செபே

செங்கிஸ்கானின் மங்கோலிய தளபதி

செபே (அல்லது ஜெபே, மொங்கோலியம்: Зэв, Zev; இயற்பெயர்: ஜிர்கோடை (நவீன மங்கோலியம்: ஜுர்கடை), மொங்கோலியம்: Зургаадай, Simplified Chinese: 哲别) (இறப்பு 1225) செங்கிஸ் கானின் நோயன்களுள் (தளபதி) ஒருவர் ஆவார். இவர் தாய்சியுட் பழங்குடியினருள் பெசுட் இனத்தை சேர்ந்தவர். செங்கிஸ் கானின் காலத்தில் தாய்சியுட்கள் தர்குடை கிரில்துக்கின் தலைமையில் இருந்தனர்.

1201ல் பதிமூன்று பக்கங்களின் போரில், செங்கிஸ் கானின் கழுத்தில் அம்பினால் காயம் ஏற்பட்டது. அவரது தளபதி செல்மே அவரைக் கவனித்துக் கொண்டார். போரில் வென்றபின் செங்கிஸ் கான், தோற்றவர்களிடம் அம்பு எய்தவர் யார் என்று கேட்டார். ஜுர்கடை தானாக முன்வந்து அம்பு எய்ததைக் கூறினார், மேலும் செங்கிஸ் கான் தன்னைக் கொல்வதென்றால் கொல்லட்டும் எனவும் அதேநேரத்தில் தன்னை மன்னித்தால் விசுவாசத்துடன் பணியாற்றுவேன் என்றும் கூறினார். செங்கிஸ் கான் அவரது நேர்மையைப் பாராட்டி ஜெபே (மங்கோலிய மொழியில் அம்பு) என்று பெயரிட்டுத் தனது படையில் சேர்த்துக் கொண்டார்.

செபே பின்னர் செங்கிஸ் கானின் சிறந்த மற்றும் மிகவும் விசுவாசமான தளபதிகளில் ஒருவர் ஆனார். அவரது திறன் காரணமாக அவர் சுபுதை பகதூருக்கு இணையான தளபதியாகக் கருதப்படுகிறார்.

காரா கிதையின் குச்லுக்கை செபே வெற்றி கொண்டபோது செங்கிஸ் கான் மகிழ்ந்தபோதும், இவ்வெற்றிகளின் காரணமாக செபே தனக்கு எதிராகத் திரும்புவாரோ என எண்ணினார். இச்செய்தி செபேயை அடைந்தபோது, உடனடியாக போரிலிருந்து திரும்பிய செபே 100 வெள்ளைக் குதிரைகளை (அம்புக் காயம் ஏற்பட்டபோது செங்கிஸ் கான் ஓட்டிய அதே போன்ற குதிரைகள்) அவருக்கு தன் விசுவாசத்தின் அடையாளமாகக் கொடுத்தார். அதன்பின் செங்கிஸ் கான் அவரை சந்தேகப்படவேயில்லை.

இவரும் சுபுதையும் சேர்ந்து உருசியர்களைத் தோற்கடித்துத் திரும்பும் வழியில் இவர் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபே&oldid=3246076" இலிருந்து மீள்விக்கப்பட்டது