தொண்டகப் பறை

தொண்டகப் பறை என்பது பண்டைய இசைக்கருவிகளில் ஒன்று. இது குறிஞ்சி நிலமாகிய மலையில் வாழ்ந்த மக்களின் இசை என்று இலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. [1] இந்தப் பறை முழக்கத்துடன் குன்றக் குறவர் குரவை ஆடுவர். முருகு எனப்பட்ட வேலன் இதனை ஒலியோடு சேர்ந்து ஆடுதலும் உண்டு. இதில் இரண்டு வகை உண்டு. தொண்டகப்பறை என்பது உடுக்கு. தொண்டகச் சிறுபறை என்பது குடுகுடுப்பை. [2]

உடுக்கு என இக்காலத்தில் வழங்கப்படும் தொண்டகப்பறை

தொண்டகப் பறை ஒலிக்கும்போது இரவில் தினை அறுப்பவர் ஒலி கேட்பது போல இருக்கும்.[3]

அருவி ஒழுகும் மலைப்பிளவுக் கவாண் நிலத்தில் சிறுகுடிப் பாக்கத்தில் வேங்கைப்பூ சூடிக்கொண்டு தொண்டகப்பறை சீர் முழக்கத்திற்கு ஏற்ப முருகன் பெண்டிரைத் தழுவிக்கொண்டு ஆடுவது போல் அகப்பாடல் தலைவன் ஒருவன் ஆடினானாம். [4]

குரவைக் கூத்து தொண்டகச் சிறுபறை முழக்கத்துடன் ஆடப்படும். வேலன் கானவர் மூங்கில் குழாயில் மூடி விளைவித்துத் தந்த கள்ளை உண்டுவிட்டு குன்றகச் சிறுகுடி உறவினர்களுடன் இந்தப் பறை முழக்கத்துடன் குரவை ஆடினான். [5]

மேற்கோள் குறிப்பு தொகு

  1. நம்பியகப்பொருள் நூற்பா 20
  2. குடுகுடுப்பை - படம்
  3. சாரல்
    சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
    இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை
    பானாள் யாமத்தும் கறங்கும்.(குறுந்தொகை 375)

  4. கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
    தேம் கமழ் இணர வேங்கை சூடி,
    தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
    மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
    இயல் முருகு ஒப்பினை (அகநானூறு 118)

  5. பைங்கொடி, நறைக் காய் இடை இடுபு, வேலன், 190
    அம் பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு
    வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்;
    நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்:
    கொடுந் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
    நீடு அமை விளைந்த தேக் கள் தேறல் 195
    குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து,
    தொண்டகச் சிறு பறைக் குரவை அயர (திருமுருகாற்றுப்படை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டகப்_பறை&oldid=1724570" இலிருந்து மீள்விக்கப்பட்டது