எஸ். எம். குமரேசன்

தமிழ்த் திரைப்பட நடிகர்

எஸ். எம். குமரேசன் (1930 - 1977) என்பவர் தமிழகத் திரைப்பட நடிகர், நாடக நடிகர், மற்றும் திரைப்பட தயாரிப்பாளராவார்.

வாழ்க்கை தொகு

எஸ். எம். குமரேசன் குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர். சிறுவனாக இருந்தபோதே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் குழுவில் சேர்ந்து, பல்வேறு இதிகாச நாடகங்களில் நடித்தவர். 1948 ஆம் ஆண்டு அவரது பதினேழாவது வயதில், அபிமன்யு படத்தின் நாயகன் ஆனார். அதன்பிறகு தன அமராவதி, விகடயோகி, ஓடாதே நில், கலியுகம், பாவக்குட்டி (மலையாளம்) உட்பட பல படங்களில் நடித்தார். மேலும் இவர் ஆயிரக்கணக்கான நாடகங்களில் நடித்துள்ளார். எஸ்.எம்.கே பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய குமரேசன், சிவாஜி கணேசன், சரோஜா தேவி ஆகியோரின் நடிப்பில் வானவில் என்ற படத்தையும், அவரே கதாநாயகனாக நடித்து மூங்கில் பாலம் என்ற படங்களைத் தயாரித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களும் வெளிவராமல் பெருத்த இழப்புக்கு ஆளானார்.

இறப்பு தொகு

1977 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வள்ளி திருமணம் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி தன் 47 வயதில் இறந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. கே.கே.மகேஷ் (1 திசம்பர் 2017). "நடிக்கும்போதே மரணம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எம்._குமரேசன்&oldid=3576766" இலிருந்து மீள்விக்கப்பட்டது