நிக்கோலஸ் ஓட்டோ

ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர்
(நிக்கலோசு ஓட்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிக்கோலஸ் ஓட்டோ (Nikolaus August Otto, 1832-1891) முதலாவது நான்கு முழு இயக்க உள்ளெரி பொறியை (Four Stroke internal combustion engine) உருவாக்கிய ஜெர்மன் புத்தமைப்பாளார் ஆவார். 1876-ல் இவர் தயாரித்த உள்ளெரி பொறி தான் அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான பொறிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது.

நிக்கோலஸ் ஆகஸ்ட் ஓட்டோ
Nikolaus Otto
பிறப்பு(1832-06-10)10 சூன் 1832
ஹோல்ஸ்ஹாசென் அன் டெர் ஹைட்
இறப்பு26 சனவரி 1891(1891-01-26) (அகவை 58)
கோல்ன்
தேசியம்ஜெர்மனி
பணிபுத்தமைப்பாளர்
அறியப்படுவதுஉள் எரி பொறி

இவர் ஜெர்மனியில் உள்ள ஹால் ஷாசன் நகரில் 1882ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தந்தை இவர் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். படிப்பிலும் பிறவற்றிலும் திறமைமிக்க மாணவராகத் திகழ்ந்தார். எனினும் பொருளாதார முட்டுப்பாட்டின் காரணமாக உயர் நிலைப்பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியவில்லை. பதினாறு வயது நிறைவதற்கு முன்பாக வணிக அனுபவம் பெறும் பொருட்டு ஒரு மளிகைக் கடையில் பணிக்கமர்ந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர் ஃபிராங்ஃபர்ட் நகரில் ஒரு அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். அதன்பின் ஒரு பயண நிறுவனத்தில் பணியாற்றினார்.

அச்சமயத்தில் ஏட்டியன் லென்வார் என்பவர் முதன்முதலாகக் கண்டுபிடித்த உள்ளெரி என்ஜின் பற்றிக் கேள்விப்பட்டார். அதைப்பற்றி மேலும் அறிவதிலும் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமும் முனைப்பும் ஏற்பட்டது. லென்வாரின் என்ஜினைத் திரவ எரிபொருளால் இயங்கச் செய்தால் அதை ஒரு புகை போக்கியுடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதுபற்றி தீவிரமாகச் சிந்தித்தார். அப்படிச் செய்தால் அந்த என்ஜினை வேறுபல காரியங்களுக்கும் பயன்படுத்தி பலனடையலாம் எனக் கருதினார். இச்சிந்தனையின் அடிப்படையில் அவர் மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் விளைவாக விரைவிலேயே உள்ளெரி என்ஜினில் காற்றையும் பெட்ரோலையும் கலக்கச் செய்யும் ஒரு புதுவகை அமைப்பை (Carburetor) உருவாக்கினார். இதற்கான புத்தாக்க உரிமைக்கு (Patent) விண்ணப்பித்தார். ஆனால், இதே மாதிரியான உள்ளெரி என்ஜின் வேறு பலராலும் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறி புத்தாக்க உரிமை மறுக்கப்பட்டது.

என்றாலும் ஆட்டோ மனத்தளர்ச்சி கொள்ளவில்லை. லென்வார் கண்டுபிடித்த உள்ளெரி என்ஜினையே தான் விரும்பிய வண்ணம் மாற்றியமைப்பதில் தீவிமாக ஈடுபட்டார். விரைவிலேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டு லென்வாரின் என்ஜினை மாற்றியமைத்ததைக் காட்டிலும் முற்றிலும் புதிய என்ஜினை உருவாக்குவதே நலம் என முடிவு செய்து அதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதன் விளைவாக இரண்டு முழுச் சுழற்சியால் இயக்கப்பட்ட லென்வாரின் என்ஜினைவிட முற்றிலும் வேறுபட்ட முறையில் நான்கு சுழற்சியால் இயங்கத்தக்க வகையில் பொறியை வடிவமைத்தார். இதிலும் தீப்பற்ற வைக்க வேண்டிய சிரமங்கள் எழுந்தன. இதனால் நடைமுறைச் சிக்கல் சில எழக்கூடும் எனக் கருதினார். எனவே, இதற்கும் மாறுபட்ட முறையில் காற்று மண்டல என்ஜினை (Atmospheric Engine) உருவாக்கினார். இரண்டு முழுச் சுழற்சியால் இயங்கும் இதை வாயுவால் இயக்க முடிந்தது. இதற்கான புத்தாக்க உரிமை பெற்ற ஆட்டோ யூஜின் லாங்கன் என்பாரின் பொருளுதவியோடு தொழிற்சாலை தொடங்கினார். தொடர் ஆராய்ச்சியின் விளைவாக செப்பமான இரண்டு முழு இயக்க என்ஜினை உருவாக்கி உற்பத்தி செய்தார். இது பாரிசில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சியில் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது. இதன் சிறப்பு பலராலும் பாராட்டப்பட்டது. விற்பனையும் விரைந்து பெருகியது.

எனினும் நான்கு முழு இயக்க என்ஜின் தயாரிப்பிலேயே நாட்டமுடையவராக இருந்தார். இடைவிடாத பெருமுயற்சியின் விளைவாக தீப்பற்ற வைப்பு முறையொன்றைக் கண்டுபிடித்தார். அதன் பயனாக நடைமுறைக்கு உகந்த நான்கு முழு இயக்க என்ஜினை உருவாக்கினார். விரைவிலேயே அதன் புத்தாக்க உரிமையையும் (Patent) பெற்றார். அவர் கண்டுபிடித்த உள்ளெரி என்ஜினின் அடிப்படையிலேயே இன்றளவும் முழு இயக்க உள்ளெரி என்ஜின்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அப்பொறிகளும் இன்றுவரை ஆட்டோவின் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.[1]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலஸ்_ஓட்டோ&oldid=3050469" இலிருந்து மீள்விக்கப்பட்டது