அன்புடன் கிரிதரனுக்கு,
வணக்கம்.
நீங்கள் திண்ணை இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரை வாசித்தேன். நூலகம் தமிழிலக்கிய உலகில் பரவலாக அறிமுகமாகி வருகிறதென்பதை அறிகையில் மகிழ்ச்சி தான். நூலகம் தொடர்பில் நீங்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்க விரும்புகின்றேன்.
தயவுசெய்து நூலகம் விக்கியின் "நூலகம் திட்ட விளக்கம்" பகுதியை முதலில் பார்வையிடுங்கள். [நீங்கள் ஏற்கனவே பார்வையிட்டு விட்டீர்கள். ஏனெனில் "மின்னூல் ஒன்றைத் தயார் செய்வது எப்படி ?" என்ற பக்கத்தில் அ.ந.க. பற்றிய உங்களது கட்டுரையை ஒட்டிவிட்டுச் சென்றிருந்தீர்கள் . நீங்கள் அ.ந.க. பற்றி எல்லோரும் அறிந்திட வேண்டும் என்ற ஆதங்கத்தில் செய்திருப்பதாகவே எனக்குப் படுகிறது. விஷமத்தனமாக அதனைச் செய்திருக்க மாட்டீர்கள் தானே?]
"நூலகம் திட்டத்துக்குப் பங்களிப்புச் செய்ய விரும்புவோர் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள், ஈழத்திலிருந்து வெளிவந்த நூல்கள், ஈழம் தொடர்பான நூல்கள் என்னும் வகைகளுள் அடங்கும் எந்த ஒரு நூலையும் மின்னூலாக்கலாம் ஆனால் சமகால எழுத்தாளரின் நூல்களாயின் குறித்த எழுத்தாளரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது முக்கியமானது ." என்பது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
1.
அ. முத்துலிங்கத்தின் 'வம்சவிருத்தி ', 'திகடசக்கரம் ', 'வடக்குவீதி' ஆகிய நூல்கள் 2002 அளவில் பத்பநாப ஐயரின் முயற்சியால் தட்டெழுதப்பட்டன. அ. முத்துலிங்கம் கதைகளின் pdf வடிவம் மிக அண்மையிலேயே கிடைத்தது. ஆதலால்தான் நான்கு நூல்களுமே வெளியிடப்பட்டுள்ளன.
2.
அனுமதியளித்த அ. முத்துலிங்கம், சி. சிவசேகரம், கா. சிவத்தம்பி போன்றோரின் நூல்கள் எண்ணிக்கையில் அதிகமாக வெளியிடப்பட்டதில் வியப்பு என்ன?
3
குறித்த நூல்கள் நூலகத்தில் வெளியிடப்படவில்லையென்ற குற்றச்சாட்டை எவரும் எக்காலத்திலும் முன்வைப்பது கோமாளித்தனமானது. மேற்குறிப்பிட்ட வகைகளில் அடங்கும் நூல்களை எந்த ஆர்வலரும் மின்னூலாக்கி அனுப்பினால் அது நூலகத்தில் வெளியிடப்படும். அவ்வாறு அனுப்பியும் வெளியிடப்படவில்லை என்றால்தான் குற்றஞ்சாட்டுவது நியாயமானது.
வ. ந. கிரிதரன் அவர்களே நான் உங்களை நூலகத்திற்குப் பங்களிக்க அழைக்கிறேன். (நீங்கள் ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களை நூலகம் மடலாடற்குழுவில் இணைத்துள்ளேன்.)
முதலில் நூலகம் திட்டத்தில் குறிப்பிட்ட வட்டம் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களே வெளியிடப்பட்டுள்ளன என்ற உங்கள் குற்றச்சாட்டை நீங்கள் விளக்குவீர்களா? கா. சிவத்தம்பி, எஸ். பொ., மு. த. சி. சிவசேகரம், நிலாந்தன் ஆகிய எல்லோருமே உள்ளடங்கும் அந்த நீங்கள் குறிப்பிட்ட வட்டம் ஈழத்து இலக்கியம் என்றே அடியேனின் சிற்றறிவுக்குப் படுகிறது. ஆகையால் உங்களது ஒருபக்கச் சார்பற்ற ஆழமான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
வ. ந. கிரிதரன் அவர்களே நான் உங்களிடம் பகிரங்க சவால் விடுகிறேன்.
(அ. ந. கந்தசாமியின்) மதமாற்றம், மனித மாடு போன்ற நூல்களில் ஒன்றைதானும் உங்களால் நூலகத்தில் இணைக்க முடியுமா?
நீங்கள் கேட்ட நியாயமான கேள்விக்கு நியாயமான பதிலை நூலகம் திட்டத்தில் பங்களித்துவரும் தன்னார்வலர்களில் ஒருவனாக நான் அளித்துள்ளேன். நான் கேட்டிருக்கும் நியாயமான கேள்விக்கும் நியாயமான அழைப்புக்கும் உங்களது நியாயமான பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
அ.ந.க. அவர்களின் படைப்புக்களை ஆவணப்படுத்துவதில் நீங்கள் காட்டும் ஆர்வமும் ஈடுபாடும் மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அ.ந.க. மட்டுமல்ல இன்னும் பல ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் சரியான கவனம் பெறப்படாமல் உள்ளன என்பது வருத்தத்திற்குரிய உண்மையே. அந்த வகையில் உங்களது பணி தொடர்பில் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தோழமையுடன்
கோபி.
|