இரணியல் அரண்மனை

இரணியல் அரண்மனை (Eraniel Palace) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின், தக்கலையில் இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ள சேரர் கால அரண்மனையாகும். இது ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பழமையான அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையானது தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய இடமாக இருந்தது, ஏனென்றால் இரணியல் நகரம் பதினாறாம் நூற்றாண்டு வரை வேணாட்டின் பருவகால தலைநகரமாக இருந்தது. இந்த அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்தார். அவரது காலத்துக்கு பிறகு தலைநகரானது பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டது.[1]

முகப்பு வாயிலில் இருந்து இரணியல் அரண்மனையின் தோற்றம்

கட்டடக்கலை தொகு

இந்த அரண்மனையானது ஆறு ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. இது பண்டையச் சேரர் கட்டிடக் கலையின் எச்சமாகும். இருப்பினும், பல தசாப்தங்களாக புறக்கணிப்பட்டதன் காரணமாக இது பெரும்பாலும் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, அரண்மனையின் மூன்று பகுதிகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய பகுதிகளாக உள்ளன:

  • படிப்புரம் என்னும் முதன்மை அரண்மனைக்கு செல்லும் பெரிய நுழைவாயில் (இது தற்போது முழுமையாக அழிவில் உள்ளது)
  • குதிரை மாளிகை (குதிரைக் கொட்டடி), இது அரண்மனை வளாகத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. இது ஒரு சிறிய இரட்டை மாடி வீட்டின் முற்றத்தில் உள்ளது.
  • வசந்த மண்டபம் இதில் எட்டரை அடி நீளமும், நான்கரை அடி அகலமும் கொண்ட ஒரே பளிங்குக் கல்லால் ஆன படுக்கை இருக்கிறது.   இது அழகிய சிற்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இது அரண்மனையின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு மன்னராக பட்டம் சூட்டிக் கொள்பவர்கள் பள்ளியறையில் சேரமானின் உடை வாளை வைத்து, ‘எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாட்டு மக்களை காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி எடுப்பார்கள். இதுக்கு ‘வாள் வச்ச சத்தியம்’ என்பது பெயர்.

இவ்வளவு பழமைவாய்ந்த இந்த அரண்மனை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பல கட்டட அமைப்புகள் இடிபட்ட நிலையிலும், கூரை விழுந்த நிலையிலும் முழுமையாக அழியக்கூடிய நிலையில் உள்ளது.[1][2][3] இதில் உள்ள பல கலைப்பொருட்கள் களவாடப்பட்டும் உள்ளது.

மறுசீரமைப்பு தொகு

இந்த அரண்மனை எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. வழக்கமாக இது போன்ற பாரம்பரிய பெருமைமிக்க நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறைதான் பராமரிக்கும். ஆனால், இரணியல் அரண்மனை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பழமை மாறாமல் புனரமைக்க 3.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக 2014 இல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனபின்பும் அரண்மனையை புணரமைக்கும் பணி துவங்கவில்லை.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "The rise and fall of Eraniel palace, Sharat Sunder Rajeev". The Hindu. 17 June 2016. http://www.thehindu.com/features/metroplus/society/The-rise-and-fall-of-Eraniel-palace/article14428003.ece. பார்த்த நாள்: 2017-11-06. 
  2. "Eraniel Palace - An Unknown Secret Palace of Kanyakumari". YouTube. 18 September 2016. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  3. "Historic Eraniel palace is undergoing a Silent death, Kanyakumari- India Travelogue (English)". YouTube. 20 June 2015. பார்க்கப்பட்ட நாள் 20 November 2017.
  4. என். சுவாமிநாதன் (15 சூன் 2017). "அடையாளத்தை இழந்து அவமானங்களை சுமந்து நிற்கும் இரணியல் அரண்மனை". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரணியல்_அரண்மனை&oldid=3576640" இலிருந்து மீள்விக்கப்பட்டது