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

2 யோவான் திருமுகத்தின் நோக்கமும் உள்ளடக்கமும் தொகு

திருமுக ஆசிரியரான மூப்பர் திருச்சபைக்கு எச்சரிக்கை விடுக்கிறார். தவறான போதனையின் அடிப்படையில் பிரிந்து சென்றோர் கிறிஸ்து மனிதரானதை ஏற்றுக் கொள்வதில்லை; தாங்கள் முன்னேறியவர்கள் என இவர்கள் கூறிக்கொண்டாலும், அந்த முன்னேற்றம் கிறிஸ்தவக் கொள்கையின் எல்லையை மீறிய செயலாகும்; இப்படிப்பட்டவர்களைக் கிறிஸ்தவர்கள் வரவேற்கக்கூடாது என்கிறார் ஆசிரியர். ஒருவர் மற்றவருக்கு அன்பு செலுத்தி இயேசுவைப் பற்றிய வரலாற்று உண்மைகளை உறுதியாகச் சார்ந்து நிற்க வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.

2 யோவான் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி தொகு

2 யோவான் 4-8

"தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி,
உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன்.
பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே:
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம்.
இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை.
இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை.
நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது;
அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்;
அதைக் கடைப்பிடித்து வாழுங்கள்.
ஏனெனில் ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர்.
இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை.
இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்.
உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல்
முழுக் கைம்மாறு பெற்றுக் கொள்ளக் கவனமாயிருங்கள்."

2 யோவான் திருமுகத்தின் உட்பிரிவுகள் தொகு

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு வசனங்கள் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை வச 1-3 462
2. அன்பின் மேன்மை வச 4-6 462
3. எதிர்க்கிறிஸ்துகள் பற்றிய எச்சரிக்கை வச 7-11 462
4. முடிவுரை வச 12-13 462

ஆதாரங்கள் தொகு

  1. யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்
  2. கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - யோவான் திருமுகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=2_யோவான்_(நூல்)&oldid=1479509" இலிருந்து மீள்விக்கப்பட்டது