இம்மென் கீரனார்

இம்மென் கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் காணப்படுகிறது. அது அகநானூறு 398ஆம் பாடலாக அமைந்துள்ளது. இந்தப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரது பாடலில் ஆறு 'இம் என்று' அழுதுகொண்டு செல்வதாகப் பாடியுள்ளார். அதைக்கொண்டு அகநானூற்றைத் தொகுத்தவர் இவருக்கு இம்மென் கீரனார் என்று பெயர் சூட்டியுள்ளார்.

அகம் 398 \ குறிஞ்சி \ பாடல் தரும் செய்தி தொகு

அவனுக்கும் அவளுக்கும் திருமணம் உறுதியாயிற்று. திருமண நாள் தொலைவில் உள்ளது. அவள் காம உணர்வால் துடிக்கிறாள். அவன் நாட்டு மலையிலிருந்து இறங்கித் தன் நாட்டில் பாய்ந்துவரும் ஆற்றிடம் பேசுவது போலத் தன் காமத்தை வெளிப்படுத்துகிறாள். இதனைக் காமம் மிக்க கழிபடர் கிளவி என்பர்.

அவன் மலையிலிருந்து வரும் ஆறே!
என் அணிகலன்கள் கழன்று விழுகின்றன. என் நினைவுத் துன்பமே என்னைப் புலம்ப வைக்கிறது. அதனால் என் தோள் நெகிழ்ந்துபோகிறது. கொன்றைப் பூ உதிர்ந்து கிடப்பது போல என் மேனியிலும் நெற்றியிலும் பசலை படர்ந்திருக்கிறது. இப்படி இருக்கும் என்னிடம் உன்னுடையவன் அருளாது இருக்கிறான்.இந்தக் கொடுமை உனக்கும் தெரிகிறது. அதனால் நீ இம் என்று உன் கண்ணீரை வெள்ளமாக்கிக்கொண்டு பாய்கிறாய். அவனை விட்டு அகன்று வந்துவிட்டால் என் துன்பம் தீர்ந்துவிடுமா? நீ அவனை விட்டு அகன்று வருவதைப்பற்றி அவன் என்ன நினைத்துக்கொள்வானோ? அதுவும் உனக்குத்தானே தெரியும்?

உன் நீத்த வெள்ளக் கண்ணீரை அவனுக்குக் காட்டாமல் மலையிலுள்ள பல மலர்களை ஆடையாகப் போர்த்திக்கொண்டு அவன் செயலுக்காக நாணி, ஒடுங்கி, அவனுக்குத் தெரியாமல் மறைந்துகொண்டு அவனை மறந்து நன்றி இல்லாமல் ஓடிவரும் நீ என்னையும் விட்டுவிடு வல்லமை உனக்கு உண்டு அல்லவா? அதனால் உன்னிடம் நான் எடுத்துச் சொல்லி என்ன ஆகப்போகிறது? அவர்தானே உன்னை எனக்குத் தந்தவிட்டுத் தான் என்னைத் துறந்திருக்கிறார்.

(நொதுமலாளர் = ஒருவகையில் சுற்றத்தாராக இருந்துகொண்டு அடுத்தவரைக் கண்டும் காணாமல் வாழ்பவர்)
(கண்ணோட்டம் = மனக்கண்ணாகிய கருத்தை இரக்கமாக ஓடவிடுதல்)

என் நொதுமலாளர் என்மீது கண்ணோடவில்லை. நெருப்பின் அழற்கட்டிகள் போல வேங்கைமலர் பூத்திருக்கும் மரயிழலை விட்டுவிட்டு இளைப்பாறுகிறார்கள். என்னுடைய தந்தை ஆரியர் இருப்புக் கொண்டுள்ள பொன்படு நெடுவரை (இமயமலை) போன்ற வெள்ளை உள்ளம் கொண்டவர். ஆறே! நீ அவருடைய கானத்தில் இளைப்பாறிவிட்டுச் சென்றால் உனக்குச் சிதைவு நேர்ந்துவிடுமோ?

நீ பிறந்துவந்த மலையைப் பார். பாய்ந்து கொல்ல உடலை வளைத்துக்கொண்டு வந்த வரிப்புலியோடு போராடிப் புண்பட்டு வரும் ஆண்யானை தான் போராடியபோது வருந்திய பெண்யானையைத் தழுவிக்கொண்டு உணவுக்காக மூங்கிலை வளைக்கும்போது அந்த மூங்கில் நரலும் (அழுவொலி செய்யும்)

இறைச்சிப் பொருள்
பெண்யானை போல் ஆவள் வருந்துகிறாள். ஆண்யானை போல் அவன் அவளை அவன் பேணவேண்டும். கழை நரலுவது போல ஆறு நரலவேண்டும். இம் என்று ஓடக்கூடாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்மென்_கீரனார்&oldid=3173800" இலிருந்து மீள்விக்கப்பட்டது