திணையும் காலமும்

ஓர் ஆண்டை ஆறு பருவ காலங்களாகப் பகுத்துக் காண்பது தமிழ்நெறி. இந்தப் பகுப்பைப் பெரும்பொழுது என்பர். இது

  1. கார்
  2. கூதிர்
  3. முன்பனி
  4. பின்பனி
  5. இளவேனில்
  6. முதுவேனில்

என்னும் பருவங்கள். அதே போல ஒரு நாளையும் ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இந்தப் பகுப்பைப் சிறுபொழுது என்பர். இது

  1. மாலை
  2. யாமம்
  3. வைகறை
  4. விடியல்
  5. நண்பகல்
  6. எற்பாடு

ஆகிய ஒரு நாளுக்குரிய அறுபொழுதும் உண்டு. இதற்குச் சிறுபொழுது என்று பெயர்.

தொல்காப்பிய நெறி தொகு

தொல்காப்பியர் இந்தக் காலப்பொழுதுகளை ஐந்திணை நிலப் பாகுபாட்டோடும், ஐந்திணை மக்களின் ஒழுக்கப் பாகுபாட்டோடும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார். தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா எண் 6 முதல் 10 முடிய உள்ள 5 நூற்பாக்கள் தரும் செய்தியை இங்குள்ள அட்டவணையில் காணலாம்.[1]

திணை சிறுபொழுது பெரும்பொழுது
முல்லை மாலை கார்
குறிஞ்சி யாமம் கூதிர், முன்பனி
மருதம் வைகுறு விடியல் இல்லை
நெய்தல் எற்பாடு இல்லை
பாலை நண்பகல் இளவேனில், முதுவேனில், + பின்பனி

ஓர் ஆண்டின் 6 பருவ காலம் தொகு

பருவம் தமிழர் வழக்கத்தில் உள்ள மாதங்கள் இணையான ஆங்கில மாதங்கள்
கார் ஆவணி, புரட்டாசி சூலை பிற்பகுதி, ஆகஸ்டு, செப்டெம்பர் முற்பகுதி
கூதிர் (குளிர்) ஐப்பசி, கார்த்திகை செப்டெம்பர் பிற்பகுதி, அக்டோபர், நவம்பர் முற்பகுதி
முன்பனி மார்கழி, தை நவம்பர் பிற்பகுதி, டிசம்பர், சனவரி முற்பகுதி
பின்பனி மாசி, பங்குனி சனவரி பிற்பகுதி, பிப்ரவரி, மார்ச்சு முற்பகுதி
இளவேனில் சித்திரை, வைகாசி மார்ச்சு பிற்பகுதி, ஏப்ரல், மே முற்பகுதி
முதுவேனில் ஆனி, ஆடி மே பிற்பகுதி, சூன், சூலை முற்பகுதி

ஒரு நாளின் 6 பொழுதுகள் தொகு

பொழுது மணி
மாலை 18 மணி முதல் 22 மணி வரை
யாமம் 22 மணி முதல் 2 மணி வரை
வைகறை (வைகுறு விடியல்) 2 மணி முதல் 6 மணி வரை
காலை 6 முதல் 10 மணி வரை
நண்பகல் 10 முதல் 14 மணி வரை
எற்பாடு 14 மணி முதல் 18 மணி வரை

மேற்கோள் தொகு

  1. 5. மாயோன் மேய காடு உறை உலகமும்,
    சேயோன் மேய மை வரை உலகமும்,
    வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
    வருணன் மேய பெரு மணல் உலகமும்,
    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
    சொல்லிய முறையான் சொல்லவும்படுமே
     
    6. காரும் மாலையும்-முல்லை
     
    7. 'குறிஞ்சி,
    கூதிர், யாமம்' என்மனார் புலவர்
     
    8. 'பனி எதிர் பருவமும் உரித்து' என மொழிப
     
    9. வைகறை, விடியல்,-மருதம்
     
    10. எற்பாடு,
    நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்
     
    11. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
    முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
     
    12. 'பின்பனிதானும் உரித்து' என மொழிப
     
    13. 'இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
    உரியது ஆகும்' என்மனார் புலவர்
     
    14. திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே;
    நிலன் ஒருங்கு மயங்குதல் இல' என மொழிப-
    புலன் நன்கு உணர்ந்த புலமையோரே
     
    15. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே
     
    16. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
    ஊடல், அவற்றின் நிமித்தம் என்றிவை,-
    தேரும் காலை,-திணைக்கு உரிப்பொருளே
     
    17. 'கொண்டு தலைக்கழிதலும், பிரிந்து அவண் இரங்கலும்,
    உண்டு' என மொழிப, 'ஓர் இடத்தான' உரை
     
    18. கலந்த பொழுதும் காட்சியும் அன்ன
     
    19. முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே
    - தொல்காப்பியம் - அகத்திணையியல் - நூற்பாக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திணையும்_காலமும்&oldid=3893366" இலிருந்து மீள்விக்கப்பட்டது