விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2025

மார்ச்சு

ஈழப்போரில் கிழக்குப் போர்முனை என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு திருக்கோணமலை மாவட்டத்தில் நெல்வயல்களுக்கான நீர் விநியோகத்தை புலிகள் துண்டித்ததைக் காரணமாக கொண்டு 2006, யூலை, 21 அன்று மோதலாக துவங்கியது. ஏறக்குறைய ஓராண்டு சண்டைக்குப் பிறகு, 2007, யூலை, 11 குடும்பிமலையை (பரோனின் தொப்பி) கைப்பற்றிய பின்னர் கிழக்கு மாகாணத்தின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இச்சமயத்தில் சம்பூர், வாகரை, கஞ்சிகுடிச்சாறு, கொக்கடிச்சுளாய், குடும்பிமலை ஆகிய இடங்களில் பெரும் போர்கள் நடந்தன. இராணுவம் மற்றும் பொதுமக்கள் இறப்புகள் இருபுறமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. மேலும்...


அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது அமெரிக்கா என்பது முதன்மையாக வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும் மற்றும் ஒன்பது சிறிய வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. நிலப்பரப்பளவு மற்றும் மொத்தப் பரப்பளவு ஆகிய இரு அளவுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவானது உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. மேலும்...

ஏப்ரல்

கேரளம் என்பது இந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி 1956 நவம்பர் 1 அன்று இது உருவாக்கப்பட்டது. கொச்சி, மலபார், தென் கன்னட மாவட்டம் மற்றும் திருவாங்கூரின் அப்போதைய பகுதிகளின் மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது. 38,863 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், 21-ஆவது மிகப் பெரிய இந்திய மாநிலமாக கேரளம் உள்ளது. இதற்கு வடக்கு, வடகிழக்கே கருநாடகமும், கிழக்கு, தெற்கே தமிழ்நாடும், மேற்கே இலட்சத்தீவுக் கடலும் எல்லைகளாக உள்ளன. மேலும்...


டேனியக் கோட்டை என்பது தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க் நாட்டவர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டென்மார்க்கு அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டென்மார்க்கர்களின் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845 ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தம் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947-க்குப் பின்னர் 1978 வரை இக்கோட்டை தமிழ்நாட்டு அரசால் ஆய்வு மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. மேலும்...

இந்தித் திணிப்பு என்பது மொழி மேலாதிக்கத்தின் ஒரு வடிவமாகும். இதில் இந்தியைப் பிராந்திய மொழியாகக் கொண்டிராத அல்லது பயன்படுத்த விரும்பாத இந்திய மாநிலங்களில் இந்தியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இந்தச் சொல் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் வேரூன்றியது. மதராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டபோது அது ஒரு சிக்கலாக மாறியது. மேலும்...


உருசியா என்பது கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியாவில் பரவியிருக்கும் ஒரு நாடு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நாடு இது தான். இது 11 நேர வலயங்களுக்கு விரிவடைந்தும், 14 நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டும் உள்ளது. உலகின் ஒன்பதாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடும், ஐரோப்பாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் இதுவாகும். உருசியா அதிக அளவு நகரமயமாக்கப்பட்ட ஒரு நாடாகும். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 16 மக்கள் தொகை மையங்களை இது உள்ளடக்கியுள்ளது. மாஸ்கோ இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். சென் பீட்டர்சுபெர்கு உருசியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும், இதன் பண்பாட்டுத் தலைநகரமும் ஆகும். மேலும்...

குப்தப் பேரரசு என்பது ஒரு பண்டைக் கால இந்தியப் பேரரசு ஆகும். இது அதன் உச்சபட்ச நிலையின் போது, தோராயமாக பொ.ஊ. 319 முதல் 467 வரை, பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டத்தை உள்ளடக்கியிருந்தது. பிற வரலாற்றாளர்கள் இதன் பின்னர் வரும் இயல்பாக்கத்தை விவாதத்திற்கு உள்ளாக்குகின்ற போதிலும், சில வரலாற்றாளர்களால் இக்காலமானது இந்தியாவின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. பேரரசின் ஆட்சி புரிந்த அரசமரபானது குப்தரால் நிறுவப்பட்டது. அரசமரபின் மிகுந்த குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களாக முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆகியோர் திகழ்ந்தனர். மேலும்...


சுபான்சூ சுக்லா இந்திய விமானப்படையின் பரிசோதனை விமானியாவார். மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவர். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயணச் சேவைகள் நிறுவனமான ஆக்சிம் விண்வெளி நிறுவனத்தின் ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் 2025 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குப் பயணம் செய்ய உள்ளார். மேலும்...

மே

சீனா கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரபூர்வமாக சீன மக்கள் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தியாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இதுவாகும். ஐந்து நேர வலயங்களுக்குச் சமமாக சீனா விரிவடைந்துள்ளது. 14 நாடுகளுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 96 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுடன் மொத்த நிலப்பரப்பளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடு இதுவாகும். இந்நாடானது 33 மாகாண நிலைப் பிரிவுகள், 22 மாகாணங்கள், ஐந்து சுயாட்சிப் பகுதிகள், நான்கு மாநகராட்சிகள் மற்றும் இரண்டு பகுதியளவு சுயாட்சியுடைய சிறப்பு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெய்சிங் இந்நாட்டின் தலைநகரம் ஆகும். மேலும்...


சர்வோதயக் கல்வி என்பது அறிவும் உழைப்பும் தனித்தனியானவை அல்ல என்பதைக் கூறும் ஒரு கொள்கையாகும். இந்தக் கல்வியியல் கொள்கையின் அடிப்படையில் அதே பெயரில் ஒரு கல்விப் பாடத்திட்டத்தை மகாத்மா காந்தி ஊக்குவித்தார். இந்தச் சொற்றொடர் 'அனைவருக்கும் அடிப்படைக் கல்வி' என மொழிபெயர்க்கப்படுகிறது. இது ஆங்கிலக் கல்வி முறை, காலனித்துவத்துடன் காந்திக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. காந்தியக் கல்வி முறையானது குழந்தைகள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனைத் திறனையும் காட்டும் தொழில் பட்டறைகளை அறிமுகம் செய்யும் கல்வியாக இருந்தது. மேலும்...