பியூகிலிஸ்ட் நடவடிக்கை

பியூகிலிஸ்ட் நடவடிக்கை (Operation Pugilist) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல் நடவடிக்கை. துனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் அச்சு நாடுகளின் மாரெத் அரண்கோட்டினை உடைக்க பிரித்தானியப் படைகள் முயன்று தோற்றன.

பியூகிலிஸ்ட் நடவடிக்கை
துனிசியப் போர்த்தொடரின் பகுதி

துனிசியப் போர்முனை
நாள் மார்ச் 16 – 27, 1943
இடம் துனிசியா
கீழ்நிலை உத்தியளவில் யாருக்கும் வெற்றியில்லை;
மேல்நிலை உத்தியளவில் நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்

நியூசிலாந்து நியூசிலாந்து
 சுதந்திர பிரான்ஸ்

 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி இத்தாலி ஜியோவானி மெஸ்சே
இழப்புகள்
51 டாங்குகள்; 952 பேர்
பியூகிலிஸ்ட் தாக்குதல் தோல்வியடைந்தாலும், இரண்டாம் சூப்ப்பர்சார்ஜ் நடவடிக்கையால் மாரெத் அரண்நிலை கைப்பற்றப்பட்டது.

மார்ச் 1943ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சு படைகள் துனிசியா நாட்டின் ஒரு முனையில் சுற்றி வளைக்கப்பட்டன. மேற்கிலிருந்து அமெரிக்கப் படைகளும் கிழக்கிலிருந்து பிரித்தானியப் படைகளும் அவற்றை முற்றுகையிட்டிருந்தன. கிழக்கில் பிரித்தானிய 8வது ஆர்மி அச்சுப் படைகளின் மாரெத் அரண்கோட்டினை பெப்ரவரி மாதம் அடைந்து அதனைத் தாக்க ஆயத்தங்களைச் செய்தது. துனிசியாவில் இருந்த இறுதி பெரும் அரண்கோடு மாரெத். இதனை ஊடுருவி விட்டால் துனிசியத் தலைநகர் தூனிசை நோக்கி நேச நாட்டுப் படைகள் முன்னேற முடியமென்ற சூழ்நிலை நிலவியது. மாரெத் அரண்கோட்டின் மீதான பிரித்தானியத் தாக்குதல் மார்ச் 19ம் தேதி தொடங்கியது. கடுமையான அச்சுப் படைகளின் எதிர்ப்பு, சாதகமில்லாத புவியமைப்பு, மோசமான வானிலை போன்ற காரணங்களால் முதலில் நிகழ்ந்த நேச நாட்டுத் தாக்குதல்கள் வெற்றி பெறவில்லை.

ஆனால் மாரெத் அரண்நிலையில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே டெபாகா கணவாய் மூலமாக அச்சு அரண்நிலைகளைச் சுற்றி வளைத்துத் தாக்க பிரித்தானிய தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரி முயன்றார். இத்தாக்குதலுக்கு இரண்டாம் சூப்பர்சார்ஜ் நடவடிக்கை என்று பெயரிடப்பட்டது. டெபாகா கணவாய் மூலம் முன்னேறும் நேசப் படைகள் மாரெத் அரண்நிலையைச் சுற்றி வளைத்துவிடலாம் என்பதை உணர்ந்த அச்சுப் படைகள் பின்வாங்கி அடுத்த கட்ட அரண் நிலையான வாடி அகாரிட்டுக்கு சென்று விட்டன. பிரித்தானிய நேரடித் தாக்குதல் தோல்வியடைந்தாலும், அச்சுப் படைகளின் பின்வாங்கலால், மாரெத் அரண்நிலை நேசநாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூகிலிஸ்ட்_நடவடிக்கை&oldid=1359819" இலிருந்து மீள்விக்கப்பட்டது