ஓட்டங்காடு மாரியம்மன் கோயில்

திருக்கோயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் அன்னை சீதளாதேவி மாரியம்மன் ஓட்டங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களின் ஒருமித்த இஷ்ட தெய்வமாகவும் பல்வேறு வெளியூர் மக்களுக்கு குலதெய்வமாகவும் விளங்கி வருகிறாள்.

தலவரலாறு தொகு

இக்கோயிலுக்கு அதிகாரபூர்வமான தலவரலாறு எதுவும் இல்லையென்றாலும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அம்மனை பற்றி ஒரு கதை வழங்கி வருகிறது. அது என்னவென்றால் வெகுகாலத்திற்கு முன்பு ஒருநாள் அன்னை மாரியம்மன் மூதாட்டி வடிவம் கொண்டு இப்பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்பொழுது அருகில் இருக்கும் கண்ணங்குடி எனும் கிராமத்தில் ஒரு பண்ணையார் தன் கரும்பு தோட்டத்தில் சாறுபிழிந்து காய்ச்சி ஆட்களை வைத்து வெல்லம் தாயரித்து கொண்டிருந்தாராம். அங்கு சென்ற மூதாட்டி வடிவில் இருந்த அம்மன் மிகவும் தாகமாக இருக்கிறது ஒருக்குவளை கரும்புசாறு வேண்டுமென்று கேட்கவே பண்ணையார் கடுமையாக வசைமாரி பொழிந்து காலையிலேயே பிச்சை எடுக்க வந்துவிட்டாயா? என்று மூதாட்டியை விரட்டி விட்டாராம். அந்த மூதாட்டி சென்ற சிறிது நேரத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் அனைவரும் செயலற்று போய் சிலையாக நின்று விட்டனராம். திடுகிட்ட பண்ணையார் சற்று முன்புவந்த மூதாட்டி ஏதோ தெய்வமோ பூதமோ தெரியவில்லை அவரை அவமதித்த காரணத்தால் தான் தனது ஆட்கள் இவ்வாறு நிற்கின்றனர் போலும் என்று உணர்ந்து குடம் நிறைய கரும்புசாறு எடுத்துக்கொண்டு மூதாட்டி சென்ற வழியே ஓடினாராம். சிறிது நேரத்தில் ஒட்டர் எனும் இனக்குழுவை சேர்ந்த மக்கள் தங்கியிருந்த காட்டு பகுதியை அடைந்தவர் அங்கு மாடுமேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களிடம் மூதாட்டி எவரேனும் வந்தாரா? என்று விசாரித்தார். அந்த சிறுவர்கள் ஆமாம் ஐய்யா இங்கு ஒரு பாட்டி வந்தாங்க களைப்பா இருக்கு இந்த இடத்த கொஞ்சம் சுத்தம் பண்ணி கொடுங்க நான் உக்காரணும் என்று கேட்டாங்க, நாங்களும் சுத்தம் பண்ணி கொடுத்தோம் தரையில உக்காந்த பாட்டி பூமிய பொளந்துகிட்டு கீழ போயிட்டாங்க. இந்த இடம் மறுபடியும் பழைய மாதிரி ஆயிட்டுது. என்று தங்களுக்கு நிகழ்ந்த அதிசயத்தை கூறவே ஆடிப்போன பண்ணையார் தன்னை மன்னித்து விடும்படி அங்கேயே அழுது புரண்டிருக்கிறார். உடனே மூதாட்டி வடிவில் இருந்த அம்மன் மீண்டும் தோன்றி சுயரூப தரிசனம் தந்து. இந்த பகுதி பிடித்து போனதால் இங்கு கோயில் கொள்ள எண்ணினோம். எனக்கொரு மாடக்கோயில் கட்டி வழிபடு, இந்த பகுதி மக்களுக்கு கிராமதேவதையாக இருந்து அருள் பாலிப்பேன் என்று கூறி மறைந்தாராம். பிறகு அந்த பண்ணையார் ஒரு மாடக்கோயிலை அமைத்து வழிபட்டாராம்.

கோயிலின் பழமை தொகு

இந்த பகுதியில் வசிக்கும் நூறு வயதை நெருங்கிய கிழவர் ஒருவரிடம் விசாரித்த பொழுது அவருடைய தாத்தா காலத்தில் கூட ஓட்டங்காடு கோயிலில் தீமிதி நடந்தது எனக்கூறியுள்ளார். மேலும் ஆலயத்தின் உள்ளே அமைக்க பட்டிருக்கும் அம்மனின் திருவுருவம் தேய்ந்து போய் பழமையாக இருப்பதிலிருந்து ஆலயத்தின் பழமையை அறிய முடியும் என்றாலும் கோயிலுக்கு எழுதப்பட்ட வரலாறு ஏதும் இருப்பதாக அறிய முடியவில்லை. பிற்காலத்தில் தருமை ஆதின ஆட்சிக்கு வயப்பட்ட இவ்வாலயம் நூதனமாக கட்டபெற்றுள்ளது.

திருவிழா தொகு

எல்லா மாரியம்மன் கோயிலிலும் ஆடி சித்திரை மாதங்களில் விழா நடக்கும் என்றாலும் ஓட்டங்காடு ஆலயத்தில் பங்குனி மாதம் திருவிழா நடக்கிறது. பங்குனி மாதம் முதல் வெள்ளியன்று அம்மனுக்கு காப்புக்கட்டி மூன்றாம் வெள்ளியன்று தீமிதி உற்சவம் நடக்கிறது. மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று துவங்கி தீமிதி அன்று வரை இரவு நேரங்களில் அம்மன் வீதியுலா வறுகிறார். குறிப்பாக அருகிலுள்ள கீழ்மாத்தூர், வாழ்க்கை, வள்ளுவபுள்ளி, கண்ணங்குடி, வெள்ளத்திடல், போன்ற கிராமங்களுக்கு முறையே ஒருநாள் எழுந்தருளும் அம்மனுக்கு அந்தந்த கிராம மக்கள் வானவேடிக்கையுடன் ஆட்டுகெடா வெட்டி பலியிட்டு தங்கள் பக்தியை வெளிபடுத்துகின்றனர். சுற்று பகுதிமக்கள் அல்லாமல் பல்வேறு வெளியூர் மக்களுக்கு குலதெய்வமாகவும், கண்கண்ட பேசும் தெய்வமாகவும் அன்னை விளங்குவதால் மிகுந்த பிரசித்தி பெற்ற கோயிலாக ஓட்டங்காடு சீதளாதேவி மாரியம்மன் ஆலயம் விளங்கி வருகிறது.

அமைவிடம் தொகு

நாகைமாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து செம்பனார்கோயில் வழியே செல்லும் 23 என்ற பேருந்திலும் 387 என்ற அரசு பேருந்திலும் சென்றால் ஆலயத்தினை அடையலாம். மேலும் திருக்கடையூருக்கு மேற்கே செல்லும் கீழ்மாத்தூர் பாதையில் ஐந்து கிமீ பயணித்தாலும் ஆலயத்தினை அடையலாம்.