டி. பி. முத்துலட்சுமி
டி. பி. முத்துலட்சுமி (T. P. Muthulakshmi, இறப்பு: மே 29, 2008) 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
டி. பி. முத்துலட்சுமி | |
---|---|
பிறப்பு | தூத்துக்குடி பொன்னையாபாண்டியன் முத்துலட்சுமி தூத்துக்குடி, தமிழ்நாடு |
இறப்பு | (அகவை 77) சென்னை | மே 29, 2008
பணி | நடிகை |
அறியப்படுவது | நகைச்சுவை நடிகை |
பெற்றோர் | தந்தை : பொன்னையாபாண்டியன், தாயார் : சண்முகத்தம்மாள் |
வாழ்க்கைத் துணை | பி. கே. முத்துராமலிங்கம் |
இளமைக் காலம்
முத்துலட்சுமி தமிழ்நாடு தூத்துக்குடியில் பொன்னையபாண்டியன், சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர். தந்தை ஒரு விவசாயி. எட்டாம் வகுப்பு வரை படித்தார்.[1]
திரைப்படங்களில் நடிப்பு
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றார். சென்னையில் அவருடைய மாமா எம். பெருமாள், இயக்குநர் கே. சுப்பிரமணியத்துடன் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக் கொடுத்தார்.[1]
எஸ். எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் "மகாபலி சக்கரவர்த்தி", மின்மினி, தேவமனோகரி, பாரிஜாதம் முதலான படங்களில் நடித்தார்.[1]
நகைச்சுவை நடிகையாக அறிமுகம்
1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பொன்முடி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதனை அடுத்து அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. 1951இல் ஓர் இரவு படத்தில் டி. கே. சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த திரும்பிப்பார் படத்தில் தங்கவேலு மனைவியாக ஊமைப் பெண்ணாக முத்துலட்சுமி நடித்தார். இருவர் உள்ளம் படத்தில் எம். ஆர். ராதாவின் மனைவியாக முத்துலட்சுமி நடித்தார்.[1]
குடும்பம்
முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம், அரச நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். தமிழ் நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவர்.[1] நடிகரும் இயக்குனருமான டி. பி. கஜேந்திரன் இவர்களது வளர்ப்பு மகன் ஆவார்.[2] முத்துலட்சுமி தனது 77வது அகவையில் 2008 மே 29 இல் சென்னையில் காலமானார்.[3]
விருதுகள்
- கலைமாமணி விருது (1999)
- கலைவாணர் விருது
நடித்த சில திரைப்படங்கள்
- ராஜாம்பாள் (1951)
- வளையாபதி (1952)
- தாய் உள்ளம் (1952)
- பராசக்தி (1952)
- மனோகரா (1954)
- பொன்வயல் (1954)
- ராஜி என் கண்மணி (1954)
- சுகம் எங்கே (1954)
- துளி விஷம் (1954)
- கணவனே கண் கண்ட தெய்வம் (1955)
- பாசவலை (1956)
- நான் பெற்ற செல்வம் (1956)
- மக்களைப்பெற்ற மகராசி (1957)
- மாயா பஜார் (1957)
- சக்கரவர்த்தி திருமகள் (1957)
- முதலாளி (1957)
- வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
- வண்ணக்கிளி (1959)
- தங்கப்பதுமை (1959)
- அடுத்த வீட்டுப் பெண் (1960)
- படிக்காத மேதை (1960)
- ஹரிச்சந்திரா (1968)
- அன்னையின் ஆணை
- அனுபவி ராஜா அனுபவி
- இருவர் உள்ளம்
- ஏழை உழவன்
- ஓர் இரவு
- கடன் வாங்கி கல்யாணம்
- குணசுந்தரி
- கொஞ்சும் சலங்கை
- சந்திரலேகா
- டவுன் பஸ்
- திரும்பிப்பார்
- திருவருட்செல்வர்
- தேவமனோகரி
- பத்மினி
- பாரிஜாதம்
- பிரேம பாசம்
- பொன்முடி
- போர்ட்டர் கந்தன்
- மகாபலி சக்கரவர்த்தி
- மகேஸ்வரி
- மரகதம்
- வடிவுக்கு வளைகாப்பு
- வாழ்க்கை ஒப்பந்தம்
- வாழவைத்த தெய்வம்
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- ஜமீந்தார்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "நகைச்சுவை வேடத்தில் 300 படங்களில் நடித்த டி.பி.முத்துலட்சுமி". தினகரன். 11 பெப்ரவரி 2014. Archived from the original on 2014-02-11. https://archive.today/20140211120558/http://www.thinakaran.lk/2014/02/11/?fn=f1402114. பார்த்த நாள்: 11 பெப்ரவரி 2014.
- ↑ ராண்டார் கை (6 சூன் 2008). "Sparkling presence". த இந்து. 2008-10-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "T.P. Muthulakshmi passes away". த இந்து. 31 மே 2008. 2008-11-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.