ஜெ. ராம்கி என்று அழைக்கப்படும் ஜெ. ராமகிருஷ்ணன் (34) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமூக நோக்கர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். சென்னையில் மென்பொருள் வல்லுநராக பணிபுரிகிறார். அரசியல், வரலாறு, தொழில்நுட்பம் குறித்து இணையத்திலும், தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ்நாட்டின் முக்கியமான மூன்று ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் குறித்து இவர் எழுதிய புத்தகங்கள், கடந்த பத்தாண்டுகளில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. எமர்ஜென்ஸி நேரத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிறை அனுபவங்கள், மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான ஐரம் ஷர்மிளா மற்றும் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் குறித்த இவரது மொழியாக்கங்களும் குறிப்பிடத்தக்கவை.

ரஜினி சப்தமா? சகாப்தமா? என்னும் தலைப்பில் ரஜினியைப் பற்றி இவர் எழுதிய முதல் புத்தகம் 2005ல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பின்னர் மு.க என்னும் தலைப்பில் கருணாநிதி குறித்த அலசல் புத்தகத்தின மூலமாக பரவலாகப் பேசப்பட்டார். அதைத் தொடர்ந்து இவர் எழுதிய பாகவதர் - எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை குறித்த புத்தகமும், ஜெ அம்மு முதல் அம்மாவரை என்னும் தலைப்பில் ஜெயலலிதா குறித்து எழுதிய புத்தகமும் குறிப்பிடத்தக்கவை. ஜெ. ராம்கியின் மன்மோகன்சிங் குறித்த புத்தகம், காவிரியின் கதை, ம.தி.மு.கவின் வரலாறு, இண்டர்நெட் இயங்குவது எப்படி? உள்ளிட்ட சிறு புத்தகங்களும் தமிழ் வாசிப்புலகில் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

2008 ஆம் ஆண்டு இளம் எழுத்தாளருக்கான திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதையும் பெற்றிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் இவரது பல கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குகள், கேள்வி பதில்கள் போன்ற பங்களிப்புகள் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், கல்கி, இந்தியா டுடே, இதயம் பேசுகிறது, தினமணி, தினமலர் உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கைகளிலும் நாளேடுகளிலும் இடம்பெற்றுள்ளன. தற்போது வலம் உள்ளிட்ட சிறு பத்திரிக்கைகளிலும் சொல்வனம், தட்ஸ்தமிழ், தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._ராம்கி&oldid=3214025" இலிருந்து மீள்விக்கப்பட்டது