தொழில் சார்ந்த கலைகள் கைவினைக் கலைகள் ஆகும். பெரும்பாலும் இவை கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிப்பது ஆகும்.

கைவினைக் கலைகளாக அறியப்படுபவை

மண்பாண்டங்கள் செய்தல், மூங்கில் கூடைகள் வனைதல், பாய் முடைதல், பட்டு நெசவு செய்தல், பிரம்பு பின்னுதல், மண் பொம்மைகள் தயாரித்தல் மற்றும் பரதநாட்டிய நடன கலைஞர்கள் அணியும் கோவில் நகைத்தொழில் போன்றவை கிராமப்புறக் கைவினைக் கலைகள் ஆகும்.

கைவினைப் பொருட்களின் தொன்மைச் சிறப்பு

மண்பாண்டங்கள், மூங்கில் கூடைகள், பாய் போன்ற பொருட்கள் மண்பாண்டப் பொருட்கள், மண் பொம்மைகள் தயாரித்தல் பழமை வாய்ந்த கோவில் நகைகள் தயாரித்தல் கைவினை தொழிலாக கருதப்படுகிறது.

மண்பாண்டங்கள் தயாரித்தல்

கிராமப்புறங்களில் வேளார் என்று அழைக்கப்படும் குயவர்களால் களிமண் கொண்டு திருவை மூலம் விதம் விதமான பாண்டங்கள் செய்யப்படுகின்றன. தற்காலத்தில் மண்பானையில் தண்ணீர் சேகரித்துக் குடித்தால் உடலுக்குக் குளிர்ச்சி என்ற கருத்து மக்களிடையே பரவி இருப்பதால் மண்பானையில் திருகு குழாய் வைத்து செய்யப்பட்ட மண்பானைகள் சாலையோரங்களில் விற்பனைக்கு வைக்கப் படுகின்றன.

மூங்கில் கூடைகள்

உள்ளூரிலேயே கிடைக்கும் மூங்கில்களைக் கொண்டு வனையப்படும் கூடைகளை குறவர் இன மக்கள் அன்றாடம் விற்பனை செய்வதைக் காணலாம். பொருட்களை சேகரம் செய்து வைக்கவும், பழக்கூடை, பூஜைக்கூடை, விளையாட்டுப் பொருட்கள் எனப் பல்வேறு வடிவங்களில் மூங்கில் தயாரிப்பு பிரசித்து பெற்று விளங்குகிறது. நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில் மூங்கில் கூடைகளைப் பயன்படுத்துவது சிறப்பு.

பாய் முடைதல்

கோரைப்பாய்-இதன் தனிச்சிறப்பு கோடைக்காலத்தில் குளிர்ச்சியையும், மழைக்காலத்தில் வெப்பத்தையும் தர வல்லது. இது ஆற்றோரங்களில் கிடைக்கும் தரமான புல் வகையைச் சேர்ந்த கோரைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பத்தமடை பாய் சிறப்பு வாய்ந்தது. பல்வேற வண்ணங்களில் எழுத்துக்கள், படங்கள் இடம்பெற்ற பாய்களம் விற்பனைக்கு வருகின்றன.

பட்டு நெசவு

திருமண நிகழ்வுகளில் இன்றியமையாத ஆடையாக விளங்குவது பட்டுத் துணி. தறி கொண்டு கையால் நெசவு செய்யப்படும் பட்டிற்கென தனி மவுசு உண்டு. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருபுவனம் ஆகிய ஊர்கள் பட்டு நெசவிற்கும் பெயர் பெற்றவை.

பிரம்பு பின்னுதல்

Calamus Rotang - என்ற தாவரவியல் பெயர் கொண்ட பிரம்பு கொடி வகையைச் சார்ந்தது. பிரம்பை பயன்படுத்தி தொட்டில், மேசை, பழக்கூடை, நாற்காலி, விதவிதமான கூடைகள் போன்றவை செய்யப்படுகிறது. பிரம்பு குளிர்ச்சியுடையது. அதிக நாட்கள் நீடித்து உழைக்கக் கூடியது. சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் மக்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே இப்பிரம்பு பொருட்களின் விற்பனையை செய்கின்றனர்.

மண்பொம்மைகள் தயாரித்தல்

களி மண்ணை அச்சுக்களில் பரப்பி செய்யப்படும் சிறுசிறு மண் பொம்மைகள் பல்வேறு வண்ணங்களில் மக்களால் செய்யப்படும் பொம்மைகள் வீடுகளில் அலங்காரப் பொருட்களாக பயன்படுகின்றன. கைவினைக் கலைகள் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இயந்திரங்களின் ஆதிக்கத்தால் நலிவடைந்து வருகின்றன. இருப்பினும் மக்கள் துயர் துடைக்க கைவினை கலைகளைக் காக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவினைக்_கலைகள்&oldid=3830091" இலிருந்து மீள்விக்கப்பட்டது