ஆதீண்டுக்குற்றி

ஆதீண்டுக்குற்றி (ஆ+தீண்டும்+குற்றி) என்பது ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தங்கள் உடலில் திணவு ஏற்படும் போது உடலை சொரிந்து கொள்வதற்கு வைக்கப்பட்ட கல் ஆகும். இது முன்னோர் வகுத்த 32 அறங்களுள் ஒன்று.[1] பண்டைய தமிழ் மக்கள் கோவிலுக்கு கொடை அளிப்பது, ஏரி குளங்கள் வெட்டுவது போன்ற அறச்செயல்களில் ஒன்றாக, ஆடு மாடுகளின் இயற்கை உணர்வுகளை திருப்தி படுத்தும் விதமாக இதுபோன்ற அறச்செயல்களைச் செய்துள்ளனர்.

பயன்பாடு தொகு

ஆ என்ற சொல், இலக்கியங்களில் பசுக்களை, பொதுவாக கால்நடைகளைக் குறிக்கிறது. கால்நடைகளுக்கு, உடம்பில் திணவெடுக்கும் பொழுது, அந்தத் திணவைப் போக்கிக் கொள்வதற்காக, நடப்பட்ட கல்தான் ஆதீண்டு குற்றி. மேய்ச்சல் நிலங்களுக்கு அருகிலும், குளக்கரைகளுக்கு பக்கத்திலும் உயரமான கல் தூண், மரக்கட்டைகளை நட்டு வைத்தனர். மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு திணவு ஏற்படுகின்றது. திணவைத் தீர்க்க அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன. இந்தத் தூண்களில் கால்நடைகள் தங்கள் முதுகை உரசிக்கொள்ளும். கால்நடைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து இதை உருவாக்கினர். மரங்களில் உரசினால் வளர்ச்சி பாதிக்கும் என்பதை அறிந்தே, இந்த ஏற்பாட்டை செய்தனர். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பெருஞ்சொல் அகராதியில், பசுக்கள் உராய்ந்து தம் அரிப்பை நீக்குவதற்கு ஏற்ப நடப்படும் உயரமான கல்தூண் 'ஆதீண்டு குற்றி' என்கிறது.[1]

இலக்கிய குறிப்புகள் தொகு

ஐங்குறுநூறு (277:1-2) பாடலில், 'குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[2] 13, 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் 'தன்மத்தறி' என்று இக்கல்லைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மத்திற்காக நடப்பட்ட கல் என்பது, இதன் பொருள்.

வேறு பெயர்கள் தொகு

  • தன்மத்தறி
  • நடுதறி
  • ஆவுரிஞ்சி
  • ஆவுரிஞ்சு தறி
  • ஆதீண்டு கல்
  • ஆவோஞ்சிக்கல்
  • ஆவுரிஞ்சிக்கல்
  • மாடுசுரகல்
  • திணவுக்கல்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35036&ncat=1360
  2. http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0028.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதீண்டுக்குற்றி&oldid=3479602" இலிருந்து மீள்விக்கப்பட்டது