ஓய்மானாட்டு நல்லியக்கோடன்

ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். பத்துப்பாட்டு நூல் தொகுப்பில் உள்ள சிறுபாணாற்றுப்படை இவனது வள்ளண்மைச் சிறப்புகளைக் கூறுகிறது.

கடையெழு வள்ளல்களின் கொடைத்தன்மையைப் போற்றி அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் அவர்கள் ஈகைநுகம் பற்றி இழுத்துச் சென்ற கொடை என்னும் தேரை இவன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் எனப் புலவர் குறிப்பிடுகிறார்.

பாடலில் இவன் ‘நன்மா இலங்கை கிழவோன்’ எனப் போற்றப்படுகிறான்.

இவன் தன் குடும்பத்தாருடன் உடனமர்த்திப் பாணர்களுக்கு விருந்து படைப்பானாம்.

இவன் பாணர்களுக்கு நல்கும் பரிசிலைப் பாண்டில் என்னும் தேர்வண்டியில் ஏற்றி வண்டி ஓட்டும் பாகனோடு அனுப்பிவைப்பானாம்.

புறநானூறு 176 புறத்திணை நன்னாகனார் பாட்டு தொகு

இப்பாடலில் நல்லியக்கோடன் ‘பெருமாவிலங்கைத் தலைவன்’ என்று சிறப்பிக்கப்படுகிற்றான்.

இவனது ஊரிலுள்ள மகளிர் ஓரை விளையாடும்போது பன்றி உழுத சேற்றைக் கிண்டுவார்களாம். அப்போது அவர்களுக்கு ஆமை முட்டையும், ஆம்பல் கிழங்கும் கிடைக்குமாம். அவை அவர்களுக்குத் தேன்போல் இனிக்கும் தீனி ஆகுமாம்.

பாரியின் பறம்புமலையில் பனிச்சுனை ஒன்று இருந்தது. அதன் தெளிந்த நீர் அவ்வூர் மக்களுக்கு இனிப்பது போல நல்லியக்கோடன் தொடர்பு நன்னாகனாருக்கு இனிக்குமாம்.

மேலும் காண்க தொகு