நிர்வாகத் தீர்ப்பாயங்கள்

நிர்வாகத் தீர்ப்பாயங்கள் நிர்வாகத்துறையால் ஏற்படுத்தப்படுகின்றன. இவை அரசு குழுமங்கள். இதன் உறுப்பினர்கள் நிர்வாகத்துறையினால் நியமனம் செய்யப்படுகின்றனர். நிர்வாகத் தீர்ப்பாயம் சுதந்திரமாகவும், நடுநிலைமையாகவும் நீதித் தீர்ப்பு வழங்குகின்றது.

சில நிர்வாகத் தீர்ப்பாயங்கள் தொகு

இந்தியாவில் வருமான வரித் தீர்ப்பாயம்,விற்பனை வரித் தீர்ப்பாயம் போன்று பல நிர்வாகத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தீர்ப்பாயங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டன. எனவே சிறப்பு நடைமுறைகளே அங்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் உள்ள தீர்ப்பாயங்கள் உயர்நீதி மன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவையாக உள்ளன. தீர்ப்பின் மீது சீராய்வு செய்ய உயர், உச்சநீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.

தீர்ப்பாயத்தின் பணி தொகு

தீர்ப்பாயம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, நீதிமன்றம் போன்று செயல்படும். ஆனால், உண்மையில் இவை நீதிமன்றம் அன்று. தீர்ப்பாயங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் நிறைய வேற்றுமைகள் உள்ளன.

தீர்ப்பாயங்களில் நீதிபதிகள் அல்லது அதற்குத் தகுதி உடையவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய சில அதிகாரங்களைக் கொண்டு நீதி வழங்குவார்கள். இந்தத் தீர்ப்பாயம் எவரையும் முன் தோன்றுமாறு கட்டாயப்படுத்தவோ, பத்திரங்களையோ, பிரமாணப் பத்திரம் மீது சான்று பெறவோ ஆணைக்கு அனுப்பவோ அதிகாரம் பெற்றுள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 193, 195, 228 படியும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 345, 346ன் படி தீர்ப்பாயங்கள் உரிமையியல் நீதிமன்றங்களாகக் கருதப்படும். இந்திய சாட்சிச் சட்டம் மற்றும் விசாரணை முறைச் சட்டங்கள் முன் தீர்ப்புத்தடை, முன் தீர்ப்பு முறை சட்டப் பொது கோட்பாடுகள் முரண்தடை முதலியன தீர்ப்பாயங்களில் தீர்ப்புகளுக்குப் பொருந்துவதில்லை. இவையனைத்தும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கேப் பொருந்தும். தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் நீதித்தன்மை வாய்ந்தனவே. ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்புகள் அல்ல.