திருக்குருகை மான்மியம்

திருக்குருகை மான்மியம் என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால்இயற்றப்பட்டது. [1] வாழ்த்து, பதிகம் ஆகியவற்றை அடுத்து 28 சருக்கங்களை உடையதாக இந்த நூல் இருந்தது. [2] பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழும் இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.

இந்த நூலைப் பற்றிய சில குறிப்புகள்

  • இந்த மான்மியத்தைப் பராசர முனிவர் தன் மகன் வியாச முனிவருக்குக் கூற, அவர் சுகருக்குக் கூறினார். இவ்வாறு வந்த நூலை ஆதிநாத பட்டர் என்பவர் மொழிபெயர்த்து நூலாசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயருக்குக் கூறக் கேட்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • நூல் அரங்கேற்றப்பட்ட காலம் 1548 [3]

பாடல் - எடுத்துக்காட்டு [4]

1

வாழி வாழி நானிலமும் மும் மாரியின் வளனும்
வாழி வாழி இல்லறமும் நல்லறப் பெருவனப்பும்
வாழி வாழி நாலாயிரப் பனுவல் நான்மறை நூல்
வாழி வாழி சீ பராங்குச ஆணை வைகலுமே. [5]

2

போத மேதகப் பூரணன் பூமகள்
காத வான் எனக் கண்டவர் மாளிகை
வேத வாய்மையும் மெய்த்தமிழ் வாய்மையும்
கீத வாய்மையும் கிள்ளை மிழற்றுமே. [6]

3

நாவாரவே புகழ்ந்து 'நாராயணா நம' என்று
ஓவா உரையினொடும் மண்ணீர் உரம் நனைப்ப
காவார் மலர் பறித்துக் 'கண்ணா' நின் கால் கமலம்
தூவாதார் கையினையும் கை என்று சொல்வாரே [7] [8]

அடிக்குறிப்புகள் தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 275-282. 
  2. உ. வே. சாமிநாதையர், செந்தமிழ் மாத இதழ், 1938
  3. கொல்லம் 723
  4. பொருள் விளங்குமாறு சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  5. இது கடவுள் வாழ்த்துக்கு முன்னர் இடம் பெற்றுள்ள நூலின் தொடக்கப்பாடல்.
  6. பாடல் 462
  7. சொல்வாரோ?
  8. பாடல் 1220
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குருகை_மான்மியம்&oldid=3303184" இலிருந்து மீள்விக்கப்பட்டது