காலேசுவரம் முக்தேசுவரர் கோயில்

காலேசுவரம் முக்தேசுவரர் கோயில் என்பது ஆந்திர மாநிலம் காலேஸ்வரத்தில் அமைந்துள்ளது.[1] காலேஸ்வரத்தினை முக்தேஸ்வரம், மந்த்ரகூடம் என பல பெயர்களில் அழைத்துள்ளனர், இதில் மந்த்ரகூடம் என்பது புராணப் பெயராகும். இந்த ஊரில் கோதாவரி மற்றும் உபநதியான ப்ரணாஹிதா ஆறுகளும், அந்தர்வாகினி எனப்படும் சரஸ்வதி நதியும் சங்கமிக்கின்றன. இதனால் தட்சிண திரிவேணி சங்கமம் எனப்படுகின்றன.

மூலவரும் அம்பிகையும் தொகு

இச்சிவாலய மூலவர் ஒரே பீடத்தில் அமைந்திருக்கும் இரட்டை இலிங்களாகும். இந்த மூல இலிங்கங்கள் யமதர்மனின் அம்சமான காலேஸ்வரன் என்றும், முக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு இலிங்கங்களை ஒருசேர தரிசித்தால் முக்தி என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் காலேசுவரரை வழிபட்ட பின்னர், முக்தேசுவரரை வழிபடுகின்றனர். சிவபெருமானுக்கு காவலர்களாக இருப்பவர்கள் சிருங்கி மற்றும் பிருங்கி என்ற இரு துவாரபாலகர்களாவார்கள். இவர்களில் சிருங்கியின் பின் கரங்களில் பாம்பும், திரிசூலமும் உள்ளன. பிருங்கியின் பின் கரங்களில் டமருகமும், சிவபெருமானின் ஆயுதமான கட்வாங்கமும் உள்ளன. தனிச்சன்னதியில் உமையம்மை சுபானந்த தேவி என்ற பெயரில் இருக்கிறார்.

பிற சன்னதிகள் தொகு

இச்சிவாலயத்தில் சரஸ்வதி தேவி, தசபுஜ சிந்தாமணி கணபதி, விஜய கணபதி, மகா கணபதி, மகாவிஷ்ணு, துர்க்கா தேவி, அன்னபூர்ணா தேவி, சொர்ணாகர்ஷ்ண பைரவர், காலபைரவர், வீரபத்திரர், சுப்ரமணியர், காசிவிசுவநாதர், பாலராஜேஸ்வரர், ஜ்யேஷ்டா தேவி, அனுமன், நவகிரகம் போன்ற சந்நதிகள் உள்ளன.

விழாக்கள் தொகு

மகாசிவராத்தி முக்தேசுவரர் – சுபானந்த தேவி திருமணம் கார்த்திகை மாதம் – புஷ்கர ஸ்நானம்

யமகூட பிரதட்சணம் தொகு

யமகூட பிரதட்சணம் என்பது சிவாலயத்தின் முன்புள்ள யமகுண்ட தீர்த்ததில் நீராடிவிட்டு, மூலவரை தரிசனம் செய்கின்றனர். பின்பு யமகோணம் என்ற நான்கு வாயில்களுடன் கூடிய சிறிய தாழ்வான மண்டபத்திற்குள் குனிந்து நுழைந்து வலம் வருகின்றனர். இது இச்சிவாலயத்தில் முக்கிய பிராத்தனையாகும். இதை கடைபிடிப்பதால் மரணபயம் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

ஆதாரங்கள் தொகு

  1. குமுதம் பக்தி ஸ்பெசல் பக்கம் 16-17-18