இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது நகரத்தாரின் ஒன்பது கோயில்களில் ஒன்றாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் அரியக்குடி அருகே இலுப்பைக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இவ்வூரின் முந்தைய பெயர் இலுப்பை வனம் என்பதாகும்.[1]

இறைவன், இறைவி தொகு

இக்கோயிலின் மூலவராக தான்தோன்றீசுவரர் உள்ளார். மூலவர் சிறிய அளவில் உள்ளார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். இறைவி திருவாட்சியுடன் காணப்படுகிறார். கோயிலின் தல மரம் வில்வம் ஆகும். பைரவர் தெப்பம் கோயிலின் தீர்த்தமாகும். சித்திரையில் பிரம்மோற்சவம், சிவராத்திரி, கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிசேகம் உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயில் நடைபெறுகின்றன.[1]

அமைப்பு தொகு

இங்குள்ள பைரவர் ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார். அவரது கையில் அட்சய பாத்திரம் காணப்படுகிறது. வலப்புறம் உள்ள நாய் அவரது பாதத்தைப் பார்க்கிறது. இடப்புறம் உள்ள நாய் நின்ற நிலையில் உள்ளது. இங்கு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன் மண்டபத்தூணில் ஒரு அங்குல அளவிலான விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கிரீடம் அணிந்த நிலையில் உள்ளார். இறைவி சன்னதியின் எதிரில் உள்ள தூணில் வராகி உள்ளார்.

தொன்மம் தொகு

கொங்கண சித்தர் மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்று தங்கம் தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, “சுயம்பிரகாசேஸ்வரர்” என்றும், “தான்தோன்றீஸ்வரர்” என்றும் பெயர்கள் ஏற்பட்டன.[1]

மேற்கோள்கள் தொகு