விக்கிப்பீடியா:பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 02

பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 02
இலக்கியம் - அகிலத்திரட்டு அம்மானை பண்பாடு - இரோகுவாயிஸ் உறவுமுறை
அகிலத்திரட்டு அம்மானை

'அகிலத்திரட்டு அம்மானை' பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமயமான அய்யாவழியின் புனித நூலாகும். இதனை சுருக்கமாக அகிலம் என்றும் அழைப்பர். இது அய்யாவழி புராண வரலாற்றின் தொகுதியாகவும் விளங்குகிறது. அம்மானை வடிவில் இயற்றப்பட்ட நூல்களுள் மிகப்பெரியதான அகிலம், கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி இறைவனால் அருளப்பட்டு, அய்யா வைகுண்டரின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடரால் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அகிலத்தைப்பற்றி சீடர் அரி கோபாலன் கூறும் போது, இறைவனை பணிந்து இரவு தூங்கும் பொழுது இறைவன் அவரருகில் சென்று அகிலத்தின் முதற்பகுதியான 'காப்பு' பகுதியின் முதல் சீரான 'ஏர்' -ஐ கூறி மீதிப்பகுதியை 'உன் மனதின் அகமிருந்து கூறுவேன்' என்றதாக கூறுகிறார். ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பனை ஓலையில் பாதுகாக்கப்பட்டு வந்த அகிலத்திரட்டு அம்மானை கி.பி 1939-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

உறவுமுறைகளுக்குப் பெயரிடும் ஆறு முறைகளில் ஒன்றான இரோகுவாய்ஸ் முறையை விளக்கும் படம்
ஆறு வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ள உறவுமுறை முறைமைகளுள் இராகுவாயிஸ் உறவுமுறை முறைமையும் ஒன்று. எஸ்கிமோ, ஹவாய், குரோ, ஒமஹா, சூடான் என்பன ஏனைய இந்து முறைமைகள் ஆகும். லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பவர், 1871 ஆம் ஆண்டில், அமெரிக்க இந்தியப் பழங்குடிகளான இரோகுவோய்ஸ் மக்கள் மத்தியில் ஆய்வு நடத்தும்போது இம்முறையை முதன் முதலில் அறிந்து கொண்டதனால் இம் முறைமைக்கு அந்த இனத்தின் பெயர் சூட்டப்பட்டது.

இம் முறையில் தாய் தந்தையருடன் பிறந்த ஒத்த பாலினரைத் தாய் தந்தையரைக் குறிக்கும் உறவுமுறைப் பெயராலேயே அழைக்கும்போது, அவர்களுடன் பிறந்த எதிர்ப் பாலார் வேறு உறவுப் பெயர்களிட்டு அழைக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, தந்தையின் சகோதரர்களை, சிறிய தந்தை, பெரிய தந்தை, சித்தப்பா, பெரியப்பா எனத் தந்தை உறவு நிலையிலும், தாயின் சகோதரிகளை, சின்னம்மா, பெரியம்மா, சிற்றன்னை, பெரியன்னை எனத் தாய் உறவுநிலையிலும் வைத்துப் பார்க்கும் இம்முறை, தந்தையின் சகோதரிகளையும், தாயின் சகோதரர்களையும், அத்தை, மாமி, அம்மான், மாமா போன்ற உறவுப் பெயர்களினால் குறிப்பிடுகின்றது.

வரலாறு - பாபர் அறிவியல் - இலத்திரன் நுண்நோக்கி
பாபர்
பாபர் எனப்படும் ஸாகிருதீன் பாபர், அல்லது ஸாகிருதீன் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483 – டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசன் ஆவான். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவன் இவனே. இவன் 14 ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவனுடைய நேரடியான பரம்பரையில் வந்தவனாவான். 13 ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோனாகக் கருதப்படுகின்றான். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவன் வெற்றி பெற்றான்.

தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பாபர் பிறந்தான். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்ஸா என்பவனுக்கும், அவனது மனைவியான குத்லுக் நிகர் கானும் என்பவளுக்கும் பாபர் மூத்த மகனாவான். இவன் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவன். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இஸ்லாம் மதத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவன் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவனாக இருந்தான்.

ஒரு செலுத்தல்முறை இலத்திரன் நுண்நோக்கி.
இலத்திரனை (எலெக்ட்ரான்) ஒளி மூலமாகக் கொண்டு செயற்படும், நுண்நோக்கி இலத்திரன் நுண்நோக்கி எனப்படுகின்றது. இது நுண்ணிய பொருட்களை அதிக பிரிதிறன் வலுவுடன் (resolving power) பெரிதாக்கிக் காட்டவல்லது. இது 500,000 மடங்கு அளவுக்குப் பெரிதாக்கும் திறன் கொண்டது.

ஏர்ணஸ்ட் ருஸ்கா (Ernst Ruska) என்னும் ஜெர்மானிய இயற்பியலாளர் முதன்முதலாக இலத்திரன் நுண்நோக்கியொன்றை உருவாக்கினார். இலத்திரன் அலை இயல்புகளையும் கொண்டிருப்பதன் காரணமாக, அதை ஒளியைக் கையாள்வதுபோலக் கையாள முடியும் என அவர் நம்பினார். காந்தப்புலத்தைப் பயன்படுத்தி இலத்திரன்களைக் கட்டுப்படுத்திச் செயற்படவைக்க முடியும் என அறிந்திருந்த ஏர்ணஸ்ட், ஒளியைக் கண்ணாடி வில்லைகளைப் பயன்படுத்திக் குவியச் செய்வதுபோல், காந்தப் புலத்தைப் பயன்படுத்தி இலத்திரன் அலைகளைக் குவிக்க முடியும் என உணர்ந்தார். அலை நீளம் குறையும் போது, பெருப்பிக்கும் திறன் அதிகரிக்கும் என்பதால், குறைந்த அலை நீளம் கொண்ட இலத்திரன் அலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சாதாரண ஒளியியல் நுண்நோக்கிகளைவிட அதிக உருப்பெருக்கத்தைப் பெறமுடியும் என அவருக்குப் புலப்பட்டது. 1933 ஆம் ஆண்டில் மக்ஸ் நொல் என்னும் இன்னொரு இயற்பியலாளருடன் சேர்ந்து திருத்தமற்ற இலத்திரன் நுண்நோக்கியொன்றை உருவாக்கினார்.

கணிதம் - செறிவெண் புவியியல் - நேபாளம்
படிம விளக்கம்

கணிதவியலில் செறிவெண் (Complex Number) என்பது ஒரு மெய்யெண்ணும் ஒரு கற்பனை எண்ணும் சேர்ந்த ஒரு கூட்டெண். இது சிக்கல் எண் என்றும் கலப்பெண் என்றும் அழைக்கப்படுகின்றது.

a, b என்பது இரு மெய்யெண்களாய் இருந்தால் c என்னும் செறிவெண்ணானது கீழ்க்காணுமாறு குறிக்கப்படும்

மேலே குறிப்பிட்ட i என்பது கற்பனை எண்ணைக் குறிப்பிடும் அலகு. இதன் மதிப்பு i 2 = −1. என்னும் செறிவெண்ணில், என்னும் மெய்யெண்ணை மெய்ப் பகுதி என்றும், என்னும் மெய்யெண்ணை கற்பனைப் பகுதி என்றும் அழைக்கப்படும். கற்பனைப் பகுதி b ஆனது சுழியாக, 0, இருக்குமானால் அந்த செறிவெண் வெறும் மெய்யெண்ணாகும்.

எடுத்துக்காட்டாக , 3 + 2i என்பது ஒரு செறிவெண். இதன் மெய்ப்பகுதி 3, கற்பனைப்பகுதி 2.

செறிவெண்களை மெய்யெண்களைப் போலவே கூட்டவும், கழிக்கவும், பெருக்கவும், வகுக்கவும் இயலும். a3x3+a2x2+a1x+a0 போன்ற பல்லடுக்குத் தொடர்களின் வேர்களை மெய்யெண்களை மட்டும் கொண்டு காண இயலாது. ஆனால் செறிவெண்களையும் சேர்த்துக்கொண்டால், இவ்வகை பல்லடுக்குகளுக்குத் தீர்வும் காண இயலும்.

நேபளத்தின் கொடி
நேபாளம் ([nəˈpɑːl]?·i) இமயமலையில் அமைந்துள்ள ஒரு அழகிய நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது.


நாட்டின் மக்கள் தொகையின் 80% இந்து மதத்தை பின்பற்றுபவர்களாவார்கள். தெற்கே வெப்பமான தெராய்யும் வடக்கே குளிரான இமாலயம் கொண்ட நேபாளத்தின் புவியமைப்பு பெரிய வேறுபாடுகளை காட்டுகிறது. சிறிய தூரத்துக்குள் சமவெளியில் இருந்து உலகிலேயே மிக உயரமான இமயம் வரை நிலம் மிக விரைவாக உயர்வடைகிறது. சினாவுடனான எல்லையில் உள்ள எவரெஸ்ட் உட்பட, உலகில் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபளத்தில் காணப்படுகிறது. நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக கத்மந்து விளங்குகிறது. நேபாளத்தின் பெயரின் ஆரம்பம் குறித்த தெளிவான கருத்துக்கள் இல்லாத போதும் "நே" (புனித) "பாள்" (குகை) என்பது பொதுவான கருத்தாகும்.

சமூகம் - கிறிஸ்துமஸ் தொழில்நுட்பம் - இருமுனையம்
கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் நாசரேத்து இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாங்களில் இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் சிறிய பொம்மைகளால் செய்யப்பட்ட மாட்டுத்தொழுவ காட்சிகளும், சண்ட குலோஸ், வாழ்த்து அட்டை மற்றும் பரிசு பரிமாரல், கிறிஸ்துமஸ் மரத்தை அழங்கரித்தல் என்பன பொதுவாக அடங்கும். கிறிஸ்துமஸ் கிறிஸ்தவ கருத்துக்களோடு, கிறிஸ்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்கால கொண்டாடங்களின் சில பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.[1] மதச் சார்பற்ற பகுதிகளாக குடுமப ஒன்றுக்கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்ற படுகின்றன.

கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடடப் படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியின் டிசம்பர் 25ஐக் குறிக்கு நாளான சனவரி 7 ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.[2]

நேர் அழுத்த முறை. இருமுனையம் வழி மின்னோட்டம்
இருமுனையம் (Diode) என்பது ஒரு மின் கருவி. இன்று இது பெரும்பாலும் குறைக்கடத்திப் பொருள்களால் ஆன ஒரு நுண்மின்னணுக் கருவி. இதற்கு ஒரு திசையில் மின்னழுத்தம் தந்தால் எளிதாக கடத்தி அதிக மின்னோட்டம் தருவது, ஆனால் எதிர் திசையில் மின்னழுத்தம் தந்தால் மிகக்குறைவாகக் கடத்தி மிகக்குறைவான மின்னோட்டம் தருவது. எனவே இக்கருவியை ஒருவழிக் கடத்தி என சுருக்கமாகக் கூறலாம். இச் சிறப்புப் பண்பின் பயனாக மாறுமின்னோட்டத்தை ஒரே திசையில் பாயும் நேர்மின்னோட்டமாக நெறிப்படுத்த பயன்படுகின்றது. இருமுனையம் மிகபெரும்பாலான மின்கருவிகளில் மின் சுற்றுக்களில், இலத்திரனியல் கருவிகளில் பயன்படுகின்றது. மின்னழுத்த சீர்படுத்தி, எண்ணக்கூறு கருவிகள், குறிபலை பிரிப்பிகள், அலைப்பிகள் ஆகியவற்றின் இலத்திரனியல் சுற்றுக்களில் இருமுனையம் சிறப்பாக பயன்படுகின்றது.
நபர்கள் - சௌமியமூர்த்தி தொண்டமான் இம்மாத படிமம்
சௌமியமூர்த்தி தொண்டமான்

சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 - அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றில் அமைச்சராக பதவி வகித்தார்.

  1. ஓடினிக் ரைட், Yule
  2. ஒக்ஸ்போட் ஆங்கில கிறிஸ்தவ அகராதி (The Oxford Dictionary of Christian Church), Oxford University Press, London (1977), p. 280.