செம்மங்குடி சீனிவாச ஐயர்
செம்மங்குடி சீனிவாச ஐயர் (25 சூலை 1908 - 31 அக்டோபர் 2003) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். தனது மாணவர்களால் "செம்மங்குடி மாமா" என அன்புடன் அழைக்கப்பட்டவர்.
செம்மங்குடி சீனிவாச ஐயர் | |
---|---|
இயற்பெயர் | செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் |
பிறப்பு | சூலை 25, 1908 திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், ![]() |
இறப்பு | 31 அக்டோபர் 2003 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 95)
இசை வடிவங்கள் | கருநாடக இசை, இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | பாடகர் |
ஆரம்பகால வாழ்க்கை தொகு
தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் திருக்கோடிக்காவலில் ராதாகிருஷ்ண ஐயருக்கும் தர்மசம்வர்தினி அம்மாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது தாய்மாமா திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயருடன் தனது நான்கு வயது வரை தங்கியிருந்த இவர், அதன்பிறகு செம்மங்குடியில் தனது பெற்றோருடன் வாழத்தொடங்கினார்.[1] பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணசுவாமி ஐயரிடம் தனது எட்டாவது வயது முதல் இசை கற்கத் தொடங்கினார். தொடர்ந்து திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், நாராயணசுவாமி ஐயர் இறுதியாக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோரிடம் இசை பயின்றார்.
இசை வாழ்க்கை தொகு
தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார். 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் இவர் பாடியதைத் தொடர்ந்து புகழடையத் தொடங்கினார்.
திருவனந்தபுரத்திலுள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியின் முதல்வராக 23 ஆண்டுகள் பதவி வகித்தார். அதன்பிறகு அகில இந்திய வானொலி, சென்னையின் கர்நாடக இசைப்பிரிவிற்குரிய தலைமைத் தயாரிப்பாளராக 1957 - 1960 காலகட்டத்தில் பணிபுரிந்தார். அதன்பிறகு மேடைகளில் பாடுவதிலும், இளம் கலைஞர்களுக்கு கற்பிப்பதிலும் முழு கவனம் செலுத்தினார். தனது 92 ஆவது வயது வரை மேடைகளில் பாடினார்.
இவரின் மாணவர்கள் தொகு
- சுகுணா புருசோத்தமன்
- குற்றாலம் வெ.நாகராஜன்
சிறப்புகள் தொகு
சங்கீத கலாநிதி விருதினைப் பெற்ற இளம் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. தனது 39 ஆவது வயதில் இவர் இவ்விருதினை பெற்றார். இதில் இன்னொரு முக்கியமான தகவல்: இவரின் குரு மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் 'சங்கீத கலாநிதி' விருதினை அதற்கு முந்தைய ஆண்டு பெற்றிருந்தார்.
விருதுகள் தொகு
- சங்கீத கலாநிதி விருது, 1947; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 1953[2]
- பத்ம பூஷன் விருது
- பத்ம விபூசண் விருது
- இசைப்பேரறிஞர் விருது, 1969. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]
- காளிதாஸ் சம்மன் விருது; வழங்கியது: மத்திய பிரதேச (இந்திய மாநிலம்) அரசு
- மதிப்புறு முனைவர் பட்டம், 1979; வழங்கியது: கேரளா (இந்திய மாநிலம்) அரசு
- சங்கீத கலாசிகாமணி விருது, 1974 & 1991; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி[4]
- காளிதாஸ் சம்மன் விருது
மேற்கோள்கள் தொகு
- ↑ "செம்மங்குடி சீனிவாச ஐயர் 10" (in ta). https://www.hindutamil.in/news/blogs/50291-10.html.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.
- ↑ "Awardees List". http://www.theindianfineartssociety.com/oldevents.html.
உசாத்துணை தொகு
பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் டி. எம். கிருஷ்ணா எழுதிய 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!' ; விகடன் பிரசுரம், முதற்பதிப்பு: டிசம்பர் 2010
வெளி இணைப்புகள் தொகு
- Semmangudi looks back - at 90 - செம்மங்குடி சீனிவாச ஐயர் வழங்கிய ஒரு செவ்வி (ஆங்கிலத்தில்)[தொடர்பிழந்த இணைப்பு]
- The patriarch of Carnatic music - செம்மங்குடி சீனிவாச ஐயர் குறித்த ஒரு அஞ்சலிக் கட்டுரை
- The pitamaha of Carnatic music - செம்மங்குடி சீனிவாச ஐயர் குறித்து பிரண்ட்லைன் இதழில் வெளியான ஒரு அஞ்சலிக் கட்டுரை