ருக்மிணி தேவி அருண்டேல்

(ருக்மிணிதேவி அருண்டேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) (பெப்ரவரி 29, 1904பெப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார்.

உருக்மிணி தேவி அருண்டேல்
பிறப்புஉருக்மிணி தேவி
(1904-02-29)29 பெப்ரவரி 1904
மதுரை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு24 பெப்ரவரி 1986(1986-02-24) (அகவை 81)
சென்னை, தமிழ்நாடு
செயற்பாட்டுக்
காலம்
1920–1986
வாழ்க்கைத்
துணை
ஜார்ஜ் அருண்டேல் (தி 1920)
விருதுகள்பத்ம பூசண்: 1956
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்: 1967

வாழ்க்கை வரலாறு தொகு

உருக்மிணி தேவி, 1904 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 29 ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். உருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெசண்ட் துவக்கிய பிரம்மஞான சபையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

தியசோஃபிக்கல் சொசைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். உருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.

1920 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னிபெசன்ட் அழைத்தார். அன்னிபெசன்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், உருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெசண்ட்டின் அனுமதியோடு, உருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர்.

இத்திருமணம் அக்கால கட்டத்தில் உருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. உருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு உருக்மிணியை அன்புடன் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை உருக்மிணி கண்டதில்லை.

தமது கணவர் அருண்டேலைப் பற்றி கூறும் போது, அவரை இந்தியர்களை விடச் சிறந்த இந்தியர் என்றும் இந்திய நாட்டின் மேன்மையில், இந்திய நாட்டில் பிறந்த மகரிசிகளின் ஆன்மீக சக்தியில் நம்பிக்கை கொண்டிருந்தவர் என்றும் பாரதப் பண்பாட்டைப் புரிந்து அதை நேசித்தவர் என்றும் உருக்மிணி தேவி குறிப்பிடுவார்.[1]

1933 ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண உருக்மிணியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்றவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு உருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் உருக்மிணி. நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935 ஆம் ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார். பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். உருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது.

சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், உருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார்.

உருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார்.

1977 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், உருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 1986 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24 ஆம் தேதி, உருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

கலைகளில் பங்கு தொகு

நாட்டியம் தொகு

உருக்மிணி, தனது சிறுவயதிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆனால் அந்தக் காலகட்டத்தில் (1900 +) இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது. ஏனெனில் பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட சமூகத்தினரால் மட்டுமே செய்யபட வேண்டியது என்ற எண்ணம் பரவியிருந்தது.

அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். தேவதாசிகள் மட்டும் பயின்று, சமூகத்தில் அக்கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது இழுக்கு என்ற நிலையினை மாற்றியதில் பெரும் பங்கு உருக்மிணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார இரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. உருக்மிணி, அந்த தளத்திலிருந்து மேலெழுந்து, ஆன்மிகத்தன்மையினையும் வெளிப்படுத்தி அக்கலையினை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார்.

தேவதாசிகள் சதிராடிய போது, சேலையும், தொள தொளவென்ற கால்சட்டையும், அழகான நகைகள் பலவற்றையும் அணிந்திருந்தனர். மேலும் இவர்கள் ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் இவர்கள் பின் தொடர்ந்து நின்றோ/நடந்தோ கொண்டிருந்தனர். இந்த நிலையில், நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக உருக்மிணி கருதினார். அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்தார். பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஒர் இடத்தில் அமருமாறு செய்தார். பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியாலும் புதுவித உடைகளையும், ஒப்பனையும் செய்தார். அதைப் போலவே, மேடையின் பின்புலத்தினை மாற்றி, பிரோஸினியம் (மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் மூடிய) வகையான மேடைதான் நாட்டியத்திற்கு சிறந்தது என்று மேடையினை மாற்றினார். கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பினையும் மாற்றினார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார்.

வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார்.[2]

நெசவு தொகு

உருக்மிணி, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் முழுமையான ஆர்வம் கொண்டிருந்தார். 1937 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டொபத்யாயவின் உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும் முறையினை பயின்றார். அதோடு இல்லாமல் கலம்கரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார்.

மரபுக்கொடை தொகு

2016ல், கூகிள் நிறுவனம், உருக்மணி தேவியின் 112 வது அகவையை தமது முதற்பக்கக் கிறுக்கல் படத்தின் வாயிலாக அங்கீகரித்தது.[3][4]

பெற்ற விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. அமுதசுரபி தீபாவளி மலர் 2004; உருக்மிணி தேவி அருண்டேல்; பக்கம் 168
  2. அமுதசுரபி தீபாவளி மலர் 2004; உருக்மிணிதேவி அருண்டேல்; பக்கம் 166
  3. "Google Pays Tribute To Famous Bharatnatyam Dancer Rukmini Devi Arundale On Her Birthday". என்டிடிவி. 29 February 2016. http://www.ndtv.com/india-news/google-pays-tribute-to-famous-bharatnatyam-dancer-rukmini-devi-arundale-on-her-birthday-1282270. 
  4. "Archived Google Doodle honouring Rukmini Devi". Google. February 29, 2016. பார்க்கப்பட்ட நாள் March 1, 2016.
  5. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்மிணி_தேவி_அருண்டேல்&oldid=3770876" இலிருந்து மீள்விக்கப்பட்டது