பகழிக்கூத்தர்

பகழிக்கூத்தர் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் இயற்றிப் பெரும்புகழ் ஈட்டியவர். இவர் இயற்றிய மற்றொரு நூல் சிந்தாமணிச் சுருக்கம் ஆகும்.

இராமநாதபுரம் மாவட்டம் செம்பிநாட்டைச் [1] சேர்ந்த சன்னாசி என்னும் ஊரில் பிறந்தவர்.[2] தந்தை பெயர் தருப்பாதனர்.[3] இவர் அம்புகள் [4] செய்து தரும் கொல்லர். அந்தணர் எனவும் கருதுகின்றனர். புகலூர் [5] கோயில் ஐயனார் [6] பெயர் பகழிக்கூத்தர்.

வைணவராய் இருந்த இவர் முருகனைப் பற்றிப் பாடியது குறித்து ஒரு கதை கூறுவர். இவரது கனவில் முருகனடியார் ஒருவர் தோன்றி ஓலை ஒன்று தந்துசென்றார். விழித்துப் பார்க்கையில் உண்மையாகவே ஓலை இருந்தது. அதில் முருகனைப் பாடுமாறு எழுதியிருந்தது. பகழிக்கூத்தர் திருநீறு அணிந்தார். வைணவர் வெறுத்தனர். ஒருநாள் களவுபோன திருச்செந்தார் முருகன் மாலை பகழிக்கூத்தர் கழுத்தில் இருந்தது. இது முருகன் அருள் தந்த மாலை எனக் கருதி இவர் முருகன்மீது பாடலானார்.

காலம் தொகு

பகழிக்கூத்தர் காலம் 15-ஆம் நூற்றாண்டு என்பது சில அகச்சான்றுகளால் நிறுவப்பட்டுள்ளது.

  • ’திண்டிமம்’ என்னும் பறையின் பெயரை அருணகிரி நாதரும் இவரும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் இருவர் காலமும் ஒன்று என்பது மு. ராகவையங்கார் கருத்து.
  • விநாயகர் அகவல் பாடிய ஔவையாரை விநாயகர் கயிலைக்குத் தூக்கிவிட்ட கதையைப் பகழிக்கூத்தர் குறிப்பிடுகிறார். பின் வந்தவர் யாரும் குறிப்பிடாத கதை இது. எனவே இவர் காலம் இந்த ஔவையாரின் காலமாகிய 1350-ஐ ஒட்டிய காலம்.
  • இவரது பாடலில் மேகாரம், மேக ஆரம் என்பது வானவில். வானவில் போலத் தோகை விரித்து ஆடுவது மயில் என்னும் மயிலைக் குறிக்கும் சொல் பல இடங்களில் வருகிறது.[7][8]
  • பவுரி என்னும் கூத்து ஆட்சிக்கு வந்த காலம் இவர் காலம்.
  • திண்டிமம் என்னும் பறை ஆட்சிக்கு வந்த காலம்

கருவிநூல் தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. செம்பிநாட்டு
    வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம்
    விளங்கவே வந்த நெடுமால்
    வேதியர் குலாபதி தர்ப்பாதனன் புதல்வன்
    மிக்க பகழிக் கூத்தனே. (சிந்தாமணிச் சுருக்கம், பாயிரப் பாடல்)
  2. இந்த ஊர் இக்காலத்தில் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடப்படுகிறது.
  3. இவரது முன்னோர் திருப்புல்லாணியில் தருப்பைப் புல்லில் பள்ளிகொண்டிருக்கும் தருப்பாசனம் அழகியார் என்னும் பெருமாளின் அடியவர்கள்.
  4. பகழி
  5. சேதுபதிகளின் பழைய தலைநகர்
  6. அரிகர புத்திரன்
  7. கோளரவைக் கொத்திக் எறியும் மேகாரம் இக்
    குமரனுக் குண்டு கண்டாய் (அம்புலிப் பருவம் 1)
  8. அருணகிரியார் வாக்கிலும் இது வருகிறது.
    உகரம் எடுத்தாடு மேகார மீதுமிசை வரவேணும் (பழனித் திருப்புகழ்)
    இதனாலும் இவர் அருணகிரியார் காலம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகழிக்கூத்தர்&oldid=3231210" இலிருந்து மீள்விக்கப்பட்டது