சை. பீர் முகம்மது

மலேசியாவின் மூத்த தமிழ் இசுலாமிய எழுத்தாளர்

சை. பீர் முகம்மது (11 சனவரி 1942 – 26 செப்டம்பர் 2023)[1] மலேசியாவின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர்; ஞானாசிரியன் எனும் புனைப்பெயராலும் அறியப்பட்டவர். திறனாய்வாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ் இளைஞர் மணி மன்றம் முதலிய சமுதாய இயக்கங்களில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் என்ற அடிப்படையிலும் அறியப்பட்டவர்.

சை. பீர் முகம்மது
பிறப்புபீர் முகம்மது
(1942-01-11)11 சனவரி 1942
கோலாலம்பூர், மலேசியா
இறப்புசெப்டம்பர் 26, 2023(2023-09-26) (அகவை 81)
கோலாலம்பூர், மலேசியா
தேசியம்மலேசியர்
மற்ற பெயர்கள்ஞானாசிரியன்
அறியப்படுவதுஎழுத்தாளர், பேச்சாளர், திறனாய்வாளர்
வாழ்க்கைத்
துணை
சமாரியா
பிள்ளைகள்4 ஆண்கள், 1 பெண்

இளமைக் காலம் தொகு

இரண்டாம் உலகப் போரின்போது மலேசியாவை ஆக்கிரமித்து யப்பான் ஐந்தாண்டுகள் ஆண்ட காலத்தில் பீர்முகமது பிறந்தார். சிறுவயதில் யப்பானிய வீரர்களின் கூடாரத்தில் கிடைக்கும் உணவை உண்டு வாழ்வைக் கழித்த அனுபவம் இவருக்கு உண்டு. இவரது தந்தை சயாம் மரண இரயில்பாதை அமைக்க பிடித்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் சில ஆண்டுகளில் இவரின் தாயாரும் இறந்தார். ஏழுவயதில் உணவகத்தில் தட்டுக்களை கழுவும் வேலைப் பார்த்தார்.[2]

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

இவர் 1959 முதல் சுமார் ஐந்து தசாப்த்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், புதுக் கவிதைகள், திறனாய்வுகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் படைப்பிலக்கியத் துறையிலும் இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். இவரது முதல் சிறுகதை 1961-இல் சிங்கப்பூரின் மாணவன் இதழில் வெளிவந்தது. மலேசிய தேசிய பத்திரிகைளிலும் இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் தமிழ் நாட்டில் "புதிய பார்வை", "கணையாழி", "கலைமகள்", "ஓம் சக்தி" போன்ற இதழ்களிலும் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள் தொகு

இவரால் எழுதப்பட்ட நூல்களில் சில வருமாறு

  • வெண்மணல் (சிறுகதைத் தொகுப்பு)
  • பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்
  • சந்ததிகளும் இரப்பர் உறைகளும்
  • அக்கினி வளையங்கள்
  • பெண் குதிரை (நாவல் - 1997)
  • கைதிகள் கண்ட கண்டம் (பயணக் கட்டுரை - 1997)
  • மண்ணும் மனிதர்களும் (பயணக் கட்டுரை - 1998)
  • வேரும் வாழ்வும் - பாகம் 1 (1999)
  • வேரும் வாழ்வும் - பாகம் 2 (2001)
  • வேரும் வாழ்வும் - பாகம் 3 (2001)
  • மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் (தொகுப்பாசிரியர், 2001);
  • திசைகள் நோக்கிய பயணங்கள் (கட்டுரை, 2006)[3]

வேரும் வாழ்வும் தொகு

வேரும் வாழ்வும் என்பது மலேசிய எழுத்தாளர்களின் பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு நூலாகும். இதன் மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன. இந்த தொகுதிகள் மூலம் மலேசியா சிறுகதை இலக்கியப் பரப்பினை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

இலக்கியப் பணி தொகு

மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் ஆதரவு வழங்கி வரும் இவர் பல மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை நூலுருவாக்க உதவியுள்ளார். அத்துடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

இதழாசிரியர் தொகு

மலேசியாவிலிருந்து வெளிவந்த "உதய சக்தி" என்னும் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பரிசுகளும் விருதுகளும் தொகு

  • "செந்தமிழ் மாமணி" (1998); சென்னை தாய்மண் இலக்கியக் கழகம் வழங்கியது.
  • "எழுத்துச் செம்மல்"; பழனி தமிழ் நாட்டுக் கவிஞர் பேரணி வழங்கியது.
  • தங்க விருதும் தமிழ்ச் செம்மல் விருதும் தமிழ் நாட்டுப் பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது
  • பணமுடிப்பு (1996); பாரதிதாசன் விழாக் குழுவினர் வழங்கியது
  • "மணிச்சுடர்"; பினாங்கு மணிமன்றம் வழங்கியது
  • கோ. சாரங்கபாணி விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1984). வழங்கியது
  • தான்சிறீ ஆதிநாகப்பன் விருது 2007

மேற்கோள்கள் தொகு

  1. "மலேசிய எழுத்தாளர் சை.பீர் முகம்மது காலமானார்". தமிழ் முரசு. 26 செப்டம்பர் 2023. https://www.tamilmurasu.com.sg/world/story20230926-137691. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2023. 
  2. "அஞ்சலி: பயாஸ்கோப்காரரின் மரணம்". 2023-10-01. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. "சை.பீர்முகம்மது பத்திகள்: அலை வரையும் கோலம்". வல்லினம். https://vallinam.com.my/version2/?p=6438. பார்த்த நாள்: 26 September 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சை._பீர்_முகம்மது&oldid=3833066" இலிருந்து மீள்விக்கப்பட்டது