தீபக்குடிப் பத்து

தீபக்குடி பத்து [1][2] என்பது ஒரு சமண நூல். 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. [3] எனக் கொள்ளத் தக்கது. பத்தும் பதிகம் தொகுப்பில் 26 நூல்கள் உள்ளன. அவற்றுள் இந்தத் தீபக்குடிப் பத்து இடம் பெறவில்லை. இதனைப் பாடியவர் ஒரு சமண சமயப் பெருமகனார். [4]

'பத்து' என்னும் தலைப்புப் பெயரைக் கொண்டு இந்த நூலை 10 பாடல்கள் கொண்டது என்பது தெளிவாகிறது. எனினும் இப்போது கிடைத்துள்ளவை ஏழு பாடல்கள் மட்டூமே. இந்த நூல் தீபக்குடி வாழ் மக்களைப் போற்றிப் பாடுகிறது. முதல் இரண்டு அடிகளில் இவ்வூர் மக்களின் அறிவுநலம் போற்றப்படுகிறது. பின் இரண்டு அடிகளில் இந்த ஊரில் வாழும் மகளிர் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் அறிவுநலம் தொகு
தீபக்குடி மக்கள் கல்வியையே பொருளாக்கஃ கொண்டவர்.
காலையும் மாலையும் நற்குணங்களை நினைத்துத் தவம் புரிவர்.
தீவினை செய்யார்
இருளில் உண்ணார்
தேன்-நறவு, ஊன் உண்ணார்
பொய், கொலை, களவு தவிர்ப்பர்
பொய்தீர் அறநூல் வழிச் செயல்படுவர்
வாமன், அருகன், பரமன் தாள் பணிவர்

இவை சமண நெறிக் கோட்பாடுகள்.

மகளிரின் அழகுநலம் தொகு
சிற்றிடையும் மகரக் குழையும் உடையவர்
குயில் கூவினால் காதலரை நினைந்து உருகுவர்
இவர்களின் கை, கால், முகம், விழி, குயம் தாமரை போன்றவை
மன்மதனுக்கு உதவுபவர்கள்
இவர்களது முலை போது, மலை, குடம், மணிமுடி போன்றவை
விழிகள் கொலைவில் போன்றவை

பெண் பிறப்பை இழிவாகப் பேசும் சமணநெறி இந்த நூலில் பெண்களை வருணிப்பது வியப்பாக உள்ளது. [5]

மேற்கோள்கள் தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 235. 
  2. கலிங்கத்துப் பரணி கோபாலையர் பதிப்பு பக்கம் 9, முகவுரை
  3. தமிழ் நாவலர் சரிதை இந்த நூலின் பாடல் ஒன்றை 'அபயன்' என்னும் மன்னனோடு தொடர்புபடுத்திக் கூறுவதால் அபயன் காலமான 12 ஆம் நூற்றாண்டு
  4. கற்பனை நலம் மிக்க கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் இதனைப் பாடினார் எனத் தமிழ் நாவலர் சரிதை கூறுவது பொருந்தாது என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்
  5. மு. அருணாசலம் குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்குடிப்_பத்து&oldid=3122860" இலிருந்து மீள்விக்கப்பட்டது