சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

சங்ககால சேர மன்னன்
(சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சங்க காலச் சேர வேந்தர்களுள் ஒருவன். இவன், கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன். யானை போலப் பெருமித நோக்கு உடையவன் ஆதலால் இவனை 'யானைக்கட் சேய்' என்றனர். [1] குறுங்கோழியூர்க் கிழார், பேரிசாத்தனார், பொருந்தில் இளங்கீரனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

மாந்தை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசனை மாந்தரன் என்றனர்.

'பதிற்றுப்பது ஏழாம்பத்துப் பாட்டுடைத் தலைவன் செல்வக் கடுங்கோவைப் பாடிய புலவர் கபிலர் இல்லையே' என இவன் வருத்தப்பட்டுக்கொள்வதால், 7 ஆம் பத்துத் தலைவனின் காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது தெளிவாகிறது. இவனைக் "கபிலரைப் போல நான் பாடுவேன்" எனப் பொருந்தில் இளங்கீரனார் குறிப்பிடுவதால், இவனைப் பதிற்றுப்பத்து, 10 ஆம் பத்தின் தலைவன் எனக் கொள்வது பொருத்தமானது.

குறுங்கோழியூர் கிழார் தொகு

குட்டநாட்டில் இளவரசனாயிருந்து, பயிற்சி பெற்று, அரசனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் (பொள்ளாச்சி நாட்டில்) அப்படி இருந்து அரசனானவன் 'பொறையன்'. இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் 'மாந்தரன்'.

தமிழ்நாடு முழுவதும், தன்தொழிற்கேற்ப நாடாண்ட சேரவேந்தர் வழிவந்தவன் என இவனைக் குறுங்கோழியூர் கிழார் பாராட்டுகிறார்.

  • இவன் தொண்டி மக்களோடு போரிட்டு வென்றவன். [2]
  • தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். குழியில் விழுந்த யானை, குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்தது போல, இந்தப் பொறையன் சிறையைத் தகர்த்துக் கொண்டு, தன் நாட்டுக்கு வந்து, அரசனானானாம். இவன் கொடைமுரசு முழக்கி, இரவலர்களை வரவழைத்துப் பரிசில் நல்குவானாம். [3]
  • கொல்லி நாட்டை வென்று தனதாக்கிக்கொண்டான். அரசர் பலர் இவனைப் பணிந்து திறை தந்தனராம். இவன் நாடு, நெல்லும் கரும்பும் விளையும் வளம் மிக்கதாம். மக்கள் நெல் குற்றும்போது குரவையாடி மகிழ்வார்களாம். [4]
  • கடலின் ஆழம், அண்டத்தின் விரிவு, காற்று வழங்கும் திசை, ஒன்றுமில்லாமல் இயங்கும் ஆகாயம் ஆறியவற்றையெல்லாம் அளந்து அறிந்தாலும், இவனது அறிவு, அன்பு, இரக்க உணர்வு ஆகியவற்றை அளக்க இயலாது.
  • இவன் நாட்டு மக்களுக்குச் சோறாக்கும் தீ அல்லாமல் வேறு (பகைவர் மூட்டும் தீ) தெரியாது. வானவில்லைத் தவிர வேறு வில் தெரியாது. நிலத்தை உழும் யாஞ்சில் படை அல்லது வேறு படை தெரியாது.
  • இவன் நாட்டு மண்ணை, கருவுற்றிருக்கும் மகளிர் உண்டால் ஒழியப் பகைவர் உண்டதில்லை.
  • இவன் நாட்டுக்கு அரண் அம்பு அன்று. அறம்.
  • இவன் நாட்டுக்குப் புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் நாட்டிலிருந்து போனாலும், இவன் நாட்டு மக்கள் ‘புள்’ என்னும் சகுனமாகப் பார்க்க மாட்டார்கள்.

இந்தச் செய்திகளால் இவனது நல்லாட்சி புலனாகிறது. [5]

பேரிசாத்தனார் தொகு

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்ட சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவனைப் பற்றிய செய்தி ஒன்றே ஒன்று கிடைத்துள்ளது. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போராடினான். போரில் தோற்றான். தோற்றதற்குக் காரணம் தேர்வண் மலையன் சோழன் பக்கத்தில் சேர்ந்துகொண்டு போரிட்டதுதான் என்று இந்த இரும்பொறை கூறினானாம். தேர்வண் மலையன் தன் பக்கம் இல்லையே என்று கவலைப்பட்டானாம். மலையன் சோழன் பக்கம் இல்லாவிட்டால் சோழனை வென்றிருக்கலாம் என்கிறான்.[6]

பொருந்தில் இளங்கீரனார் தொகு

இந்த மாந்தரஞ்சேரல் விளங்கில் என்னும் ஊரைக் கைப்பற்றினான். கபிலன் இன்று இருந்தால் தன் வெற்றியைப் போற்றிப் பாடியிருப்பாரே என வருத்தத்தோடு கூறினான். இதனைக் கேட்ட பொருந்தில் இளங்கீரனார் "இதோ நான் இருக்கிறேன்" என்று கூறி அவனது வெற்றியைப் பாராட்டிப் பாடினார். [7]

கூடலூர் கிழார் தொகு

கூடலூர் கிழார் சங்ககால வானியல் கணியர்களில் ஒருவர். ஒரு நாள் எரிமீன் விழுவதைப் பார்த்த இவர், தன் நாட்டு அரசன், 'இன்ன நாளில் இறந்துவிடுவான்' எனக் கணித்தார். அவர் கணித்த அதே நாளில், இந்த இரும்பொறை மாண்டானாம். [8]

அடிக்குறிப்பு தொகு

  1. வேழநோக்கின் விறல் வெஞ் சேய் (புறம் 22)
  2. தொண்டியோர் அடுபொருந (புறம் 17)
  3. குறுங்கோழியூர் கிழார் புறநானூறு 17
  4. குறுங்கோழியூர் கிழார் புறநானூறு 22
  5. புறம் 20
  6. விரைந்து வந்து சமம் தாங்கிய வல் வேல் மலையன் அல்லன் ஆயின் நல் அமர் கடத்தல் எளிதுமன் நமக்கு – வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் புறநானூறு 125
  7. புறம் 53
  8. புறம் 229

வெளிப்பார்வை தொகு

  1. நெடுஞ்செழியன் சிறையிலிருந்து விடுபட்டது
  2. குறுங்கோழியூர் கிழார் அறிவுரை
  3. யானைகட் சேய் - விளக்கம்