தொடர் கல்வி

சிறிதளவு கற்றவர்கள் மேலும் தொடர்ந்து கற்க எல்லா வாய்ப்புகளையும் தருகின்ற கல்வியே தொடர் கல்வியாகும். இந்திய அரசாங்கம் கட்டாயக் கல்வியாகப் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறினாலும் ஏதோ ஒரு காரணத்தால் அவா்களால் தொடா்ந்து படிக்க முடியாத சூழ்நிலையில் படிப்புப் பாதியில் நின்று விடுகிறது. இதைத் தேக்க நிலை என்பா். இவ்வாறு தேக்க நிலை ஏற்பட்ட பின்பு இரண்டு வருடமோ, மூன்று வருடமோ அல்லது அதற்கு மேலும் பல வருடங்கள் ஆன பின்பு படிக்க வேண்டும் என்று ஆசையோ அல்லது அவா்கள் செய்யும் தொழிலில் வளா்ச்சியடையக் கல்வி தேவைப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும் போது மீண்டும் தொடா்ந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் போது தொடா் கல்வி கைகொடுப்பதாக இருக்க வேண்டும். தொடா் கல்வி கற்க இந்திய அரசாங்கம் பல வழிகளில் உதவி செய்கிறது. தொடா் கல்வி கற்க ஆசைப்படுவோா் அதைப் பயன்படுத்திக் கொண்டு படிக்க வேண்டும்.

நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் உலகில் ஒவ்வொரு ஐந்தாண்டுக் காலத்திலும் அறிவுப் பெருக்கம் என்பது இரண்டு மடங்காகின்றது. இந்த நிலையில் பள்ளிக்கூடங்களில் பெற்ற அறிவைக் கொண்டு முழுவாழ்க்கையையும் வாழ இயலாத காரியம். எனவே, பொது அறிவையும், தொழிற்கல்வியையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நாம் ஒவ்வொருவரும் பள்ளிக்கல்வியைத் தொடங்கி ஒரு குறிப்பிட்ட நிலையில் முடித்துக் கொள்கிறோம். பின்பு கல்வியைப் பெற (அ) அறிவைப் புதுப்பிக்க மீண்டும் பள்ளி செல்ல முடியாது. நாம் செய்யும் வேலைகளை விட்டுவிட்டு முழுநேரத்தையும் கல்வி பயில செலவிட முடியாத நிலைதான் நிலவுகிறது. அடிப்படை எழுத்தறிவு பெற்றவர்கள் மேலும் கல்வியறிவு பெறுவதற்கும் பெற்ற கல்வியோடு ஒரு குறிப்பிட்ட துறையில் மேலும் அறிவைப் பெறுவதற்கும் தொடர் கல்விமுறை சிறந்ததாகும்.

பொது அறிவு, தொழிலறிவு, பிறதொழிலறிவு, கல்வித்தரம், பயனுள்ள பொழுதுபோக்கு என ஒரு முழு வாழ்க்கை வாழ்வதற்கான முயற்சியே தொடர்கல்வியாகும். முறைசார்ந்த கல்வி பள்ளிகளில் தரப்படுகிறது. இதற்குக் காலம், இடம், பாடம் என வரையறைகள் உண்டு. முறைசார் கல்வி ஒரு குறிப்பிட்ட எல்லையில் நிறைவு பெற்றுவிடும். ஆனால் தொடர் கல்விக்குப் பாடம், கால அளவு, இடம் போன்ற வரையறைகள் கிடையாது.

தொடர் கல்வி என்பது வாழ்க்கைமுறை, தொழில், குடும்பம், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்துவது என முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தருவதாகும். இது நாம் தினமும் படிக்கும் நாளிதழ், நாவல் முதல் இலக்கியங்கள் வரை உள்ளடக்கியதாகும். [1]

  1. கல்வி ஒப்பியல்.. சக்தி பதிப்பகம்,சிதம்பரம்.. 1994. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_கல்வி&oldid=3596655" இலிருந்து மீள்விக்கப்பட்டது